ஆசானின் கற்பும் இங்கிலாந்துப் பாராளுமன்றமும்

ஒரு வாரமாக மனம் நன்றாக இல்லை. பொய், பொறாமை, வீண் புகழ்ச்சி விரும்பிகளின் சூழ்ச்சிகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறேன். நேற்று அது உச்சத்தை அடைந்திருந்தது.

நேற்று மதியம்போல் Slm Hanifa அவர்களின் முகப்புத்தகத்தில் அவர் மட்டக்களப்பின் முதுசமும், எனது ஆசானும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னைநாள் அதிபருமான பிரின்ஸ் காசிநாதர் அவர்களுடன் உரையாடும் ஒரு ஒளிப்படத்தினைக் காணக்கிடைத்தது. ஆனால் அப்போது மனம், அதில் ஒன்றுமளவிற்கு நிம்மதியாய் இருக்கவில்லை.

நேற்றைய பின்மாலைப் பொழுதும் இரவும் மிகவும் வேதனையானவை. இறுதியாக நான் நேரம் பார்த்தபோது அது 01.45 என்று காட்டிக்கொண்டிருந்தது. எப்போது தூங்கினேன் என்பது எனக்குத் தெரியாது.

இன்று காலையுணவருந்தியபோது Slm Hanifa அவர்கள் புதியதொரு ஒளிப்படத்தினை முகப்புத்தகத்தில் தரவேற்றியிருந்தார்.

அங்கு ஒரு சிங்கம் கர்ச்சித்துக்கொண்டிருந்தது.

1976ம் ஆண்டு தை மாதத்தில் இருந்து இன்றுவரை என்மனதில் பதிந்திருக்கும் ஒரு பெரும் குரல் அது. பிரின்ஸ்சேர் என்னும் எங்கள் அதிபரின் குரல். “நீ ஒரு சமூகப்பிராணி“ என்பதை இதயத்தில் அறைந்து அனுப்பிய மனிதர் அவர். இன்றும் இதயத்தை ஊடுருவிப்பாயும் குரல் அவருடையது. இப்போது அவருக்கு வயது 92 என்று நினைக்கிறேன்.

மட்டக்களப்பில் போட்டியிட்ட த.வி. கூ செயலர் அமிர்தலிங்கத்தையே வென்று, மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினராக, இலங்கைப் பாராளுமன்றம் சென்று, அங்கு இலங்கைப் பாராளுமன்றத்தின் பேச்சாளராகவும் கடமையாற்றிவர் அவர்.

அவர் அந்த ஒளிப்படத்தில் ஒரு கதை சொல்கிறார்.

ஒருமுறை இலங்கையில் இருந்து இங்கிலாந்திற்கு இலங்கை அரசின் பிரதிநிதிகள் செல்கிறார்கள். இவரும் இலங்கைப் பாராளுமன்றப் பேச்சாளர் என்ற ரீதியில் அவர்களுடன் செல்கிறார்.

இதற்கிடையில் நானும் ஒரு சிறுகதை சொல்லவேண்டியிருக்கிறது.

எனது அதிபரின் அதிபர் ஆங்கிலேயர், பெயர் Rev. C A Cartman. அவர் தனது அந்திமக் காலத்தில் லண்டனில் வசித்துவருகிறார். அவரைத் தேடியலைந்து பல சிரமங்களின்பின் அவரைச் சென்று சந்திக்கிறார் எனது ஆசான். அவரும் இவரை அடையாளம் கண்டு, மறுநாள் மாலை தேநீர் விருந்திற்கு அழைக்கிறார்.

அன்று மாலை, இங்கிலாந்தின் பாராளுமன்றப் பேச்சாளர், எனது அசானை தொலைபேசியில் அழைத்து ‘நாளை மாலை இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் சார்பில் உங்களை இங்கிலாந்து பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வமான தேனீர்விருந்திற்கு அழைக்கிறேன்’ என்றபோது இவர் இப்படிப் பதிலளிக்கிறார்.

‘உங்கள் அழைப்பிற்கு நன்றி. எனது ஆசான் Rev. C A Cartman லண்டனில் வாழ்கிறார். அவர் நாளை மாலை தேனீர்விருந்திற்கு அழைத்திருக்கிறார். அவரிடம் நிட்சமாக வருவேன் என்று வாக்குறுதியளித்திருக்கிறேன். எனவே என்னால் வரமுடியாது, மன்னியுங்கள்.

மனம், உடல் சோர்ந்திருந்த காலைப்பொழுதில் பார்த்துக்கொண்டிருந்த ஒளிப்படத்தில் எனது பேராசான் இதனைக் கூறியபோது கலங்கியிருந்த எனது மனது தெளிந்தது. புத்துயிர் பெற்றேன்.

கற்பு என்பதற்கு சொல் என்றும் ஒரு பொருள் உண்டல்லவா? சொற் சுத்தம் கொண்ட எனது ஆசான் அச் செய்தியினூடாக பல விடயங்களை புரியவைத்திருந்தார், எனக்கு.

- வலியவருக்கும் அஞ்சாது உண்மை பேசு
- யாராகினும் நிமிர்ந்து நேரிடையாய் பேசு.
- வாழ்வதற்காக சோரம்போகாதே.
- எவராகினும் கொடுத்த வாக்கினை மீறாதே. அது அறம் மீறுவதாகும்.

92 வயதிலும் எனக்குக் கற்பிக்கும் என்னாசான் தாழ்ப்பணிந்தேன்.
என் தவம்செய்தனை உன்னை ஆசானாய் பெற.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்