பிரசவவலியுடன் நான்கு நாட்கள்

ஒரு சில நாட்களுக்கு முன் 4 நாட்கள் வலி தாங்கமுடியாததால் வைத்தியசாலையே வாழ்க்கை என்றானது. காரணம் சிறுநீரகக்கல். பல ஆண்டுளாகவே நாம் நெருங்கிய நண்பர்கள். பல லீட்டர் நீர் குடிக்கவைக்கப்பட்டேன். படங்கள் எடுத்து ஆராய்ந்த வைத்தியர் இரண்டு சிறுநீரகத்திலும் கல் இருக்கிறது. நீ வைத்தியசாலையில் தங்கியிருக்கவேண்டும் என்றார். சிறுநீரகக்கலின் வலி எப்படியானது என்பதற்கு மகப்பேற்றுவலியையொத்தது என்று ஒரு ஒப்பீடு உண்டு. எனக்கு மதியமும் இரவும் வலியெடுத்தது. தாதியர்கள் மாத்திரைகள் தந்தாலும் அது அடங்க மறுத்தது. இறுதியான அருமருந்து ஊசி. நான் ஊசியை தவிர்க்க முயன்றதன் காரணம் உங்களுக்கு இறுதியில் புரியும். ஆனாலும் வலியின் அகோரம் தாங்கமுடியாமல் உறுண்டு பிரண்டுகொண்டிருக்கும்போது தாதி “இப்போதாவது, ஊசி குத்துவதற்கு அனுமதிக்கிறாயா“ என்பார். நானும் முடியுமானவரையில் தாங்கிவிட்டு “சரி போடுங்கள் என்பேன்“ அந்த அற்புதமான சுபநேரத்தில் தாதி இப்படிச் சொல்வார். “குப்புறப்படுத்து, காற்சட்டை பட்டியை சற்று இழக்கிவிடுங்கள்“ காற்சட்டையின் பின்புறம் சற்று கீழே இழுக்கப்படும். “இப்போது ஊசிபோடும் இடத்தை கழுவுகிறேன்“ “இப்போது ஊசி குத்தப்போகிறேன்“ என்னும் வார்த்தைகள் எனது செவிப்பறையில் விழுந்து மூளைக்குச் சென்றடைவதற்கு முன் எனது அழகிய அந்தப்புறத்தில் ஒரு குத்து விழுந்திருக்கும். எனது ஆழகிய மேட்டுப்பகுதிகள் இரண்டிலும் குத்தியபின் அவர் சென்றுவிடுவார். எனது அந்தப்புற மேட்டில் வலிப்பதுபற்றி அவர் கவலைப்படுவதில்லை. ஒரு ஆண்தாதி தனது முழுப்பலத்தையும் அந்த ஊசியில் காட்டியது நியாயமற்றது. இப்படி ஒரு நாளைக்கு இரு முறை என நான்கரை நான்கு நாட்கள் கடந்துபோயின. இரு தினங்களுக்கு முன் வீடுவந்தேன். நேற்று நண்பரின் வீட்டு விழா ஒன்றில் நினறிருந்த என்னைக் கண்ட அன்பர் ஒருவர்... ஒரு கதிரையை இழுத்துப்போட்டார். அதில் உட்காறுமாறும் அன்புடன் வேண்டிக்கொண்டார். அத்தனை ஊசிகளின்பின்பு நிமிர்ந்து படுக்கவே முடியாது அல்லாடுகிறேன். எவ்வாறு நான் உட்காருவேன்? அது சரி எத்தனை ஊசி என்று யாராவது எண்ணிப்பார்த்தீர்களா?

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்