விழலுக்கு துலாமிதிக்கிறோமா?


கலை கற்பதற்கும், ரசனைக்குமுரியது. ஒரு படைப்பு பொதுவெளியில் முன்வைக்கப்படும்போது அதுபற்றிப் பேசவும், உரையாடவும் விமர்சிக்கவும்படுகிறது.
விமர்சனங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படும்போது அவற்றிற்கான எதிர்வினைகளும் பொதுவெளியிலேயே முன்வைக்கப்படவேண்டும். மூடிய நான்கு சுவர்களுக்கிடையில் அல்ல. அப்போதுதான் அவை படைப்பு முன்வைக்கப்பட்ட சமூகத்தைச் சென்றடைகின்றன.
படைப்புகள் சமூகப்பிரக்ஞையுடன் உருவாக்கப்படவேண்டும் என்பது அடிப்படை அறம்.
அது கவனிக்கப்படவில்லை அல்லது போதாமையாக உள்ளது என்று பொதுவெளியில் சுட்டப்படுவதை மறுத்துரைக்கும் உரிமை படைப்பாளிக்கு உண்டு. இதுவும் பொதுவெளிக்குரியதொன்றே.
ஒரு படைப்பின்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது, அப்படைப்பாளி தனது சுயவிமர்சனத்தினுாடாக அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை, சமூகம்பற்றியபுரிதலில் மேலதிக சிந்தனையைச் செலுத்தியிருக்கவேண்டும், படைப்பானது இன, மத, பால் மேலாதிக்கச்சிந்தனையிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறது அல்லது சமூகச்சிந்தனையின்றி செதுக்கப்பட்டுள்ளது என்பதை உணரும்போது அவைபற்றிய தமது கருத்துக்களை பொதுவெளியில் முன்வைப்பதே விருத்திமனப்பான்மையுடைய படைப்பாளியின் செயற்பாடாக இருக்கமுடியும்.
அதுவே படைப்பாளியின் உண்மைத்தன்மையையும் பக்குவத்தினையும் படைப்பையும் காலங்கடந்தும் பேசவைக்கும் செயல்.
நான்கு சுவர்களுக்கிடையே நடைபெறும் சம்பாசணைகளின்போதும் தனிப்பட்ட உரையாடல்களையும் அடிப்படையாகக்கொண்டு 'அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டேன்“ என்பதும் அதையே பொதுவெளியில் பேச மறுப்பதும் தனது சமூகப்பிரக்ஞையற்ற, மேலாதிக்கச்சிந்தனையுடைய படைப்புக்களை இலகுவாகக் கடந்துகொள்ளும் நடவடிக்கைகள் மட்டுமல்ல பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக்கொள்ளும் சுயவிமர்சனமற்ற முயற்சிகளே இவை.
விமர்சனத்தின்மீதான படைப்பாளியின் விளக்கம், ஒரு தனிப்பட்ட மனிதனுக்கானதல்ல. அது படைப்பு முன்வைக்கப்பட்ட பொதுத்தளத்திற்குரியது. எனவேதான் பொதுதளத்தில் பதிலளிப்பது அவசியமாகிறது.
எமக்கென்றாரு தரமுள்ள கலையிலக்கியத்தளத்தை உருவாக்குவோம் என்று மேடைகளிலும் ஒலிவாங்கியைக் காணும்போதெல்லாமும் உரக்கப்பேசுவதாலும் கவிதைபாடுவதாலும் அங்கதங்களை எழுதுவதாலும் பயனில்லை.
நாம் அதை தெளிவான சிந்தனையோடு வடிவமைக்கவேண்டும். வடிவமைப்பில் பங்குகொள்ளவேண்டும், கற்பதற்கும் உரையாடுவதற்கும் விசாலமான உரையாடல்களை உருவாக்கவேண்டும்.
விசாலமான சிந்தனையின் அடிப்படையில் இயங்கும் கருத்தாடுதலுக்கான வெளியை உருவாக்கி, அதனை சுயாதீனமாக இயங்கவிடுவதும் அதேவேளை வியாபாரிகளிடம் அவதானமாக இருப்பதும் அவசியமாகிறது.
இதிலெல்லாம் பங்குகொள்வதை மறுத்தபடியே ஈழத்தமிழ் கலையிலக்கியத்தினை வளர்க்கவேண்டும் என்பதெல்லாம் விளலுக்கு துலா மிதிக்கும் நடவடிக்கைகளே.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்