”நண்பேன்டா குடும்பம்”

என் நண்பருக்கும் சக்கரைவியாதி. எனக்கும் சக்கரைவியாதி.

நண்பரின் பாரியார் ஒரு வைத்தியர். நண்பருக்கு இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்த வைத்தியருக்கும் எனக்கு சக்கரை வியாதி இருப்பது தெரியும்.

நண்பர் கொழும்பில் இருந்து தேன்குழல் கொண்டுவந்திருக்கிறாா். ”வா தேத்தண்ணி குடிப்போம்” என்று அழைத்தார்.

அரை மணிநேரத்தில் அவரது சோபாவில் குந்தியிருந்தேன்.

நண்பர் இலங்கையில் இருந்து கொணர்ந்த இனிப்பு வகைகளை மேசையில் அடுக்கினார். தேனீர் எடுத்துவந்தார்.

அவர் வருவதற்கிடையில் நான் 4 தேன்குழல்களை விழுங்கியிருந்தேன்.

நண்பர் வாயை நாக்கினால் சுற்றி நக்கியபடி, தேன் குழலை எடுத்து வாய்கருகில் கொண்டுசெல்லும்போது ஒரு அசரீரீ கேட்கிறது இப்படி
”அப்பா! தேன் குழல் வந்திருக்கிறவருக்கு மட்டும்”

குரலின் உரிமையாளர்....நண்பரின் உரிமையாளர்.

நண்பர் கையில் எடுத்த தேன் குழலை என்னிடம் நீட்டினார். நான் விழுங்கினேன்.

வந்திருப்பவன் இருந்தால் என்ன செத்தால் என்ன என்னும் நண்பரின் பாரியாரின் பெரிய மனதை அவதானித்தீர்களா?

இதைத்தான் ”நண்பேன்டா குடும்பம்” என்பது

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்