அம்மாவா கொக்கா



அம்மாவின் அட்டகாசங்கள் - 03


******


நோர்வேக்கும் அம்மாவுக்கும் நேரவித்தியாசம் 4.30 மணிநேரங்கள். நான் தூங்குவதோ சாமத்தில். அதாவது இலங்கை நேரப்படி ஏறத்தாள காலை 6 மணியாகிவிடும்.

நேற்றுத்தான் அப்பாவின் அழகிய ராட்சசியிடம் வந்தேன்.

இரவு 10 மணிக்கு அம்மா மின் விளக்குகளை அணைத்துவிட்டு குந்தியிருந்தார். ‘அம்மா, நீங்க நித்திரை கொள்ளுங்கள்’ என்றேன். ‘இல்லை, நீ படு. நான் பிறகு படுக்கிறேன்’ என்றார்.

அம்மாவிற்கு நோர்வேயின் நேரவித்தியாசத்தை மிக ஆறதலாக விளக்கிக் கூறினேன்.


‘பறவாயில்லை, களைத்திருப்பாய். போய் படு’ இது அம்மா.


சரி, நானும் படுக்கிறேன் என்றுவிட்டு இரண்டு மின்விசிறிகளை இயக்கியபின், 180 பாகையில் சரிந்தேன். அம்மாவும் தூங்கிப்போனார்.


கையில் தொலைபேசியுடன் நேரம் போனது. 12 மணிக்கு அம்மா எழும்பிவந்தார்.

‘இன்னும் படுக்கலியா’

‘இல்லை’

அம்மாவிற்று நோர்வேயின் நேரவித்தியாசத்தை மீண்டும் மிக ஆறதலாக விளக்கிக் கூறினேன்.

‘அப்ப நீ நித்திரை கொள்ளமாட்டாயா?’ என்றார்.

‘அம்மா, நித்திரை வரும்போது படுக்கிறேன்’ என்றேன்.

அம்மாவிற்கு மனம் ஆறவில்லை.

‘ராசா, உனக்கு ஏதும் சுகயீனமா, ஏதும் பிரச்சனையா, பிள்ளைகளின் நினைப்பா, நுளம்பு கடிக்கிறதா’ என்று தனது சந்தேகங்களைக் கேட்டார்.

அருகே இருத்தி நேரவித்தியாசத்தை மீண்டும் விளங்கப்படுத்தினேன். முதல் இரண்டு மூன்று நாட்கள் இப்படி இருக்கும் இது வழமை என்றேன்.

தலையை ஆட்டினார். கண்ணில் சந்தேகம் தெரிந்தது.

இப்படி மணிக்கொருதடவை வந்து கேட்டார். நானும் மணிக்கொருதடவை அம்மாவிற்று நோர்வேயின் நேரவித்தியாசத்தை மீண்டும மீண்டும்; மிக ஆறதலாக விளக்கி விளக்கி களைத்துப்போனேன்.

காலை 5 மணிக்கு அம்மா எழும்பிவரும்போது எனக்கு நித்திரை வந்தது. அம்மா நித்திரை வருகிறது. படுக்கப்போகிறேன் என்றேன்.

ஆத்தாவுக்கு கோபம் வந்தது.

என்ன கெட்ட பழக்கம் இது? எங்கே பழகினாய்? காலை 5 மணிக்கு படுக்கிறது கூடாது. எழும்பு, குளி, சாமியைக் கும்பிடு, தேத்தண்ணி போடுகிறேன் என்று சூடாகினார்.

எனக்கு 5 மணி என்பது சாமம் என்பதை எனதன்பு ரௌடிக் கிழவிக்கு எப்படி புரியவைப்பேன்?

ஒருவாறு 8மணிபோல் தூங்கிப்போனேன்.

“மதியம் பத்துமணியாகிவிட்டது எழும்பு“ என்று நச்சரித்து நச்சரித்து என்னை எழுப்பி விட்டிருக்கிறாள் கிழவி.

என்ட ஒஸ்லோ முருகா.... என்னைக் காப்பாத்தய்யா.

#அம்மாவின்_அட்டகாசங்கள்

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்