அம்மா ஒரு அற்புதமான கதைசொல்லி

அம்மாவின் அட்டகாசங்கள் - 04
******
ஒவ்வொரு முறையும் அம்மாவிடம் வரும்போது ஒரு புத்தகத்தோடு வருவதுண்டு.

அன்னா கரீனினா, ராமகிருஸ்ணன் கதைகள் என்று அளவில் பெரிய புத்தகங்களாக இருந்திருக்கின்றன அவை.

அப்புத்தகங்களைக் கண்டதும் ”எனக்குத் தா. நான் வாசிக்கவேண்டும்” என்று வாங்கிக்கொள்வார்.

இம்முறை ஓரான் பாமூக் இன் “பனி“ எடுத்துவந்தேன்.
இன்று அம்மா அதைக் கண்டார், எடுத்தார், தலைப்பை இருதடவைகள் வாசித்தார், நோபல்பரிசு பெற்ற நாவல் எனக்குத்தா, வாசிக்கவேண்டும் என்றிருக்கிறார்.

”முதல் தந்த புத்தகங்களை வாசித்துவிட்டீர்களா” என்றேன்.

“என்ன புத்தகம், எப்போ தந்தாய்?“ என்று மிகப்பிரபல்யமான கேள்விகளால் மடக்கினார்.

ஒரு அலுமாரினுள் பல புத்தகங்களுக்கு கீழ் இருந்து அன்னா கரினீனாவையும், எஸ். ராவையும் மீட்டு எடுத்து அம்மாவிற்கு காட்டினேன்.

அதையும் தா வாசிப்போம் என்று வாங்கி வைத்திருக்கிறாள் கிழவிச் செல்லம்.

தங்கைக்கும் எனக்கும் வாசிக்கும் நல்நோய் தொற்றியது அம்மாவினால்தான். உண்ணும்போதும் அவருக்கு வாசிக்கவேண்டும். இப்போதும் காலையில் குறைந்தது இரண்டு பத்திரிகைகளை மேய்வார்.

தம்பிக்கும் எனக்கும் அவர் வாசித்த கதைகள் ஏராளம். அம்மா அருமையான ஒரு கதைசொல்லி. அழகாக வாசிப்பார்.

அம்மாவை இப்போது முதுமையும், மறதியும் பற்றிக்கொண்டிருக்கிறது.

அம்மாவை ஓரிடத்தில் இருத்தி அவருக்கு வாசிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

அம்மாவுக்கு நான் இப்படி கிறுக்குகிறேன் என்று யாரோ வத்திவைத்துவிட்டார்கள். “நீ எழுதியதைக் காண்பி, வாசிக்கவேண்டும்“ என்றிருக்கிறார்.

அம்மாவின் வாசிப்புப் பழக்கத்திற்கு முடிவு எனது பத்திகளை வாசித்துத்தான் வரவேண்டும் என்று விதியிருக்கிறதோ என்னவோ?

#அம்மாவின்_அட்டகாசங்கள்

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்