Oslo முருகனின் இன்னொரு திருவிளையாடல்.

இன்றுகாலை வீட்டில் இருந்த புறப்பட்டபோது எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. நீல வானம். 16 பாகை வெய்யில். சுகமான மெதுகாற்று. வீதியில் அழகிகள். எக்சேட்ரா எக்சேட்ரா.
போயிருந்த இடத்தில் அனிச்சையாக காற்சட்டைப் பையினுள் கையைவிட்டேன். மனது திடுக்கிட்டது. வீட்டுத்திறப்பைக் காணவில்லை. திறப்புடன் 64gb usb pendriveம் அதில் எனக்கு அவசியமான ஆவணங்களின் backupஉம் இருக்கிறது. அதுவும் மாயமாக மறைந்துவிட்டிருந்தது.
வாகனத்தில், நண்பரின் வீட்டில், கடையில், நடந்துபோன வழியில் என்று எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. சுந்தரமூர்த்தி நாயனாரும் உயிரோடு இல்லை.
வீட்டு ஜன்னலை திறந்துவிட்டு வந்தேனோ என்பதும் நினைவில்லை. அப்படியென்றால் ஜன்னலால் உள்ளே பாயலாம்.
வாகனத்தை வீட்டிருகில் நிறுத்திவிட்டு ஜன்னல் திறந்திருக்கிறதா என்று பார்த்தேன். ஜன்னல் மூடியிருந்தது.
எப்படியோ கதவினை உடைக்கவேண்டும். வானத்தினுள் இருந்தபடியே வீட்டு உரிமையாளருக்கு அறிவித்தேன். புதிய கதவின் செலவு உன்னுடையது என்றார் அன்பாக. மறுக்க முடியுமா?
திறப்பு செய்யும் கடைக்கும் தொலைபேசினேன். கையை விரித்தார்கள்.
கதவு உடைப்பதா... ”பொறு வருகிறேன் அது சின்ன வேலை” என்றபடியே வருவதாக அறிவித்தான் ஒரு சுத்தத் தமிழன்.
நான் தமிழன் வரும் வரையில் தொலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தேன்.
தமிழன் வந்ததும் வீட்டுக்குச் சென்றோம்.
திறப்பு கதவில் தொங்கிக்கொண்டிருந்தது.
கதவு உடைக்க வந்த தமிழன் வீட்டுக்குள் இருந்த சந்தோச நீர் போத்தல் ஒன்றையும், நேற்று இராப்பிச்சையாக கிடைத்த 5 ரோல்ஸ்இல் 3ஐயும் எடுத்துக்கொண்டு போயிருக்கிறான்.
ஒரு சிறு துரும்பையேனும் அசைக்காமல் ஒரு புதிய கொன்யாக் போத்தலை துாக்குவது அதர்மம்..
என்ட Oslo முருகா .. இது நல்லா இல்ல ஆமா

1 comment:

  1. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete

பின்னூட்டங்கள்