வாழ்வின் அர்த்தங்கள்

ஒரு பின்மாலைப் பொழுது. சற்று அறிமுகமான ஒருவர் நோர்வே வந்திருந்தார்.

அவரது பால்யத்து நண்பர் நோர்வேயில் வாழ்கிறார். அவரிடம் அழைத்துப்போய்கொண்டிருந்தேன். அவர்களுக்கு அறுபது வயதிருக்கலாம்.

அவர்கள் ஒருவரை ஒருவரை கண்டதும் "வாடா வா வா .. எப்படி இருக்கிறாய்? என்று விசாரித்தபடியே அமர்ந்து பேசத்தொடங்கினார்கள். நான் கைத்தொலைபேசியை நோண்டத்தொடங்கினேன்.

நாம் அங்கு அதிகமாக 30 நிமிடங்களே நிற்பது என்று ஒப்பந்தம்.

சிறுநேர உரையாடலுக்கு நண்பர் வருகிறார் என்பதால் விஸ்கியும், பியரும் மேசையில் இருந்தது. மிக்சர், முட்டை என்று உணவுவகைகளும் இருந்தது.

”வா வா நேரமில்லை... கெதியா தொடங்குவம்” என்றார் வீட்டுக்காரர்.

என்னோடு வந்தவர் எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை.

வீடுக்கார அக்கா ”இவங்க ரெண்டுபேரும் சோர்த்தால் விடியும்” என்று கூறி எனது வயிற்றில் புளியைக் கரைத்தார்.

வாகனம் ஒடுவதால் நான் விஸ்கியையே பியரையோ தொடமுடியாது.

விஸ்கிப்போத்தல் என்னைப்பார்த்து நக்கலாக ” ஏலுமென்றால் தொடு பார்ப்போம்” என்று கூறிச் சிரிப்பதுபோல் உணர்ந்தேன்.

நேரம் ஒரு மணித்தியாலத்தை கடந்து, இரண்டு, மூன்று மணித்தியாலங்களைத் தொட்டது.
 
70ம் ஆண்டுகாலத்துக் கதைகள், அவர்களது பல்கலைக்கழகக் கதைகள், குடும்பக் கதைகள், காதற்கதைகள், பேராசியர்களுடனான மோதல்கள் என்று பல பல கதைகளை இருவரும் ஆள்மாறி ஆள் எனக்கு சொன்னார்கள்.

இடையிடையே நான் சொல்கிறேன். நீ வாயை மூடு.. ஒரே நீ தான் கதைக்கிறாய், நீ அதை மறந்துவிட்டாய் என்று சிறுபிள்ளைகள்போன்று சண்டைவேறு.

ஒருவாறு புறப்படும் நேரம் வந்தது.

இருவரை ஒருவர் பரஸ்பரமாக ”கனக்க குடிக்கப்படாது என்ன” என்று அறிவுத்தினார்கள். கையை பல தடவைகள் குலுக்கிக் கொண்டார்கள்.
நண்பரின் மனைவியிடம் அன்பாக விடைபெற்றுக்கொண்டார் நான் அழைத்துவந்தவர்.

குளிசைகளை போடு, சிகரட் கனக்க குடிக்காதே, திரும்பவும் கவிதை எழுது இப்படி பரஸ்ரம் அறிவுரைகள்.

”சரி வா... நீ வெளிக்கிட முதல் சேர்ந்து ஒரு சிகரட் குடிப்பம்”

நடு இரவு. முழு நிலா, வெளியே குளிர். பல்கணியில் நின்றபடியே பெரிதாய் சிரித்துக் கேட்கிறது. அக்கா ஓடிச் சென்று... ” அக்கம் பக்கத்தில ஆட்கள் படுக்கிறதில்லையோ” என்கிறார்.

மீண்டும் வாசலுக்கு வருகிறார்கள். ”மச்சான் பொயிட்டுவாறன்” என்கிறார் நண்பர்.

ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு முதுகில் பெரிதாய் பல தடவைகள் தட்டிக்கொள்கிறார்கள்.

மெளனமாய் அணைத்தபடியே நிற்கிறார்கள். அப்படியே ஓரிரு நிமிடங்கள் கரைந்துபோகின்றன.

என்னால் பேசமுடியவில்லை. ஒருவித அன்பின் பிணைப்பில் நானும் கட்டுண்டு கிடக்கிறேன். என் கண்களும் கலங்கிப்போகின்றன. வீடு முழுவதும் மௌனம். பெரு மௌனம். அக்காவும் அவர்களைப் பார்த்தபடியே நிற்கிறார்.

ஒருவரை ஒருவர் மற்றையவரின் மொட்டையில் முத்தமிட்டு ”கவனமடா” என்று கூறி விடைபெற்றுக்கொண்டார்கள்.

எனது நண்பர் வாகனத்தினுள் ஏறிக்கொண்டார். வாகனம் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது.

அவன் என்ட பெஸ்ட் ப்ரெண்ட் ... அவனைப்போன்று ஆசிரியன் இல்லை.. அவன் ஒரு ஜீனியஸ் என்றார்.

அவர் கண்கள் கலங்கியிருந்தது. அவர் மனம் பழைய நினைவுகளில் மூழ்கிக்கிடக்கிறது என்று புரிந்துகொண்டேன்.

1 comment:

  1. "குளிசைகளை போடு, சிகரட் கனக்க குடிக்காதே, திரும்பவும் கவிதை எழுது இப்படி பரஸ்ரம் அறிவுரைகள்." எனச் சிறப்பாக வழிகாட்டும் பதிவு.

    ReplyDelete

பின்னூட்டங்கள்