ஒரு தந்தையின் நாட்குறிப்பு

இரவு நேரங்களில் எனது குழந்தைகளை தூங்கவைப்பது என்பது பல சம்பிரதாயங்களைக்கொண்டதாக இருந்தது.

8 மணிக்கு கட்டிலில் இருக்கவேண்டும். எனவே 7.30 அளவில் குளியலறைக்குள் அழைத்துப்போய் பல் மினுக்கும்போது ஆரம்பிக்கும் யார் முதலில் குளிப்பது என்ற பிரச்சனை. ஒரு நாளைக்கு ஒருவர் என்று பிரச்சனையை தீர்த்துக்கொள்வேன். சில வேளை இருவரும் ஒரேநேரத்தில் குளித்தால் ” அடியேய் குளித்தது காணும், வாங்கடீ வெளியில” என்று நான் கெஞ்சி, அவர்கள் மிஞ்சி அங்கு ஒரு திருவிழாவே நடக்கும்.

ஈரத்தினை துடைத்து, நனைந்த தலைமுடியினை காயவைத்து, கிறீம் பூசி, ஓடிக்கொலோன் இட்டு, படுக்கைஉடை அணிவித்து, நீண்ட அவர்களது தலைமுடியினை சிக்கு எடுத்து, அழகாக இரட்டைப்பின்னலிட்டு முடிக்கும்போது அத்தனை அழகாக மாறியிருப்பார்கள். 

எனக்கு தனிப்பின்னல், இரட்டைப்பின்னல், குதிரைவால் இப்படி பலவிதமாக அவர்களின் தலைமுடியினை பின்னவும், கட்டவும் தெரிந்த காலம் அது.
அதன்பின் அவர்களுடன், நாளைய உடை எது, காலுறை எது, தலைச் சோடனை எது என்று உரையாடி அவற்றை எடுத்துவைத்தபின் ஒருத்தி முதுகில் ஏறிக்கொள்ள, மற்றையவளை கைகளால் தூக்கிச் செல்வேன்.

தங்களை கட்டிலில் எறியச்சொல்லிக் கேட்பார்கள். மெதுவாய் எறிவேன். கல கல என்ற சிரிப்பினைக் கேட்டபடியே, மின்விளக்கினை நிறுத்தியபின், அவர்களை அணைத்தபடியிருக்க நாம் உரையாடத்தொடங்குவோம்.
இன்றைய நாள், நாளைய நாள், என்று உடையாடல் நகர்ந்துகொண்டிருக்கும்போது, கொட்டாவிவிட்டபடியே பெருவிரலைச் சூப்பியபடி ”அப்பா கதை” என்பாள் சின்னவள்.

இருவருக்கும் எனக்குத் தெரிந்த அனைத்துக் கதைகளையும் கூறிமுடித்திருந்த காலத்தில் புதிது புதிதாய் கதைகளை இயற்றினேன். பாட்டி வடை சுட்ட கதையுடன், சிங்கமும் முயலும் கதையை இணைத்து சற்று விறுவிறுப்புக் கலந்து கூறுவேன். சாகசக் கதைகளில் இருவருக்கும் அலாதியான பிரியம் இருந்தது. சொன்னதைச் செய்யும் சுப்பன் கதையை அவர்கள் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்கள்.

நான் எந்தக் கதையைக் கூறினாலும் அல்லது அவர்கள் தூங்குவதற்கு எதைப் பாடினாலும் முழுமனதுடன் இரசித்து அனுபவித்தவர்கள் அவர்கள் இருவர் மட்டுமே.

அதிகமாக என் நெஞ்சிலேயே தூங்கிப்போகும் இளையவளை மெதுவாய் இறக்கிவைத்ததும்... அக்காள் காலை நீட்டுவாள்: அவளது காலை நீவியபடியே நான் இயற்றிய பாடலைப் பாடிக்கொண்டிருப்பேன். அவளும் தூங்கிவிட்டாள் என்பதை சீரான அவர்களது மூச்சின் ஒலி அறிவிக்கும்.

தலைக்கு முன் விழுந்திருக்கும் முடியினை காதிற்கு பின்புறமாய் நகர்த்திவிட்டு, தலைமுடியினை கோதி ஆளுக்கொரு முத்தமிட்டு இருவரில் ஒருவரை அணைத்தபடி நானும் தூங்கிப்போவேன். பேரின்பமான நேரங்கள் அவை.

முத்தவள் தூங்கிப்போனால் மறுநாள் காலைவரை பிரச்சனையே இருக்காது.
இளையவள் அப்படி இல்லை. அப்பா என்று கடுமையாக நாலைந்து தடவை அழைப்பாள்... நான் நித்திரையில் இருந்து மீண்டு

”என்னய்யா” என்பேன்.

” உஷ்ஷ் .. குறட்டை விடாதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்” என்பாள்.

”சரி” நீங்க படுங்கோ என்பேன்

”அப்பா, காலைத் தடவு” என்று காலை என் நெஞ்சில் போடுவாள். காலை முகர்ந்து முத்தமிட்டபின் மெதுவாய் நீவி விடுவேன்.

சற்றுநேரத்தில் இருவரும் தூங்கிப்போவோம். மறுபடியும் அவள் என்னை எழுப்பும் வரையில்.


1 comment:

  1. அருமையான பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete

பின்னூட்டங்கள்