சுபநேரத்தில் வருகைதந்த போலீஸ்

இன்று  ஒஸ்லோ நகரத்து ட்ராம்ப் வண்டியின் பின்பகுதியில் குந்தியிருந்தேன். எனக்குப் பின்னால் கதவுகள் இருக்கவில்லை. வண்டியும் மனிதர்களால் நிரம்பிவழியவில்லை.

எனது இருக்கைக்கு சமாந்தரமான இருக்கையில் நான்கு இளையோர் இருந்தனர். பார்த்தால் 17 - 18 வயதிருக்கும்.

ஒருவன் என்னிலும் அதிகமான, இருட்டின் நிறத்தை கொண்டிருந்தான். பார்த்தால் எனது ஆபிரிக்க உடன்பிறப்புக்களின் நாடுபோல் இருந்தது. அதாவது சோமாலி லான்ட். மற்றையவன் பாக்கிஸ்தான். மூன்றாமவன் நோர்வே நாட்டவன். நான்காமவன் அவுஸ்திரேலிய கறுப்பினத்தவர்களைப்போல இருந்தான். நால்வரும் உலகத்தின் நான்கு கண்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். வட, தென் அமெரிக்கர்களை அங்கு காணவில்லை. 

இளசுகளல்லவா, மிகவும் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடிபடியே இருந்தார்கள். நானும் ரசித்துக்கொண்டிருந்தேன், முன்னாலிருந்த ஒரு குழந்தையை.

திடீர் என்று நான்கு கண்டங்களும் போர் அற்ற ஆப்கானிஸ்தான்போன்று அமைதியாயின.

என்ன விடயம் என்று ஆராயுமுன் என் முன்னே டிக்கட் பரிசோதகர் நின்றிருந்தார். எனது டிக்கட்ஐ கேட்டார். கொடுத்தேன். நன்றி கூறி திருப்பித்தந்தார்.

பின்பு கண்டங்களை நோக்கித் திரும்பினார். நால்வரும் சன்னலுக்கு வெளியே புதினம் பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம். டிக்கட் பரிசோதகரை கவனிக்கவில்லையாம்.

டிக்கட் பரிசோதகர் சற்று செருமினார். கண்டங்களுக்கு கண்டம் ஆரம்பித்தது.
பசங்கள் திரும்பியே பார்க்கவில்லை.

பரிசோதகர் ஒரு கறுப்பினத்தவர். சாதாரண உடையிலேயே வந்திருந்தார்.
பசங்களைப் பார்த்து நான் டிக்கட் பரிசோதகன். இதோ எனது அடையாள அட்டை. உங்கள் டிக்கட்டுக்களை காட்டுங்கள் என்றார்.

அவர்களில் மூவர் நாங்கள் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றார்கள்.
ஒருவன் மட்டும் டிக்கட்ஐ கொடுத்தான்.

பரிசோதகர் அந்த டிக்கட்டை பரிசோதிப்பது போன்று நடித்தபடியே நீங்கள் எங்கே படிக்கிறீர்கள் என்றார்.

பாடசாலையின் பெயரைக் கேட்டார்

பாடசாலையின் பெயர் வந்தது.

ஒரே வகுப்பு நண்பர்கள் என்றால் ஒன்றாய் திரிவது மகிழ்ச்சிதானே என்றார் பரிசோதகர்.

"ஆமா ஆமா" என்பதுபோல ஆமோதித்தார்கள்.

அவர்களைவிட்டு விலகிச் சென்ற பரிசோதகர். வேறு சிலரை பரிசோதித்தார்.
இப்போ இளசுகள் மீண்டும் மகிழ்ச்சியாய் தங்களை மறந்து இருந்தார்கள்.
பரிசோதகர் திடீர் என்று கண்டங்களை நோக்கி வந்து மிகக் கடுமையான குரலில் நீங்கள் எத்தனையாம் ஆண்டு பிறந்தீர்கள் என்றார்.

1997 என்று ஒரு கண்டம் தடுமாறிக் கூற
(நோர்வேயில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிக்கட் எடுக்கவேண்டும்)

ஒருவன் முன்பு டிக்கட் வைத்திருந்தவனின் டிக்கட்டை வாங்கி நீட்ட..

மற்யைவர்கள் நாங்கள் 2000ம் ஆண்டு என்று கதை விட...

பரிசோதகர் கடுமையாகியபோது

கண்டங்கள் அவரை மரியாதைகுறைவாக பேச..

பரிசோதகர் வழியை அனுமார்போன்று அடைத்து, வாக்கி டாக்கியில் ஏதோ மந்திரம் சொல்ல..

அடுத்த தரிப்பில், சுபநேரத்தில் போலீஸ் ட்ராம்ப்க்குள் ஏறியது.
அப்புறமென்ன மூவருக்கு டிக்கட் இல்லாது பயணித்ததற்கான அபராதம் 800 குறோணர்கள் (120 டாலர்கள்). அரச ஊழியரை நால்வரும் அவமதித்ததால் போலீஸ் வழக்கு.

நமக்கு, எழுத ஒரு கதை. உங்களுக்கு வாசிக்க ஒரு கதை

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்