அம்மா ஒரு மந்திரவாதி

அம்மா ஒரு மந்திரவாதியாக இருக்கவேண்டும். அல்லாவிட்டால் எவ்வாறு அவர் எனது மனநிலைகளை இவ்வளவு நுணுக்கமாய் அறிகிறார்?

எனக்கு, இந்த கணிணியுகத்திலும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் உரையாடிய பின்பும், மாதத்திற்கு ஒரு கடிதம்போடும் ஒரே ஒரு ஜீவன், அப்பாவின் அழகிய ராட்சசி தான்.

கடந்த ஒரு மாதமாக எனது மனம் மிகவும் சோர்ந்திருக்கிறது. தனிமையின் தார்ப்பர்யம் ஒவ்வொரு மார்கழிமாதமும் என்னை அலைக்கழிக்கும். இந்த மார்கழியும் அதற்கு விதிவிலக்கல்ல.

இன்று, எனது அறையினை சற்று தூய்மைப்படுத்தியபோது கண்ணில்பட்டது ஒரு கடிதம். அச்சுப்பதித்தது போன்ற எழுத்து. அது யாருடையது என்று கூறத்தேவையில்லை. என் மனதிலும் உயிரிலும் கலந்துபோன அம்மாவின் முத்து முத்தான கையெழுத்து. அக்கடிதம் புரட்டாதி மாதம் அனுப்பப்பட்டிருந்தது. இன்றுவரை நான் அந்தக் கடிதத்தை திறந்து வாசிக்கவில்லை.

81 வயதிலும் எவ்வாறு அவர் இவ்வளவு அழகாக எழுதுகிறார் என்று நான் நினைப்பதுண்டு. அத்தனை அழகான கையெழுத்து எங்கள் அம்மாவின் கையெழுத்து. கடிதத்தை கையில் எடுத்தபடியே உட்கார்ந்துகொண்டேன்.

வெள்ளைநிற கடிதஉறை. அதில் என் பெயரும், விலாசமும் எழுதப்பட்டிருக்கிறது. மனது பெரிதாய் அடித்துகொள்கிறது...
வெளிச்சத்தில் கடிதத்தினை தூக்கிப்பிடித்துப் பார்த்து, அந்தக் கடிதத்தினை கிழிக்கின்றேன். உள்ளே ஒரு வாழ்த்து அட்டை இவ்வாறு ஆரம்பிக்கிறது.

For you, Dear son!
மறுபக்கத்தை திருப்புகிறேன். அதில் அம்மா இவ்வாறு எழுதியிருக்கிறார்...
அன்பு நிறைந்த சஞ்சயனுக்கு!
இன்றும் எப்பவும், சிறந்த குறைவற்ற அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
சுகம், சந்தோசம், மனஅமைதி நிறையவே பெறுவாயாக.
அன்புள்ள அம்மா.
என்றிருந்தது
.
இந்த கடிதம் எனக்கு புரட்டாதி 30ம் திகதிக்கு முன் வந்திருக்கவேண்டும். ஆனால் நான் அதனை இன்றுவரை திறந்துபார்க்கவில்லை. ஏன்? அக் கடிதத்தை ஏன் இன்று நான் திறந்துபார்க்கவேண்டும்?
அதிலும், மனதளவில் நான் நொருங்கிப்போயிருக்கும் இன்றைய நாளன்று,
அந்தக் கடிதம் என் கண்களுக்கு ஏன் தென்படவேண்டும்.... ?

அதனை நான் திறந்துபார்க்கிறேன். அங்கு அம்மா என் மனதுடன் உரையாடுகிறார்....... அவர் இப்படிக் கூறுகிறார்....
"சுகம், சந்தோசம், மனஅமைதி நிறையவே பெறுவாயாக"

வாழ்க்கையில், சில கேள்விகளுக்கு பதில் இல்லை. அது போன்றதே ......
ஏன் இதுவரை நான் அந்தக் கடிதத்தை திறந்து வாசிக்காதிருந்தேன் என்பதும், இன்று நான் அக் கடிதத்தினை வாசித்தேன் என்பதும்.

தாய் உயிரைக் கொடுப்பவள் மட்டுமல்ல.... வாழ்நாள் முழுவதும் அதை சுமந்து திரிபவள் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்....

அம்மாவின் மடியில் விழுந்துகிடந்து ஓவென்று கத்தி அழவேண்டும்போலிருக்கிறது....

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்