சனிப்பெயர்ச்சி படு அமோகம்

இன்று ”தர்ம அடியில்” இருந்து மயிரிழையில் தப்பினேன்.
மேட்டர் இதுதான்.

நான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதோ, இடம்பெயர்வதோ, அரச போக்குவரத்துச் சாதனங்களை நம்பித்தான்.
 
எனது அருமை நண்பரொருவர் வீதியில் வழுக்கிவிழுந்து, காலை படுபயங்கரமாக முறித்துக்கொண்டதால், அவருக்கு உதவுவதற்காக, அவர் தனது பச்சை நிறமான வாகனத்தை (கார்) என்னிடம் தந்திருக்கிறார்.

இப்போது என்னைக் கடந்துபோகும் அரச போக்குவரத்துச் சாதனங்களை நான் ஒரு நக்கல் பார்வையுடன், நண்பரின் பச்சைநிற காரில் கடந்துகொள்கிறேன்.

இன்று மாலை ஒரு இடத்தில், நண்பரின் பச்சைநிறக் காரை ஒரு வீதியில் நிறுத்திவிட்டு, எனது வேலைகளை முடித்தபின், ஏறத்தாள 3 மணிநேரத்தின் பின் மீண்டும் காரை நிறுத்திய இடத்திற்கு வருகிறேன்.

கார் வெள்ளையாய் பனிபடிந்துபோய் இருக்கிறது. என்னடா இது, இப்படி பனி படிந்திருக்கிறதே என்று நினைத்தபடியே காரின் கதவினுள் திறப்பைபோட்டு திறக்கமுயற்சித்தேன். குளிரின் காரணமாக திறப்பு உள்ளே செல்லவில்லை.

இது நண்பரின் கார்தானா என்ற சந்தேகம் வந்தது. அதற்குள் இப்படி பனி டிந்துவிட்டதா எனறு சந்தேகமும் வந்தது. கோயிலை சுற்றிவருவதுபோன்று காரை மூன்றுமுறை சுற்றிவந்தேன்
.
கார் பச்சைநிறம்தான். அதே வடிவம், அதே இனம், அதே மொடல்.

சற்றுநேரம் திறப்புடன் போராடுகிறேன். அருகில் இருந்த தொடர்மாடி வீட்டில் இருந்து ஒருவர் என்னை பார்த்தபடியே இருக்கிறார்.

அவரைப் பார்த்து சரியான குளிர். கார் திறப்பு உள்ளே செல்லவில்லை என்றேன்.

அதுதான் பார்த்துக்கொண்டிருக்கிறேனே என்றார் அவர்.

சற்று யோசித்தவர்... என்னைப் பார்த்து இப்படிக் கூறினார்.
”திறப்பு உள்ளே போகாது”

நான் ஙே என்று முழுசியவாறு ”ஏன்” என்றேன்.

”அது எனது கார், உனது கார் இன்னும் சற்று முன்னே 3 கார்களுக்கு அப்பால் நிற்கிறது பார், உனது திறப்பை அங்கே போடு, கார் தன்பாட்டில் திறக்கும்” என்றார்.

அண்ணலும் நோக்கினேன், நண்பரின் ராசாத்தி, பனி படியாமல், செக்சியாக என்னை நோக்கினாள்.

சனிப்பெயர்ச்சி படு அமோகம்...

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்