இலக்கியத்தில் வாழ்பவர்

அவர் 1970 களின் நடுப்பகுதியில் எங்கள் மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கற்பித்தவர் என்பதைக்கூட நான் பின்னாளிலேயே அறிந்துகொண்டேன். அவரின் மகன் எனது வகுப்புத்தோழன். அவன், இவரின் மகன் என்பதும் பின்னால் வந்த ஓரு நாளிலேயே அறியக்கிடைத்தது.

இவ்வருடம் ஊருக்குச் சென்று எனது பாடசாலையின் முன்னைநாள் அதிபருடன் உரையாடியபோது பலரையும் நினைவூட்டி உரையாடிக்கொண்டிருந்தோம். அதிபர், தானாகவே இவரை நினைவூட்டி ”மிக முக்கிய மனிதர்” என்று அடையாம்காட்டியதும் இவரையே.

அவர் எனக்கு 6ம் 7ம் வகுப்புக்களில் தமிழ் கற்பித்திருக்கலாம்.அது என் நினைவில் இல்லை. எனது தமிழாசான்கள் லீவு எடுத்த ஒரு நன்னாளில் அவர் எனக்கு தமிழ் கற்பித்திருக்கலாம்.அதற்கான சந்தர்ப்பங்கள் மிக அதிகம்.ஆனால் இதுவும் என் நினைவில் இலலை.

சில ஆண்டுகளுக்கு முன்னான அழகியதொரு நாளில் ஓருதடவை அவருடன் ஒருமுக்கிய விடயம் காரணமாக உரையாடியிருக்கிறேன். கிழன்ற சிங்கத்தின் குரல். அனுபவமான வார்த்தைகள், அழகு தமிழ், இதுவே அவர். அவருடனான எனது உறவு ஒரே ஒரு தொலைபேசி உரையாடல் மட்டுமே.

மித்ரவை உனக்கு தெரியுமா? என்றார். ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் பெயரில் புத்தரசோகம் இழையோடிக்கிடந்தது. பெயர் நினைவில் இருக்கிறது. முகம் நினைவில் இல்லை என்றேன். மறுபுறம் அமைதியாய் இருந்தது சில கணங்கள்.

இவ்வளவுதான் அப்பெரும் மேதையுடனான எனது உறவு.. இருப்பினும் அவரைப்பற்றி பலர் கூறக்கேட்டிருக்கிறேன். பலர் எழுதி வாசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து செயற்பட்டவர்கள் அவரைப்பற்றி கூறக்கேட்டிருக்கிறேன். பழகும் பாக்கியம் கிடைக்கவில்லை
கட்டாயம் சந்திக்கவேண்டும் என்ற இலக்கிய ஆளுமைகளில் இவரும் ஒருவர்.

இனி எங்கள் எஸ். போ அய்யா இல்லை.

வாழ்க்கை என்னிடம், நான் உன்னிஸ்டப்படி நடப்பவனல்ல என்று கூறியபடியே நடந்துகொண்டிருக்கிறது. நான், அதன் பின்னே நடந்துகொண்டிருக்கிறேன்.

எஸ். போ அய்யாவுக்கு எனது அஞ்சலிகள்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்