வாழ்க்கையை அழகாக்க ஒரு பின்னல் போதுமானது.

மகள்கள் இருவரும் மீண்டும் என்னுடன் தங்கியிருக்கிறார்கள். இளையமகள் வரும்போதே ”அப்பா எனது தலைமயிரைப் பாருங்கள்” என்றபடியே வந்தாள்.
சரி, ஏதோ நிறம் அடித்திருக்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவளின் தலைமயிர் இடியப்பத்தைப்போல் சிக்கலாய் இருந்தது.

”என்னடி, இப்படி இடியப்ப சிக்கலாய் இருக்கிறதே” என்றேன்.

முகத்தை சுளித்தபடியே ”நீங்க சிக்கு எடுக்கணும். But நோகக்கூடாது” என்று கட்டளையிட்டாள்.


ஒரு கதிரையில் இருத்தி சிக்கு எடுக்க ஆரம்பித்தேன்.

”நீ விடு, உனக்கு ஒன்றும் தெரியாது” என்றபடியே வந்தாள், கிழவி.

எனக்கு கடுப்பாகிவிட்டது. ” அம்மா, அங்கால போங்கோ” என்றேன்.

கிழவி புதிதாய் ஒரு சீப்புடன் வந்து எனக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்து சிக்கெடுக்க ஆரம்பித்தாள்.

ஒரு முறாய்ப்பு முறைத்தேன்.

”சரி, நீ சிக்கு எடு, நான் பின்னிவிடுகிறேன்” என்று சமாதானத்திற்கு வந்தார்.

”நீங்கள் ஒரு பின்னல், நான் ஒரு பின்னல். யார் வடிவா பின்னுறது என்று பார்ப்போம்” என்றேன்.

”மொட்டையரின்ட பந்தயத்தை பாரன்” என்பதுபோல் என்னை ஏளனமாகப் பார்த்தபடிய, சரி என்றாா்.

அரைமணிநேர சிக்கெடுப்பின் பின்பு அம்மா அழகாகப் பின்னி ரிப்பனும் கட்டிவிட்டார்.

அம்மா பின்னிய பின்னலை கண்டதும் எனக்கு உள்ளூற உதறலெடுத்தது.

முன்பெல்லாம் தினமும் நான்தான் இரண்டு மகள்களுக்கும் பின்னுவேன். அது ஆறு வருடங்களுக்கு முன். அப்பா நோகாமல் தலை இழுத்து பின்னுவார் என்ற பெருமை எனக்கிருந்தது.

இளையவளின், தலைமயிரை முறுக்கி முறுக்கி இறுக்கமாகப் பின்னினேன். மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வந்தது.

”எங்க பார்ப்பம்” என்று வந்தாள் கிழவி.

வந்தவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

”எப்படியடா இவ்வளவு வடிவா பின்னுகிறாய்”என்று பாராட்டினார்.

சற்று நேரத்தின்பின் அக்காவிடம் தங்கை ”அப்பா இப்பவும் வடிவா பின்னுறான்” என்றாள் செல்லத் தமிழில்.

இந்த இரண்டு பாராட்டுக்களும் என்றை காற்றில் தூக்கிப்போகின்றன.

வாழ்க்கையை அழகாக்க ஒரு பின்னல் போதுமானது.
------------------------------------------

இந்த வருட விடுமுறையின்போது நடந்த கதை

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்