நாட்டாமை தீர்ப்பை மாற்று


 நேற்று முன்தினம் எனது மூத்தமகள் என்னுடன் நிலத்தில் தூங்குவதாகவும், சின்னச் சிறுக்கி கட்டிலில் தூங்குவதாகவும் ஒப்பந்தமாயிற்று.

நான் தூங்கியும் போனேன். சாமம் எழும்பியபோது மகளைக் காணவில்லை. தங்கையின் கட்டிலில் இருவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

அன்பாக அக்காளையும் தன்னுடன் தூங்க அனுமதித்திருக்கிறாளே என்று மனது பெருமைப்பட்டது.

மீண்டும் தூங்கியும்போனேன்.

காலை பெருஞ் சத்தம் ஒன்று கேட்டது. என்னடா விடயம் என்று விசாரித்தால், தங்கை ஒரு உதை விட்டிருக்கிறாள். அக்காள் கட்டிலால் கீழே விழுந்துவிட்டாள்.

வழக்காடு மன்றத்திற்கு தலைவன் நானல்லவா. வழக்கு விசாரிக்கப்பட்டது.

இன்று கட்டிலில் தூங்குவது எனது முறை. இவ ஏன் இங்க வரணும் என்று செல்லத்தமிழில் வழக்காடிய அழகில் மயங்கிப்போனேன். தீர்ப்பு தங்கைக்கு சார்ப்பாக இருந்ததனால் அக்காள் இப்படிச் சொன்னாள்.

”அப்பா! உங்களாலதான் இவ்வளவு பிரச்சனையும்” என்றாள்

ஙே.... என்று முழுசியபடியே ...”எப்படியம்மா” ... என்று கேட்டேன்.

”நேற்றிரவு நான் படுத்திருந்து வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு ”குருவி” வந்து எனது கையில் நின்றது. என்றாள்.

”என்னது குருவியா” என்று கேட்டேன்.

”You know Appa, அது like a big butterfly so உங்களை எழுப்பினேன் நீங்க a dead man மாதிரி படுத்திருந்தீங்க, எழும்பல, அதுதான் அவட கட்டிலில் படுத்தேன்”, என்றபடியே நாட்டாமை தீர்ப்பை மாற்று என்பதுபோல கடுமையாய் என்னைப் பார்த்தாள்.

சரி சரி .. இப்ப அப்பம்மாட கட்டில்ல படுங்க என்று சமாளித்தபடியே வந்து அந்த "like a big butterfly"ஐ தேடினேன்.

மகளின் பாயின் அருகே ஒரு சற்று பெரிய ஈசல் கிடந்தது. அதுதான் அந்த "like a big butterfly".

பயமின்றி பாம்பைத் தூக்கி படம் எடுக்கிறாள். நேற்று ஒரு முதலைக்குட்டியை கையில் வைத்தும் படம் எடுத்தாள். 100மைல் வேகத்திலும் அதிகமாக தண்ணீரில் விரைவு ஸ்கூட்டர் ஓடுகிறாள். யாரும் ஒருமாதிரி பார்த்தால் ஆங்கிலத்தில் படுதூஷணத்தில் திட்டி சண்டைக்கு போகிறாள்....
பெருமையாயும், மகிழ்ச்சியாயும் இருக்கிறது.

ஆனால், எறும்புக்கும், ஈசலுக்கும் பயப்படுவதைதான் ஒரு அப்பனாக தாங்கமுடியாதிருக்கிறது.

----------------------------------
இவ்வருட விடுமுறையின்பொது நடந்த கதை

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்