நாலாம் பிறையும் நாயலைச்சலும்

பல மாதங்களின் பின் நேற்று நிலக்கீழ் தொடரூந்தில் ஏறினேன். வெளியே இலையுதிர்காலத்தின் இருளும், குளிரும் குடிவந்திருந்தது.
நான் உட்கார்ர்ந்திருந்த ஆசனத்திற்கு பின்புறமான ஆசனத்தில் இரு ஆன்டிகள். ஆம் இலங்கைத் தமிழ்ப்பெண்கள். சற்றே வயது முதிர்ந்தவர்கள். நாற்பதுகளின் இறுதியில் இருக்கலாம் அவர்களின் வயது. மெதுவாய் பேசுவதை விரும்பாதவர்களாய் இருக்கவேண்டும்.

அவர்களின் உரையாடல் எனக்கு மிக நன்றாகக் கேட்கிறது.
ஊர்க் கதைகள், சரஸ்வதிப் பூசை, சுகயீனங்கள், சீட்டு என்று கதை சென்றுகொண்டிருந்தது.

வெளியே வானத்தில் பிறை மிக அழகாக இருப்பதைக் கண்ட ஒரு ஆன்டி மற்றவரிடம்:

”அங்க பாருங்க பிறை எவ்வளவு வடிவா இருக்குது”

மற்றையவர் பிறையைப் பார்க்காமலே ” நாசமாப் போச்சு, நாலாம் பிறை என்றால் நாயலைச்சல், அத பார்க்காதீங்கோ”

மற்றையவர் பலமாய் சிந்தித்தபின் தொடர்ந்தார்..
.
”எங்கட வீட்டிலயும் ஒரு நாலாம்பிறை இருக்கு”

”யாரைச் சொல்கிறீங்க”

”வேற யார்? என்ட மனிசன்தான்

அப்பிடியென்றால் என்ட வீட்டிலயும் நாலாம்பிறை இருக்கு... அது வெளியிலபோனா லேசில வீட்ட வராது. அலை அலையென்று அலைஞ்சு போட்டுதான் வரும்.

இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாகள்.
..
..
எனது காதுக்குள் வடிவேலுவின் ”ஆஹா” கேட்டது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்