மேதாவிகளின் நல்லிணக்கப் பேச்சுக்கள்


நோர்வேயில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை "இலங்கையின் வலிமிகுந்த சமாதானப் பாதை” என்னும் தலைப்பில் ஒரு உரையடலை அரச ஆதரவு நிறுவனமான Utviklingsfondet நடாத்துகிறது.

இலங்கை அரசும் இன்றைய நிலையும், நல்லிணக்கமும் என்னும் தொனியைக்கொண்ட தலைப்பிலும் அங்கு உரையாடப்படவிருக்கிறது.

இதன்போது அங்கு தமிழர்கள் சார்பில், தமிழர்களின் அரசியலில் ஆழமான, பரந்த அரசியல் அறிவுடைய பலரும் நோர்வேயில் இருந்தபோதும் Utviklingsfondet நிறுவனம் தமிழர்களின் ஒரு குழுவினையும், அக் குழுவினரிடம் இருந்து அரசியலில் பரீட்சயம் இல்லாத ஒரு நபரை உராயாடலின் தமிழர்தரப்பு பேச்சாளராக அழைத்திருக்கிறது.

அத்துடன் அங்கு, அக் குழுவின்சார்பில் பங்குபெறுபவர் அரசியல் களத்தில் இன்றுவரை ஈடுபாடாத ஒருவர்.

அவரது கல்வித் தகமைகள் பற்றியோ, பொதுச் சேவைகள் பற்றியோ எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் சமூத்திற்கான  பல சேவைகளை செய்துவருபவர். அவரில் பெரு மதிப்பு கொண்டவர்களில் நானும் ஒருவன். எனது கருத்தில் உள்ள உண்மைத்தன்மையை அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய பெருந்தன்மை அவரிடம்  உண்டு என்றே நம்புகிறேன்

ஆனால் அரசியல் என்று வரும்போது இவரைவிட மிக மிக ஆழந்த அரசியல் அறிவும், 30 வருடத்திலும் மோலாக  அரசியல், போராட்ட அனுபவமும் உள்ளவர்களும், அரசியல் அறிவுள்ள பேராசியர்களும் பலர் இங்கு இருக்கிறார்கள் என்பதை நோர்வே அரசு நன்கு அறியும். அவர்களது நிறுவனங்களும் அதை நன்கு அறியும்.

இருப்பினும், குழுவாதங்கள் நோர்வேயில் உச்சத்தில் இருப்பதையும் அது இவ்வாறான நிறுவனங்களுக்குள்ளும் ஊடுருவுகிறது என்னும் சமிக்ஞையையே மேற்கூறப்பட்ட விடயம் காட்டுகிறது என்றே கருதவேண்டியிருக்கிறது.

தவிர நல்லிணக்கம் பற்றி உரையாடும்போது அதை தமிழர்களும் நோர்வேஜியர்களும் மட்டுமே உரையாடுவதால் என்ன நிகழப்போகிறது?
  • இலங்கை அரச‌ை எங்கள் கருத்துக்கள் சென்றடையுமா? (அது அவர்கள் செவிமடுப்பார்களா இல்லையா என்பது வேறுவிடயம்)
  • அல்லது நோர்வேயில் உள்ள ம‌ற்றைய இலங்கைச் சமூகங்களை அது சென்றடையுமா? 
  • அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றுவதற்கு ஆகக் குறைந்தது நோர்வே பாராளுமன்ற அமைச்சர் ஒருவரின் செயலாளார் கலந்துகொண்டிருந்தாலாவது (உரையாடலில்)  எமது கருத்துக்கள் சற்று மேலிடத்துக்கு செல்லலாம் என்று நாம் நினைத்துக்கொள்ளலாம். அதுவும் அங்கு இல்லை.

இது பற்றி நான் Utviklingsfondet இல் இந்த உரையாடலுக்கு பொறுப்பானவரிடம் ஏன் ஏனைய சமூகத்தவர்களை அழைக்கவில்லை என்று கேட்டபோது,  வேறு சமூகத்தவர்களை  அழைப்பதானது சென்சிடிவானது என்று பதிலளித்தார். 

இப்படியான பதில் Utviklingsfondet இன் பெயரையும் இலங்கை பற்றிய அவர்களது பார்வை பற்றியும் பலத்த கேள்வியை எழுப்புகிறது.

அவரின் கருத்தினை  சற்று ஆராய்வோமேயானால் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே மேசையில் உட்கார்ந்து பேசவே மாட்டாாகள் போன்றிருக்கிறது. அவர்களை உரையாடலுக்கு அழைப்பதே பிரச்சனையானது என்று  அவர்கள் நினைப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.

தமிழர்களும் நோர்வேஜியர்களும் ஒன்றாகக் கூடியிருந்து ”ஆம், இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சனைகள் இருக்கின்றன” என்ற கருத்தை மீண்டும் மீண்டும் கூறி, தமிழர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வழங்கினால் இலங்கையில் நல்லெண்ணம் வளரும் என்று நினைக்கிறார்களோ என்று பயமாகவிருக்கிறது.

Utviklingsfondet க்கு நோர்வேயில் உள்ள தமிழர் தரப்பு பற்றிய அறிவே மட்டப்படுத்தப்பட்டிருக்கும்போது, அதைவிட அதிக ஆழமுள்ள செயற்பாடுகளை எதிர்பார்க்கமுடிமா என்னும் கேள்வியும் இங்கு எழுகிறது.

சென்சிட்டிவான விடயங்களை உரியவர்களுடன் உரையாடாது ஒரு சாராருடன் மட்டும் உரையாடுவதனால் என்ன பயன் என்பது எனக்குப் புரியவில்லை.  அப்படியான சென்சிடிவான உரையாடலை உரிய நபர்களுடன் நடாத்தியிருந்தால் சமூகத்திற்கு அதனால் சிறு பயனாவது கிடைத்திருக்கலாம். ஆனால் இந்த உரையாடலால் என்ன பயன் கிடைக்கும் என்று எனக்குப் புரியவில்லை.

இந்த உரையாடலுக்காக செலவளிக்கப்பட்ட நேரத்தினை, ஒரு சிங்களவருக்கோ அல்லது முஸ்லீம் இனத்தவருக்கு எமது பிரச்சனைகளை விளங்கப்படுத்தவோ, அல்லது உரையாடவோ பயன்படுத்தினால் கிடைக்கும் பயன் மிக அதிகம் என்பேன் நான்.

அல்லது புலிகளுடன் இணைந்து  இலங்கையில் நடந்த மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை உலகிற்கு வெளிப்படுத்தும் மிதவாத சிங்களவர்களையாவது இந்தக் கூட்டத்திற்கு அழைத்து அவர்கள் மூலமாக சிங்களவர்கள் தமிழர்களின் பிரச்சனைகளை உணர்நதுகொள்கிறார்கள் என்பதை பல தமிழர்கள் முன்னிலையில் பேசவைத்திருந்தால் அது நல்லிணக்கத்திற்கு  ஒரு சிறு பங்களிப்பையாவது வழங்கியிருக்கும்.

இப்படியான  உரையாடலை Utviklingsfondet  என்னும் பொறுப்புமிக்க நிறுவனம் நடாத்துவது ஏன் என்று புரியாவிட்டாலும்,  நோர்வேவாழ் ஒரு தமிழ்க் குழுவினர் தங்களது காய்நகர்த்தல்களை சிறப்பாக செய்திருக்கின்றனர் என்றே கருதுகிறேன். அதனாலேயே தமிழர் தரப்பில் ‌உரையாடலில் கலந்துகொள்ள வேறு ஒருவரும் உள்வாங்கப்படவில்லை என்பதையும் புரியக்கூடியதாகவிருக்கிறது. வாழைப்பழத்தில் ஊசிஏற்றப்பட்டதை Utviklingsfondet அறிந்திருக்கவாய்ப்பில்லை எனவும் கொள்ளலாம். இனிவரும் காலங்களிளாவது கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புவோமாக.

இப்படியான கூட்டங்களை நடாத்துபவர்கள் சமுதாயம் ‌மீதான ஆழமான கருத்துக்களையும், தமது செயற்பாடுகளின் தன்மையையும், சாதக பாதகமான (impact) தாக்கங்களை முழுமையாக உணராது இப்படியான கூட்டங்களை நடாத்துவது வரவேற்கத்தக்கதல்ல.

இப்படியான கூட்டங்களை குழுவாதங்களுக்காக பயன்படுத்திக்கொள்வதும் தேசியத்திற்கு உகந்ததல்ல.


பி.கு: இவ்விடயம்பற்றி Utviklingsfondet இன் முகப்புத்தகத்தில் எழுதிய பின் அவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு உரையாடினார்கள். எனது தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களில் அவர்கள் உடன்படுவதாகவும், இருப்பினும் சிங்களவர்களுடன் சமமாக இருந்து உரையாட தமிழர்தரப்பு விரும்பவில்லை என்று தங்களிடம் கூறியதாகவும் அதனாலேயே சிங்களவர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்றும், இருப்பினும் தற்போதைய பேச்சாளர் பட்டியலில் நடுவிலை இல்லை என்பதை உணர்வதனால் சிங்களவர்  அல்லது முஸ்லீம்களை பேச்சாளர்களை பட்டியலில் இணைக்கமுயல்வதாகவும் கூறியதை இங்கு பதிவது அவசியம் என்று கருதுகிறேன்.

அத்துடன் நோர்வேஜிய மொழியில் தமிழர்தரப்பு பேச்சாளர் பேசுவது முக்கியம் என்பதானாலேயே மேற்குறிப்பிட்ட தமிழ்ப்பேச்சாளர் அழைக்கப்பட்டார் என்ற போது நான் சில பெயர்களை குறிப்பிட்டபோது,  ஆம் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்ற பதிலும் கிடைத்தது.

தமிழர் தரப்பு சிங்களவர்களுடன் சமமமாக இருந்து பேசமாட்டோம் என்றால், அந்த குறுந்தேசியவாதத்தை Utviklingsfont  உம் ஆதரிக்கிறதா? அப்படியானவர்களுடன் நல்லிணக்கம் பற்றி என்ன பேச இருக்கிறது?


-----------------------------

சரி ... இவ்வளவும் சொன்னவனை சும்மா விடலாமா? என்னை மீண்டும் துரோகி, உளவாளி பட்டியலில் இணைத்து குறுஞ்செய்தி அனுப்புங்க.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்