புறக்கணிப்பின் கால்கள் புகைபோன்றது

அண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தபோது அவர் மிகவும் நலிந்த மனநிலையில் இருந்தார். இருவரும் உரையாடிக்கொண்டே இலையுதிர்காலத்து மாலையிருட்டில் நடந்துகொண்டிருந்தோம். மழையும் குளிருமாய் இருந்தது ஒஸ்லோவின் வீதிகள். எங்காவது உட்கார்ந்து தேனிரருந்தியபடியே பேசலாம் என்றபடியே நடந்துகொண்டிருந்தோம்

ஒரு ஒதுக்குப்புறத்துத் தேனீர்க்கடையொன்றில் அமர்ந்து தேனீர் தருமாறு கேட்டுவிட்டு உட்கார்ந்து, இருவரும் குளிர் காலத்து உடைகளை களற்றி கதிரையில் வைத்துத்ததும் உடலில் இருந்து பெரும்பாரம் இறங்கியது போலிருந்தது. இன்னும் 5 மாதத்துக்கு குளிர் தான் என்று அங்கலாய்த்தார் நண்பர். நானும் அதை ஆமோதித்தேன்.

இருவரின் பேச்சும் வாழ்க்கைபற்றித் திரும்பியது. வாழ்கையில் புறக்கணிப்பு என்பது எந்தளவுக்கு ஒரு மனிதனை பாதிக்கிறது என்று ஆரம்பித்த நண்பர் பேசி முடித்த போது அவர் கண்கள் கலங்கியிருந்தன. எனது கண்களும் தான். எங்களில் எத்தனை மனிதர்கள் எத்தனை எத்தனை அந்தரங்கங்‌களை மௌனமாய்ச் சுமந்தபடி அலைந்து திரிகிறோம்? வாழ்க்கையின்பால் பலத்த ஏமாற்றத்தில் இருந்தார், அவர். தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பவாழ்க்கை, பொதுவாழ்க்கை எங்கும் புறக்கணிப்பின் நிழல் அவரைத் தொடர்ந்துகொண்டிருந்தது.

புறக்கணிக்கப்படுவதன் வலியையும், புறக்கணிக்கப்படும் போது ஏற்படும் குரூர இன்பம் இவையிரண்டையும் தான் அனுபவித்திருப்பதாயும், இவையிரண்டாலுமே தனது வாழ்க்கைத்துணையுடனான நட்பு, அன்பு, அன்னியோன்யம், புரிந்துணர்வு, சில மனிதர்களுடனான நட்புகள் ஆகியவை தொலைந்துபோயின என்ற போது நானும் அவரின் கருத்துடன் உடன்பட்டிருந்தேன்.

எப்போது புறக்கணிப்பு மனிதர்களுக்கிடையே ஆரம்பிக்கிறது? எவ்வாறு அது ஒரு நெருக்கமான உறவுக்குள் புகுந்து, அவ்வுறவுகளைப் பிளவடையச்செய்கிறது? இதில் இருந்து மீண்டுகொள்ள முடியாதா? என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

அடுப்பங்கரையின் புகைபோன்று புறக்கணிப்பு எதுவித ஓசையும் இன்றி மனிதர்களின் வாழ்வுக்குள் புகுந்து, நிறைந்து, நிமிர்ந்து பார்க்கமுடியாதளவுக்கு வாழ்வினை சிரமப்படுத்துகிறது. ஏமாற்றங்களில் தான் புறக்கணிப்பின் பிறப்பு நிகழ்கிறது. அதன் பின் அது எங்களுடனேயே வாழ்நாள் முழுவதும் ஒட்டிக்கொண்டுவிடுகிறது. அது தன் சுமையைச் சுமக்கும் பொறுப்பை அது எங்கள் மீது சுமத்திவிட்டு அது எங்கள் மேலேயே சவாரிசெய்கிறது.

நண்பரின் சரிதத்துடன் நானும் என் வாழ்வினை ஒப்பிட்டுப்பார்த்தால், புறக்கணிப்பு என் வாழ்வின் எந்தக் காலகட்டத்தில் உட்புகுந்தது என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாதிருக்கிறது. திருமணமாகி காதல்கசிந்துருகியபோதா? காமம் வடிந்ததோடியபின்பா? குடும்பம் குட்டி என்றாகியபோதா? அல்லது எனது சுயம் மறுக்கப்பட்டபோதா? வாழ்வின் எல்லா படிநிலைகளிலும் புறக்கணிப்பினை உணர்ந்ததாகவே நினைவு பதிலளிக்கிறது. அதேபோல் நானும் தெரிந்தும் தெரியாமலும் மற்றையவரை புறக்கணித்திருக்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்வதில் எதுவித வெட்கமும்இல்லை, எனக்கு.

வாழ்வின் எல்லாபடிநிலைகளிலும், ஏமாற்றங்கள் என்னை அல்லது மற்றையவரை சுழ்ந்த கணங்களில், புறக்கணிப்பின் புகை எம்மிருவருக்குமிடையில் புகையத்தொடங்கியிருக்கவேண்டும். அதை நாம் நுகர்ந்தறியத் தவறியதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம். புறக்கணிப்பிற்கு, புரிந்துணர்வு என்பதை புரியாதிருப்பதும் ஒரு முக்கிய காரணம் என்றே எண்ணத் தோன்றுகிறது. புரிந்துணர்வு இருப்பின் ஏமாற்றங்கள் குறையுமல்லவா. புரிந்துணர்வு என்பது இருபாலாருக்குமே அவசியம்.

நீண்டகால புறக்கணிப்புக்கள் மனித உறவுகளின் மென்மைத்தன்மைகளை, ஈரலிப்பை மரத்துப்போகச் செய்கிறது. ஒருவரின் மென்மையான உணர்வுகளைப் பற்றி மற்றையவர் உணரும் தன்மையை இழந்துபோகிறார். இதுவே ஒரு உறவின் முடிவின் ஆரம்பம். கண்களில் அன்பு மறைந்து குரோதம் குடிவந்துவிடுகிறது. குரலில் அன்பின் ஈரம் வறண்டு காய்ந்துபோகிறது, வெறுப்பும் எரிச்சலும் தெறிக்க ஆரம்பிக்கிறது . செய்கைகளில் அலட்சியமும், சினமும் தெரிய ஆரம்பிக்கிறது.  அவர்களுக்கிடையே பேச்சற்ற நிலை வரும் போது புறக்கணிப்பு தனது முழுவெற்றியையும் கொண்டாடிக்கொண்டிருக்க ஒரு மனிதஉறவு தொலைந்துபோயிருக்கும்.

நானும் இப்படியானதொரு நிலையைக் கடந்துவந்தவன். என்னைப்போல் பலரும் இப்படியானதொரு வாழ்வினை வாழ்ந்துகொண்டிப்பதை நன்கு அறிவேன். விழுங்கவும் முடியாது மெல்லுவும் முடியாது போன்ற மிகவும் கொடுமையான வாழ்வுதான் அது. எனது நண்பரும் வாக்குமூலத்தின் சாரமும் இவற்றையே கூறின..

எனது நண்பர் தேனீரை ஊறுஞ்சியபடியே என்னைப் பார்த்து இப்படியான ஒரு உறவில் தொடர்ந்தும் வாழவேண்டுமா என்றார். நான் அப்படியானதொரு வாழ்க்கையை வாழ்வதினால் உனது ”வாழ்க்கைத் தரம்” உயர்கிறது என்று நினைக்கிறாயா என்றேன். மெளனமே பதிலாயிருந்தது அவரிடம்.

மனிதர்களால் மீண்டும் புறக்கணிப்பற்ற அன்பின் ஆரம்பகாலத்திற்குச் செல்லலாம் என்னும் நம்பிக்கை என்னிடம் இல்லை. அப்படியான பொறுமையும், நற்குணமும் என்னிடமில்லாதிருக்கலாம். ஆயினும் எனது பலவீனங்களுடனேயே நான் எனது வாழ்வினை வாழப்பழகிக்கொண்டிருக்கிறேன். அது ஒருவிதத்தில் பெருத்த ஆறுதலைத்தருகிறது.

புறக்கணிப்பு என்பது புரையோடிய புண்போன்று ஆறாது தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆம், எனக்கு அப்படித்தான் இருக்கிறது என்றேன், நண்பரிடம். தலையைக் குனிந்தபடியே இருந்த அவரின் தலை மேலும் கீழுமாக ஆடிக்கொண்டிருந்தது.

வீடு, வசதி, வங்கியிலே இருப்பு, ஊருக்குள் பெயரும் புகழும் என்று புறவாழ்வு நிம்மதியாருந்தாலும் அகவாழ்வானது நிம்மதியின்றி இருக்கும் தன்மையின் தார்ப்பர்யத்தை நான் நன்கு அறிவேன். எனது நண்பரும் அதை ஆமோதித்தார். வாழும் வாழ்க்கையின் தரம் என்பது மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடுகிறது. தேடுதல் இருப்பவர்கள், அது பற்றிய புரிதல் இருப்பவர்களே பல சிக்கல்களை, மனப்போராட்டங்களை கடந்துகொள்ளவேண்டியிருக்கிறது. தனது அகவாழ்வின் வாழ்க்கைத்த்தரம்பற்றி அலட்டிக்கொள்ளாதவர்கள் ஒருவிதத்தில் பல சிக்கல்களில், மனப்போராட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்கிறார்களாஎ ன்ற கேள்வி எம்மிருவரிடமும் இருந்தது.

தன் வாழ்வில் இப்படியானதொருநிலை வரும் என்பதை நண்பர் எதிர்பார்த்திருக்கவில்லை என்றும், இப்போது என்ன செய்வது என்று தடுமாறிக்கொண்டிருப்பதாயும், முறிந்துபோன மனங்களை சீர்செய்வது சாத்தியமற்றது என நன்கு அறிவதாயும் கூறினார். மௌனமாய், அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவரின் இல்வாழ்வு தோல்வியடைந்திருப்பதை ஏற்கும் மனம் இதுவரை அவருக்கு வாய்க்கவில்லை என்பது புரிந்து. பெற்றோர், சகோதர சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள், சமூகம் என்று பலருக்காகவும் அவர் பயந்துகொண்டிருப்பதை உணர்த்தியது அவர் பேச்சு. இது ஒன்றும் புதிதில்லை. எமது சமுதாயத்தில் பலரும் கடந்துகொள்ளும் ஒரு படிநிலைதான் இது, ஆனால் மனமுறிவுகளை ஆழ்மனரீதியாக, உணர்வுபூர்வமாக அவர் சீர்படுத்திக்கொள்ளமுடியாதுபோயின் சிரமமான மன அழுத்தங்களுடன் நீங்கள் இருவரும் வாழும்நிலை ஏற்படலாம் அதற்குத் தயாரா என்றேன். எங்களுக்கிடையில் சில மௌனமான கணங்கள் கடந்துபோயின. இருவரினதும் தேனீர்க்கோப்பைகளும் காலியாகியிருந்தன.

என்னசெய்யலாம் என்றார் என்னிடம்.

மனதுடன் உரையாடு, மீண்டும் மீண்டும் உரையாடு. பதில் கிடைக்கும். எப்போ என்று என்னிடம் கேட்காதே. ஆனால் நிட்சயமாய் ஒரு நாள் பதில் கிடைக்கும் என்றேன்.

அர்த்தமாய் புன்னகைத்தபடியே எழுந்து குளிர்காலத்து உடைகளை அணிந்துகொண்டு புறப்பட்டோம். வெளியே குளிர் முகத்திலடித்தது. விடைபெற்றுக்கொண்ட நண்பர் எதிரே இருந்த வீதியில் இறந்கி நடக்கத்தொடங்கினார். நடையில் தளர்வு தெரிந்தது.

நிலக்கீழ்தொடருந்து நிலயத்தைநோக்கி நடக்கலானேன், நான். மனதுக்குள் நண்பரின் மனதுக்கு என்ன பதில் கிடைக்கும் என்று சிந்தனையோடிக்கொண்டிருந்து.
 
 

2 comments:

  1. கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
    கொடிது கொடிது வறுமை கொடிது
    அதனினும் கொடிதே இளமையில் வறுமை
    அதனினும் கொடிதே ஆற்றொணாக் கொடுநோய்
    அதனினும் கொடிதே அன்பிலா பெண்டிர்
    அதனினும் கொடிதே இன்புற அவள் கையில் உண்பது தானே


    ReplyDelete
  2. பதிவுலகில் இதெல்லாம் சகஜமப்பா.

    ReplyDelete

பின்னூட்டங்கள்