காயங்களின் வடுக்கள்

அபியும் நானும் படத்தை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். இன்றும் பார்த்தேன். அதில் மகளுக்கு காதுகுத்தியபோது ரத்தம் வந்தது பற்றி பிரிதிவிராஜ், பிரகாஸ்ராஜ்இடம் விபரிக்கும் காட்சியின் பின் என்னால் இன்று படத்தில் லயிக்க முடியவில்லை. மனது நினைவகளுக்குள் மூழ்கத்தொடங்கியது.

சில நாட்களாகவே எழுதுவதற்கான உந்துதல்இருந்தும் எதை எழுதுவது என்று தெரியாதிருந்தேன். மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கனவில் இருந்து, நான், விளித்துக்கொண்டபோது எழுதுவதற்கு அருமையான ஒரு கரு கிடைத்திருந்தது. அந்த மகிழ்ச்சியில் மீண்டும் தூங்கிப்போனேன். ஆனால் காலையில் அந்தக் கனவும், அந்தக் கருவும் மறந்துபோயிருந்தது. அந்தக் கரு என்னவென்று சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் அது நினைவில் வருவதாயில்லை.

ஆனால் அபியும் நானும் எனக்கு ஒரு கருவைத் தந்திருக்கிறது. என் குழந்தைகளுடன் வாழ்ந்திருந்த காலங்களில் நானும் பிரகாஸ்ராஜ் போன்றே இருந்தேன். பிரகாஸ்ராஜ்க்காவது ஒரு பெண் குழந்தை. எனக்கோ இரண்டு: அவர்களுடனான நாட்கள் மிகவும் இனிமையானவை. இன்றும் என்னைத் தாலாட்டும் நாட்கள், அவை.

குழந்தைகளுக்கு சிறு வலியேற்படும்போதும் நாம் வெகுவாய்ப் பதறிப்போகிறோம். ஆனால் குழந்தைகளோ தங்கள் வலியைப்பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை. இப்படித்தான் ஒரு நாள் எனது தொழிட்சாலைக்கு வந்த தொலைபேசி, மகள் ஒரு தகரப்டப்பா ஒன்றினுள் விரலைவிட்டு இழுத்ததால் அது அவளின் விரலை பெரிதாக வெட்டிவிட்டதாகவும் உடனே வரவும் என்று கூறியது.

வீடு சென்று மகளை அழைத்துக்கொண்டு வைத்தியரிடம் சென்றேன். மகள் அழுது முடித்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டிருந்தாள்.

வைத்தியரும் வந்தார். விரலைச்சுற்றியிருந்த துணியை மகளுடன் பேசியபடியே, அவள் அழாதிருப்பதை பாராட்டியபடியே ‌மிக மெதுவாய் அகற்றிக்கொண்டிருந்தார். என்மடியில் இருந்த மகளும் அவரின் பேச்சுக்கு பதில் கூறியபடியே தனது காயத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

வைத்தியர் காயத்த்தை சுற்றியிருந்த துணியை அகற்றினார். ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதியில் பெருங்காயம் ஒன்று இருந்து. மகளுக்கு வலித்திருக்கவேண்டும் தனது முகத்தை எனது கழுத்துக்குள் புதைத்து விக்கி விக்கி அழத்தொடங்கினாள். வைத்தியர்  விறைப்பு மருந்தை இட்டவாறே அவளுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தார். நான் அவளைத் தேற்ற முயற்சித்துக்கொண்டிருந்தேன்.

அவளின் கையில் இருந்து வழிந்துகொண்டிருந்த இரத்தத்தைக் கண்டதும் எனக்கு தலைசுற்றத் தொடங்கியது. அசௌகரீயம் உணர்ந்தேன். வைத்தியரிடம் கூறியதும் ஒரு குவளையில் நீர் தந்தார். அதை அருந்தியதும் ஓரளவு நிதானம் திரும்பியது. காயத்தை பரிசோதித்த வைத்தியர், இக்காயத்திற்கு தையல் போடவேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மருந்திட்டு காயம் ஆறும்வரையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காயத்தினை சுத்தப்படுத்தி மருந்திடவேண்டும் என்றும், விரலை மேல்நோக்கி வைத்திருக்கும்படியும் கூறி எம்மை அனுப்பினார்.

வரும் வழியில் மகள் கேட்ட அனைத்து இனிப்பு வகைகளையும் வாங்கிக்கொடுத்தேன். அவளோ காயத்தை மறந்துபோயிருந்தாள். ஆனால் முழங்கையை மடித்து  மருந்திட்ட விரலை மட்டும் நிமிர்த்திவைத்திருந்தாள். வீடு வந்ததும் அவளை மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டேன். அதன் பின்னான சில நாட்கள் அவளுக்கு மருந்திடும் போது அல்லது காயத்தினை சுத்திகரித்து புதிய துணி சுற்றும் போது அவளைவிட எனக்கே அதிகமாக வலித்தது. மிக மிக அவதானமாகவே எதையும் செய்தேன். விரைவாகச் செய், அல்லது என்னை செய்ய விடு என்பாள் மகள், சில வேளைகளில். அவளைவிட எனக்கே அந்நேரங்கள் வலியைத்தந்தன.

அவள் எதைச் செய்தாலும் அவளின் விரல் மட்டும் கீழ்நோக்கி இருக்கவில்லை. எப்பொழுதும் ஒரு விரலை நிமிர்த்திப் பிடித்தபடியே இருந்தாள், நடந்தாள், ஓடினாள், உறங்கினாள், உறக்கத்தில் இருந்து எழும்பினாள்.

அவளைக் குளிப்பாட்டும் போதும் அந்தக் கையை உயரத்தில் பிடித்திருப்பாள். இயற்கை உபாதைகளை கடந்துகொள்ளும் நேரங்களிலும் அவளின் அந்த விரல் மேல்நோக்கி தூக்கப்பட்டிருக்கும்.

சில நாட்களின் பின் அவளின் கை குணமாகியது. டாக்டரிடம் காட்டினோம். குணமாகிவிட்டது என்றார். ஆனாள் மகளோ தனது கைவிரலை தூக்கிப்பிடித்தவாறே நின்றாள். அவளுக்கு இனி கையை கீழேவிடுங்கள் என்று பல நாட்கள் கூறி, அதன் பின்பே அவள் தனது கைவிரலை தூக்கிப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொண்டாள்.

இதன் பின்பான சில வருடங்களில் அவள் தனக்கு தனி அறை வேண்டும் என்றும், அறைக்கு இளவரசிகளின் படங்கள் இருக்கும் சுவரலங்காரத்தை செய்து தாருங்கள் என்றாள். சரி என்று அதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்த ஒரு நாள், நான் சுவருக்கான அழகிய இளவரசிகளின் படம் பதிக்கப்பட்ட அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தேன். என்னிடம் அந்த அலங்கார மட்டைகளை வெட்டும் மிக மிக கூர்மையான  தகடு இருந்தது.

நான் அலங்காரங்களைச் செய்யும் கவனத்தில் இருந்தபோது, அக்காள் அந்த கூர்மையானத் தகட்டினை எடுக்க, தங்கையும் அதை இழுக்க அது தங்கையின் கையினை மிக ஆழமாக வெட்டிவிட்டது. இரத்தம் ஆறாய் ஓடியபோதும் அவளிடம் இருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. அவசர அவரசமாய் துணியினால் சுற்றிக்கட்டி  அவசரசிகிச்சைப்பிரிவுக்கு அவளை அழைத்துப்போனோம்.

அக்காவிடம் இது தற்செயலாக நடந்தது. உங்களில் பிழையில்லை என்று கூறி அவளை சமாதானப்படுத்த முயற்சித்தேன். அவள் அழுதுகொண்டே சிவந்துபோன கண்களுடன் தங்கையின் அருகிலேயே நின்றிருந்தாள்.

வைத்தியர் எமது வீட்டிற்கு அருகில் இருப்பவராகையால் மகளுக்கு அவரை ஏற்கனவே அறிமுகமாயிருந்தது. அவர்கள் வீட்டில் ஒரு குதிரை இருந்தது. எனது மகளுக்கும் குதிரைப் பைத்தியம் பிடித்திருந்த நாட்கள் அவை. எனவே வைத்தியர் அவளுடன் குதிரைகள்பற்றி உரையாடியபடியே விறைப்பு மருந்திட்டு, அவளின் கையில் 8 தையல்கள் இட்டார். என்னுடலில் தையலிட்டது போன்று துடித்துப்போனேன். ஆனால் அவளோ அழவே இல்லை. வைத்தியரின் கதைகளில் லயித்துப்போயிருந்தாள். 

அக் காயமும் சில நாட்களிகளின் பின் ஆறிப்போயிற்று.

இன்னொருமுறை கையை முறித்துக்கொண்டாள்.  வைத்தியசாலையில் முழங்கையி்ல் இருந்து விரல்கள் வரையிலான பகுதிக்கு Plaster of Paris இட்டு அனுப்பினார்கள்.  வரும் வழியிலேயே  வெள்ளை நிறததிலான அந்த Plaster of Paris இல் என் பெயரை  எழுது என்றாள். எழுதினேன். வீட்டிற்குச் சென்றதும் அக்காளிடமும் பெயரை எழுது என்றாள். அவளும் எழுதினாள். மறு நாள் பாடசாலையில் இருந்து அவள் வீடு வந்த போது அவளின்  கையில் அவளின்  ஆசிரியரின் கையெழுத்தில்  இருந்து வகுப்புத் தோழியர், தோழர்களின் கையெழுத்து  இருந்தது. அதன் பின்பு எமது வீட்டிற்கு  வந்தவர்களும் அவளின் கையில் கையெழுத்திட கட்டளையிடப்பட்டார்கள்.

சில நாட்களின் பின் அவளுக்கு வியர்வை, மற்றும் காற்றோட்டம் இன்மையினால் Plaster of Paris  இருந்த இடத்தில் அசௌகரீயமான உணர்வு ஏற்பட்டது. நானும் மெதுவாய் ஒரு பென்சிலினை அவளின் Plaster of Paris க்குள் இட்டு சொறிந்து விடுவேன். கண்கள் சொருகி சொக்கிப்போயிருப்பாள். அப்பா நீ கெட்டிக்காரன் என்று கூறியபடியே ஒரு முத்தம் பதித்துச் செல்வாள்.

அவளின் கை நனையாமல் அவளைக் குளிப்பாட்டுவது பெரும் வேலை. முதலில் பேப்பர் சுற்றுவேன். பின்பு போலித்தீன் பை சுற்றிக் குளிப்பாட்டுவேன்.  உடைமாற்றும் போது கழுத்தில் இருக்கும் பட்டியில் இருந்து கையைக் மெதுவாய் அகற்றி உடையணிந்தபின் மீண்டும் கையைத் தொங்கவிடுவேன். ஆனால் அதில் அவளுக்கு இஸ்டமில்லை. எனது கண்டனங்களை அவள் கவனித்ததாயில்லை. கழுத்துப்பட்டியில் அவளின் கை இருக்காது. எனினும் எப்படியோ  4 வாரங்களின் பின் அவளின் கை சுகமாகிவிட்டது என்று வைத்தியர் கூறிய பின்பே என் மனம் அமைதியாகியது. அவளின் கையில் இருந்து அகற்றப்பட்ட Plaster of Paris இன்றும் பாதுகாப்பாய் இருக்கிறது ஒரிடத்தில். எனது பெரும் பொக்கிஷங்களின் ஒன்று, அது.

இச்சம்பவங்கள் ஏறத்தாள 6 - 7 வருடங்களுக்கு முன்பு நடந்தவை

அண்மையில் அவளுக்கு 12  வயதான போது அவளைச் சந்தித்தபோது,  நான், அவளின் விரலை வருடியவாறு ”அம்மா, இந்த விரலில் ஏற்பட்ட காயம் நினைவிருக்கிறதா” என்றேன்.

மயக்கும் புன்னகையுடன், ஆம் என்று தலையாட்டினாள். இரண்டு காயங்களும் அவளுக்கு நினைவிருந்தன. அவை பற்றிய சம்பவங்களையும் கூறினாள். நான் பயந்து பயந்து அவளின் விரலுக்கு மருந்திட்ட நாட்களையும், புண் ஆறிய பின்பும் கைவிரலை தூக்கித்திரிந்ததும் அவளுக்கு நினைவிருந்தது. உங்களை வெருட்டி வெருட்டி கனக்க இனிப்பு வாங்கினேன் என்று அவள் கூறிய போது, சேர்ந்து சிரித்தோம்.

அந்தக் காயங்கள் இரண்டும் அவளின் கையில் சிறு வடுக்களைத் தந்திருக்கிறது. 
அந்த நாட்கள், அவளின் நினைவில் பசுமையான நினைவுகளாயிருப்பது எனக்குள் ஒரு இதமான வடுவைத் தந்திருக்கிறது.

வாழ்வு என்றும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. கற்றுக்கொண்டேயிருப்போமாக!


5 comments:

  1. நேற்றைய துன்பங்கள் இன்றைய அனுபவங்கள்..
    வாழ்க்கை வடுக்கள் இல்லாமல் ஒரேமாதிரி இருந்துவிட்டால் நினைத்து பார்க்க ஒன்றுமே இருக்காது......

    ReplyDelete
  2. நம்ம மறந்தாலும் பலவற்றை குழந்தைகள் மறப்பதில்லை... இன்றைய குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள விசயங்கள் நிறைய உள்ளன... மிகவும் ரசனைக்குரிய பகிர்வு... நன்றி...

    ReplyDelete
  3. Saatharanamaana vidayangalai suvaaarasiyamaaha ezhuthiyulleerhal. Nanru!

    ReplyDelete
  4. Very nicely expressed, Felt like a melodious film, Worrying your loneliness, Take care of you.

    ReplyDelete
  5. கத்திகள் எம் கைகளை கிளிப்பதான உணர்வில் கூசிப்போயின கைகள். நடுநடுங்கின விரல்கள். எழுத்திலும் அந்த அதே வலி உணரப்பட்டது. காயங்களின் வடுக்கள் காலத்தின் அடையாளங்கள். அவற்றை இழப்பதற்கு உண்மையில் எங்கள் மனங்கள் பிரியப்படுவதில்லை.

    ReplyDelete

பின்னூட்டங்கள்