பெருமைந்தர்களின் பெருந்தன்மைகள்


30.09.2012 இன்று எனக்குப் பிறந்த நாள். இன்றைய நாள் பிறந்தபோது, அதாவது 00:01 மணியின்போது முதலாவது தொலைபேசி வாழ்த்து வந்தது. குறுஞ்செய்திகளும் வந்தன. நேற்றைய மாலை மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததனால், என்னை நான் சற்று குஷிப்படுத்திக்கொண்டேன். அதன் காரணமாக நடுநிசி கடந்து சில நிமிடங்களில் தூங்கியும் போனேன்.

நேற்றை நாள் ஒஸ்லோவில் யாழ் மகஜனா கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. பொ.கனகசபாபதி அவர்களின் இரு புத்தகங்களின் அறிமுகவிழா நடைபெற்றது. ”எம்மை வாழவைத்தவர்கள்” என்னும் புத்தகத்தில் திரு கனகசபாபதி அவர்கள் தன்னைக் கவர்ந்த பாடசாலை அதிபர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இவ் பற்றிப் நண்பர் உமைபாலன் அறிவித்த நாளில் இருந்தே எனக்குள் ஒரு பெரும் கேள்வி இருந்து கொண்டே இருந்தது. புத்தகம் தனியே யாழ்ப்பாணத்து அதிபர்களை மட்டுமே உள்ளடக்கியிருக்குமா? அல்லது கிழக்குப்பிரதேச அதிபர்களையும் உள்ளடக்கியிருக்குமா? அப்படி இருந்தால் இலங்கை முழுவதும் பலராலும் மிகக் கடுமையானவர், மிக மிக நேர்மையானவர் என்று அறியப்படும் எங்கள் பாடசாலையின் முக்கிய அதிபராகக் கருதப்படும் Prince G. Gasinader அவர்களன் பெயரும் இருக்குமா என்று சிந்தனையோடிக்கொண்டிருந்தது.

அறிமுகவிழாவின் இடைவேளையின் போது முதலாவது ஆளக நீன்று புத்தகத்தை வாங்கிக்கொண்டேன், ஒரு முலையில் நின்றபடியே எனது பேராசானின் பெயரைத் தேடினேன். அது அங்கு இருக்கவில்லை. மனது கனத்துப்போனது. பொ. கனகசபாபதியின் மேல் சற்று எரிச்சலும் வந்தது. எவ்வாறு இவரால் Prince G. Gasinader அறியமுடியாது போனது? இவர் யாழ்ப்பாணத்தையே முன்னிலைப்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கத்தோன்றியது.

மனதுக்குள் இந்தக் கேள்வியை அடக்கிவைப்பதில் மனதுக்கு சம்மதம் இருக்கவில்லைவில்லையாதலால், புத்தகத்தில் கைழுத்து வாங்கிக் கொண்ட பொழுதினைப் பயன்படுத்தி நீங்கள் ஏன் Prince G. Gasinader ஐப் பற்றி எழுதவில்லை என்று கேட்டேன். கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்த பொ. கனகசபாபதி அய்யா வெள்ளை நிறமான நேர்த்தியாக வாரப்பட்டிருந்த முடியுடனான தனது  முகத்தை நிமிர்த்தி, என்னைக் கூர்ந்து பார்த்தார். அவரின் கண்கள் என்னை அளவிட்டன. பின்பு மெதுவாய் கையெழுத்திட்டு புத்தகத்தைத் தந்தார்.

நான் அவரருகிலேயே நின்றிருந்தேன். நிமிர்ந்து பார்த்தார்.  அவரிடம் படித்தவனா நீ என்றார். ஆம் என்றேன் பெருமையுடன். தலையை ஆட்டிக்கொண்டார். எனது புத்தகத்தில் எழுத விரும்பிய முக்கிய மனிதர் அவர். அவரிடம் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசினேன். அவர் தனது விபரங்களை அனுப்புவதற்குத் தாமதமாகியதாதலால் இப் பதிப்பில் அவர் பற்றிய விபரங்கள் இடம்பெறவில்லை என்றார். அத்துடன் அவர் கூறிய S.V.O. Somanader இன் விபரங்களையே நான் இங்கு பதிந்திருக்கிறேன் என்னும், Prince G. Gasinader ஐப் போன்ற அதிபர்கள் தற்போது இல்லாதிருப்பது மிகவும் துயர்தரும் விடயம், அவர் ஒரு மிகப் பெரிய மனிதர் என்றும் கனகசபாபதி அய்யா கூறிய போது ”மடையா இந்த பெரிய மனிசனையே சந்தேகப்பட்டியே” என்று மனச்சாட்சி கத்தியது. பெருமக்கள் பெருமக்களே என்பதை மீண்டும் உணர்ந்திருந்தேன்.

நேற்றைய அவ் விழாவினில் அறிமுகவிழாக்களில் இருக்கும் சம்பிரதாய முகமன்கள், தூக்கிப்பிடிக்கும் உரைகள், துதிபாடல்கள் எதுவுமின்றி மிகவும் அன்னியோன்னியமான விழாபோலிருந்தது. அதற்குக் முக்கிய காரணம் ஒரு பாடசாலையின் பெருமைமிக்க அதிபர், அவரை  மனதார நேசிக்கும் பழையமாணவர்கள். அவர்களுக்கிடையில் போலியான உறவுவோ, பாசாங்குகளோ இருக்கமுடியாதல்லவா. இப்படியான நிகழ்வுகளே மனதுக்கு அமைதியையும் ஆறுதலையும் தருகின்றன.

விழா முடிந்து வீடு நான் திரும்பிய போதும், பழையமாணவர்கள் தங்கள் அதிபரைச் சுற்றி நின்று அளவளாவிக்கொண்டிருந்தார்கள். ஒரு விதத்தில் பொறாமையாய் இருந்தது எனக்கு. ஆசிரியர்களுக்கு இந்த உலகத்தில் எந்தத் தொழிலுக்கும் இல்லாத ஒரு மிகப் பெரிய கௌரவம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அவர்களுக்கு உலகெங்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். தங்கள் ஆசிரியர்களை தங்கள் பெற்றோர் போல் நடாத்துகிறார்கள். ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளைப் போல் மாணவர்களை நடாத்துகிறார்கள்.

காலம் மாணவர்களை, பழைய மாணவர்கள் என்ற நிலைக்கு மாற்றும் போது,  மாணவனுக்கும் ஆசிரியர்க்கும் இடையே இருந்து உறவு பலமுள்ள ஒருவித நட்பாகவே மாறுகிறது.  ஆசிரியரிடம் இருந்த பயம் பக்தியாக மாறுகிறது. ஆசிரியரும் பல ஆண்டுகளை கடந்துவிடுவதால் இவர்களுக்கிடையில் ஒரு பரிசுத்த நட்பு ஏற்பட்விடுகிறது.

எனது அதிபருடன் பேசிக்கொண்டிருந்த ஒரு நாள், அவர் கூறினார்: தான் ஓய்வுபெற்று மிகவும் வயதான காலத்தில் என்னருகில் எனது குழந்தைகள் இல்லையே என்று வருந்துகிறேன் என்று ஒரு முறை தனது மனைவியிடம் கூறானாராம். அதற்கு அவர் உங்களுக்குத் தானே தினமும் குறைந்தது 5 பழைய மாணவர்கள் வந்துபோகிறார்கள், தவிர உலகெங்கும் உங்களின் மாணவர்கள் பரந்திருக்கிறார்கள், உங்களுக்கு என்னக குறை என்று கூறினாராம் என்று.

உண்மைதான் மாணவர்களின் மனதில் சில ஆசிரியர்கள் சிம்மாசனம் போட்டு ஏறி உட்கார்ந்துவிடுகிறார்கள். அவர்கள் எப்போதும் அச் சிம்மானத்தை இழப்பபதேயில்லை. நான் ஒரு ஆசிரியனாக வரவில்லையே என்ற ஏக்கம் மாணவர்களின் மனதை வென்ற ஆசிரியர்களைக் காணும் போது ஏற்படுவததை மறுப்பதற்கில்லை.

இன்று காலை தொலைபேசி சிணுங்கியோது நேரத்தைப்பார்த்தேன். நேரம் 05:30 என்றிருந்தது. இந்த நேரத்தில் எனக்கு தொலைபேசி எடுப்பது எனது தாயார் மட்டுமே. நான் பல தடவைகள் நோர்வே நேரங்கள் பற்றி அவரிடம் கூறிய பின்பும் அதை அவர் கவனிப்பதேயில்லை. தான் உரையாடி முடிந்ததும் ”சரி மகன்,  நான் வைக்கிறன் நீ படு” என்பார்.

இன்று எனது பிறந்த நாள் என்பதால் அதற்கு வாழ்த்து தெரிவிக்க எடுத்திருக்கிறார். அவர் வாழ்த்தி முடிந்ததும் அம்மா நித்திரை வருகிறது படுக்கவிடுங்கள் என்று அவரிடம் இருந்து விடைபெற்று போர்வையினுள் புகுந்து, ஆழந்த தூக்கம் ஆட்கொள்ளும் வேளை மீண்டும் தொலைபேசி அடித்தது. நிட்சயம் அம்மாதான் சாப்பிட்டியா என்று கேட்க எடுக்கிறார் என்று நினைத்தபடியே சற்றுக் காரமாக ஹலோ என்றேன்.

மறு புறத்தில் My son  என்று தொடங்கி கடவுள் உன்னை  ஆசிர்வதிப்பாராக என்று ஒரு குரல் ஆங்கிலத்தில் கூறியது.  வார்த்தைகள்  காதிற்குள் புகுந்து முளையை எட்டுவதற்கு முதல் அக் குரலினை அடையாளம் கண்டுகொண்டேன். என்னையறியாமலே துள்ளி எழுந்து கட்டிலில் அமர்ந்து கொண்டேன். அதற்குள் அவர்  தனது வாழ்த்தினை தெரிவித்துவிட்டு, நான் யார் என்ற சொல் பார்ப்போம் என்றார் ஆங்கிலத்தில் .

திகைப்பின் உச்சியில் நின்று, ஆச்சர்யத்தில் திண்டாடியபடியே தெரியும் Sir, என்றேன். அப்ப நீ இன்னும் இந்தக் கிழவனை இன்னும் மறக்கலியா என்றார் அவர்.

மறக்கக்கூடிய குரலா அது.  ஏறத்தாள 8 வருடங்கள் தினமும் கேட்டுப்பழகிய அளப்பரிய ஆளுமை மிகுந்ததோர் குரல் அது. எந்த நெஞசினை துளைத்துச்செல்லும் கம்பீரமான சக்திஇந்தக் குரலுக்கு உண்டு. 87வயதிலும் தன்னிடம் கல்விபயின்ற ஒரு மாணவனின் பிறந்தநாளினை நினைவிற்கொண்டு வாழ்த்துவதற்காய் தூரதேசம் தெலைபேசி எடுத்த ஒரு பேராசானின் குரல்.

ஆம், எங்கள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும், எனது பேராசானுமாகிய Prince G. Casinader மறுபக்கத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

தூக்கத்தின் கலக்கம் மறைந்து சிறுகுழந்தை போலானது மனது. அவர் தொடர்ந்தார். என்னை நீ ஒரு முறை தான் வந்து பார்த்தாய் இவ் வருடம் இலங்கை வந்திருந்த போது, மீ்ண்டும் உரையாட வருவதாகக் கூறியிருந்தாய். என்னிடம் இருந்து விடைபெறாமலே சென்றுவிட்டாய், இது அழகான பழக்கமில்லை, உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார் 30 ஆண்டுகளுக்கு முன்னிருந்து அதே கண்டிப்பான குரலில்.

மன்னித்துக்கொள்ளுங்கள் Sir, நினைத்திருந்ததை விட வேலைகள் அதிமாகிவிட்டன அதனால் வரமுடியவில்லை என்றேன். இருப்பினும் மனிதர் விடுவதாயில்லை. தொலைபேசியாவது எடுத்திருக்கலாம் என்பது அவரது ஆதங்கம். உண்மை தான் தவறு என்னுடையது தான் Sir  என்றேன்.

பலதையும் பேசிக்கொண்டிருந்தோம். நேற்று ‌நடைபெற்ற பொ.கனகசபாபதி அவர்களின் புத்தக அறிமுக விழாவைப்பற்றிக் பற்றிக் கூறினேன். My son,  என்று ஆரம்பித்தார்: நீ நினைப்புது போல் நான் ஒன்றும் மகான் அல்லன் . நீயும் உன்னைப்போல என்னிடம் கல்விகற்ற பலரும் என்னை பெரிய மனிதனாகப் பார்க்கிறீர்கள். என்னை விடப் எவ்வளவோ பெரியவர் S.V.O. Somanader. அவரைப் போன்றவர்களைப் பற்றி எழுதப்படுவதே சிறந்தது. எனவே தான் அவரைப்பற்றிய தகவல்களைக் கொடுததேன் என்றார்.

எனது மாணவன் நீ. உன்னுடன் நீ வரும் நேரங்களில் மனம்விட்டுப் பேசியிருக்கிறேன். வாழ்க்கை என்னை பாலைவனங்களுக்குள்ளாலும், ரோஜாத்தோட்டம் போன்ற மாணவர்களினூடாகவும் நடத்திப்போயிருக்கிறது. எனது அந்திம காலத்தில் நானிருக்கிறேன். அடுத்தமுறை நீ வரும்போது நான் இருப்பேனோ தெரியாது. ஒன்றை மட்டும் அறிந்துகொள் பல மாணவர்களுக்கு நான் ஆசிரியனாக இருந்திருக்கிறேன். சில மாணவர்களுக்கு ஆசிரியனாக இருப்பதற்கு நான் ஆசீர்வதிக்ப்பட்டிருக்கிறேன். நீயும் அவர்களில் ஒருவன் என்ற போது என் கண்கள் கலங்கி பேசமுடியாதிருந்தேன். இதை எழுதும் போதும் நெஞ்சமெல்லாம் பெருமையை உணர்கிறேன்.

பலதையும் பேசியபின் உரையாடலை முடித்துக்கொண்டோம். என்னால் தொடந்து உறங்க முடியவில்லை. பேராசானின் நினைவுகளில் நனைந்துகொண்டிருந்தேன். எத்தனையோ வருடங்களின் பின், எனக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக்கூறுவதற்காக தொலைபேசி இருக்கிறார். என்றுமே கேட்காத பெருமை தரும் வார்த்தைகளால் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். நேற்றைய நாளுடன் இன்றைய நாளை ஒப்பிடும் போது மனதுக்குள் சுகமானதோர் உணர்வு என்னை ஆட்கொள்கிறது.

பல மாணவர்களைப் பெற அவர் தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்றாரல்லவா? ஆனால் எனக்கேதோ நாங்கள் தான் அவரை ஆசிரியனாய்ப் பெற ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. உங்களுக்கு?


இன்றை நாள் மிக மிக அழகானது.



1 comment:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (சற்றே தாமதமான)

    ஸ்ரீ....

    ReplyDelete

பின்னூட்டங்கள்