இடுப்பிற்கு கீழ் இயக்கமற்ற ஒரு போராளியின் வாழ்க்கைப் போராட்டம்

இன்று சந்திக்கப்போகும் போராளியின் வாழ்க்கை மிகவும் வேதனையான நிலையில் இருக்கிறது என்றும், அவர் குடும்பத்திற்கு மட்டக்களப்பில் வருமானம் இல்லாததால் வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்து அங்கு கூலிவேலை செய்து வருவதாகவும் நண்பர் கூறியிருந்தார். அவர்கள் மட்டக்களப்பிற்கு வந்திருந்தார்கள். அவர்களின் நண்பர்களின் வீட்டில் அவர்கள் தங்கியிருப்பதால் அவர்களை அங்கு சந்திப்பதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தேன். நண்பர் மட்டக்களப்பிற்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றார். மாலை நேரம். இருள் ஊருக்குள் குடிவந்திருந்தது.

இரண்டு வேலிகளுக்கு இடையே அமைந்திருந்த ஒரு சிறு மணற்பாதையூடாக ஒரு வீட்டினை அடைந்தோம். எம்மை வரவேற்றார் அந்தப் போராளி. அவரால் எழுந்த நிற்கமுடியவில்லை. கதிரையில் உட்கார்ந்திருந்தார். அவர் தங்கியிருந்த வீட்டு நண்பர்கள் நாகரீகம் கருதி  அகன்றுகொண்டார்கள்.  மங்கலான மின் குமிழ் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சிறிய குழந்தைகள் தாயின் அருகில் நின்றிருக்க  முத்த மகள் மட்டும் தந்தையின் கதிரையின் கைப்பிடியில் அமர்ந்திருந்தாள்.

பொதுவான அறிமுகங்களுடன் ஆரம்பதித்த பேச்சு அவர்களின் வாழ்க்கை நிலமை பற்றித் திரும்பியது.  மட்டக்ளப்பில் இருந்து பல வருடங்களுக்கு முன் முக்கியமானதொரு படையணிக்காக வன்னி சென்று, கிழக்கின் பிரிவின்போதும் வன்னிக்கே விசுவாசமாய் இருந்திருக்கிறார். களத்தில் பல காயங்களை பெற்றிருந்தாலும் முதுகெலும்பை தாக்கிய ஒரு செல் துண்டு அவருக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று அவர் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் இருக்கிறார். தனது கைகளை ஊன்றியே அவரால் வீட்டுக்குள் நடக்க முடிகிறது.  வெளியல் செல்வதாயின் சக்கரநாற்காலி இருக்கிறது.

இவர் காயப்பட்டிருந்த காலங்களில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், உதவிகள் பற்றிப் பேசினார்.  தனக்கு 2009ம் ஆண்டு சித்திரை மாதம் வரையில் விடுதலைப் புலிகளின் மாதாந்தக் கொடுப்பனவு இவரின் குடும்பத்திற்கு கிடைத்திருக்கிறது. அதன் பின் முள்ளிவாய்க்கால் நாட்களைக் கடந்து மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்த பின் வருமானமின்றி தடுமாறத்தொடங்கியிருக்கிறார்.

அவர் மீன்பிடித்தொழில் தெரிந்தவராகையால் நண்பர்கள் யாராவது அவரை வீட்டில் இருந்து தூக்கிச்சென்று, ஒரு வாகனத்தில் இருத்தி, வாவிக்கரையில் இருக்கும் தோணியில் உட்கார உதவுவார்கள் எனின் அவர் வாவியில் மீன்பிடித்துத் திரும்புவார். மீண்டும் அவரை யாராவது வீட்டுக்குச் செல்ல உதவும் வரை தோணியிலேயே காத்திருக்கவேண்டும். வீடு சென்ற பின்‌பு மனைவி அவர் பிடித்த மீன்களை விற்பனைசெய்ய சந்தைக்குச் செல்லவேண்டும்.

மற்றவர்களின் உதவிகள் கிடைப்பது அவ்வளவு இலகுவல்ல. எனவே வருமானமும் குறைவாகவே இருந்திருக்கிறது.  எனவே அவர்கள் வன்னியில் முன்பு வாழ்ந்திருந்த பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறர்ர்கள். அங்கு கிடுகு பின்னும் வேலை பார்த்திருக்கிறார் அவரது மனைவி. அவர்களுடைய ஒரு நாள் வருமானம் ஏறத்தாள 250 ரூபாய்.  ஐந்துத மனிதர்களின் வயிற்றினை 300  ரூபாவால் எப்படி நிரப்பினார்கள் என்பது எனக்கு இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது.

குழந்தைகளின் பட்டினி, மருந்துகள், உடல் உபாதைகள், என்று அவர்களின் இன்றைய நிலையைக் கூறிய போது அவர் அழுதுவிட்டார். மக்களின் விடிவுக்காகவே நாம் இரண்டுபேரும் போராட்டத்திற்குச் சென்றோம். ஆனால் இன்று எம்மை மக்கள் தீண்டத்தகாதவர்கள் போல் பார்க்கிறார்கள், எம்முடன் மிகவும் நெருங்கிய நண்பாகளைத் தவிர வேறு எவரும் பழக விரும்புவதில்லை. எமது குழந்தைகள் பட்டினி கிடக்கின்றன. இதற்காவா நாம் எமது வோழ்க்கையை போராட்டத்திற்கு அர்ப்பணித்தோம்? ஏன் எமக்கு உதவுவதற்கு எவரம் முன்வருகிறார்கள் இல்லை? இப்படி அவர் கேள்விகளை அடுக்கிக்கிய போது எதுவும் பேச முடியாது தலையைக்குனிந்திருப்பதை தவிர வேறுவழி எதுவும் தெரியவில்லை.

அதன் பின் எமது உரையாடலில் பெரும் கனதி படிந்துபோயிருந்தது. இந்தப் போராளியின் மனைவியும் முன்னாள் போராளி.  அங்கவீனமானவர்களின் மீது இருந்து பரிவின் காரணமான  இந்தப் போராளியை மணமுடித்திருக்கிறார்.  விடுதலைப் புலிகளின் தலைவர் மீதும், அவர்கள் இவர்களை நடாத்திய விதத்திலும் பெரு மதிப்புக்கொண்டிருக்கிறார்கள் இருவரும். அங்கவீனமானவர்களை மிகுந்தத கவனத்துடனும், கௌரவத்துடனும் நடாத்தியது மட்டுமல்ல அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுத்திருந்தார்கள் விடுதலைப் புலிகள் என்பதை அவர் எடுத்துக்கூறிய பல சம்வங்களினூடாக அறியக் கிடைத்தது. 2009  ஏப்ரல் மாதம் வரை ஊட்டச்சத்துள்ள உணவுகள், மருந்துகள், மாதாந்தக் கொடுப்பனவு என்பன இவர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்திருக்கின்றன.

இவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை எனது நண்பர் முன்பே கூறியிருந்ததால் அவுஸ்திரேலியாவில் வாழும் ஒருவரிடம் இவர்களுக்கு உதவ முடியுமா என்று கேட்டிருந்தேன். ஆம் என்று பதில் கிடைத்தது.

இன்று அவர்களின் குடும்பத்திற்கு  சிறுகைத்தொழில் முயற்சி ஆரம்பிப்பதற்கான  உபகரணங்கள் இரண்டு கொள்வனவு செய்யப்பட்டு, அவர்களை முறையான பயிற்சிவகுப்பிற்கு அனுப்பி, அவர்களை மேற்பார்வைசெய்து மேலும் வளர்ச்சியடைய உதவுவதற்குகான அறிவுரையாளாகளை ஒழுங்கு செய்து அவர்களின் வாழ்வினை சற்றே மாற்ற முடிந்திருக்கிறது. குழந்தைகள் பாடசாலைக்குச் செல்கிறார்கள்.

இவர்களும் ஏனைய முன்னாள் போராளிகளுடன் நாம் சென்றிருந்த சுற்றுலாவிற்கு வந்திருந்தார்கள். கணவனை சிறு பிள்ளையைப் போல் பராமரிக்கும்  மனைவின்  மனப்பாங்கும், தாயார் தந்தையாரை கவனிக்கும் நேரங்களில் தன் இரண்டு சிறிய தங்கைகளையும் 9 வயதேயான பெண்குழந்தை கவனித்துக்கொண்ட விதமும்  சுற்றுலா சென்றிருந்த எல்லோரையும் கவர்ந்தது. கணவன், குழந்தைகள் என்று அந்தப் பெண் எப்போழுதும் அயராது உழைத்துக்கொண்டே இருந்தார்.

நாம் புறப்பட்ட போது வீதி வரை வந்த அந்தப் பெண் ” உங்களின் உதவியால் இனி என்ட பிள்ளைகள் பட்டினி கிடக்காதுகள் அண்ணண்” என்ற போது, அது என்னால் அல்ல, அது உங்களுக்கு உதவி செய்த குடும்பத்தினரையே சாரும் என்றபடியே மோட்டார் சைக்கிலில் ஏறிக்கொண்டேன்.  மனதுக்குள் இனம்புரியாதவொரு அமைதி குடிவந்திருந்தது. நண்பர் மட்டக்களப்பை நோக்கி மோட்டார்சைக்கிலை செலுத்திக்கொண்டிருந்தார். தூரத்தே நிலவு தெரிந்துகொண்டிருந்தது.


No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்