கடலில் காவியமான அப்பாவுக்காய் காத்திருக்கும் பாலன்

இந்தப் படத்திலிருப்பர்கள் இக்கதையின் உரிமையாளர்கள்
...................................................................................

நாளை காலை நாம் நீண்டதொரு பயணம் செய்கிறோம். ஏறத்தாள 3 மணிநேரம் மோட்டார்சைக்கில் பயணம்.  எனவே மனதையும் உடலையும் தயாராக வைத்திருங்கள் என்றார், எனது வழிகாட்டி.
 
கடந்த சில நாட்களாக இவருடனே எனது காலம் கடந்து கொண்டிருக்கிறது. ஏழ்மையிலும் சேவையையும் நேர்மையும் கொண்டிருக்கும் இம் மனிதரை எனக்கு மிகவும் பிடித்துப்போயிருக்கிறது. அவரின் கருத்தை உள்வாங்கியபடி ”சரி” நாளை காலை சந்திப்போம் என்றபடியே விடைபெற்றுக்கொண்டேன்.

மறு நாள் காலை 7 மணியளவில் அவரின் மோட்டார்சைக்கில் மட்டக்களப்பு, பிள்ளையாரடி, ஏறாவூர், சித்தாண்டி என்று கடந்து கொண்டிருந்தது. காலைப்பொழுதில் கடந்து போன பஸ்கள், பாடசாலை மாணவர்கள் என்பன எனது பால்யத்தை நினைவுபடுத்த அவற்றில் லயித்தபடியே இடைக்கிடையே போத்தலை எடுத்து நீர் அருந்தியபடியே மோட்டார் சைக்கிலில் குந்தியிருந்தேன். வீதிகள் மிகவும் அழகாக செப்பனிடப்பட்டிருந்தன.

நண்பர் இடையிடையே ஹெல்மட்டுக்குள் தொலைபேசியை சொருகிக்கொண்டபடியே பேசிக்கொண்டிருந்தார். பாசிக்குடாவுக்கு செல்லும் வீதியையும் கடந்து சென்று கொண்டிருந்த போது எம்மை நிறுத்தினார்கள் வீதிக் கண்காணிப்பில் இருந்த போலீசார். நண்பரிடம் வாகனத்திற்கான பத்திரங்களை பரிசோதித்த பின் எம்மை தொடர்ந்து செல்ல அனுமதிததனர்.

நேற்று எமக்குக் கிடைத்த ஒரு தொலைபேசிச் செய்தி, மட்டக்களப்பில் இருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு இடத்தில் ஒரு கேர்ணல் தரத்திலான போராளியின் குழந்தையும் மனைவியும் மிகுந்த வறுமையில் வாழ்கிறாகள் என்று அறியக்கிடைத்தது. அவரின் குடும்பத்தில் 5 உறுப்பினர்களை அவர்கள் இறுதியுத்தத்தில் இழந்திருக்கிறார்கள். அவர்களைச் சந்திப்பதற்காகவே நாம் சென்றுகொண்டிருக்கிறோம்.

மனம் இனம்புரியாதவோர் வெறுமையில் உளன்றுகொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக கேட்டும், பார்த்தும், உணர்ந்தும் கடந்துவந்த மனிதர்களின் கதைகள் என்னை பலமாகவே உலுக்கியிருக்கின்றன. எவருடனும் மனம் விட்டு பேச முடியாததால் மனதுக்குள் பெரும் பாரம் கனத்துக்கொண்டிருக்கிறது. சந்தித்த குழந்தைகளின் கண்களும், அவற்றின் ஏக்கங்களும் அடிக்கடி மனக்கண்ணில் வந்துபோகின்றன. ஒரு வித இயலாமையை, வெறுமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு மணிநேர பயணத்தின் பின் ஒரு கடையில் நிறுத்தி குளிர்பானம் அருந்தி களைப்பை தீர்த்துக்கொண்டோம். மீண்டும் நீண்டதோர் பயணம். ஏறத்தாள 11மணிபோல் அவர்களின் வீடு இருந்த இடத்திற்கருகில் மோட்டார்சைக்கிலை நண்பர் நிறுத்தினார்.  வீட்டை விசாரித்து அறிந்துகொண்டோம். நாம் அங்கு சென்று போது இரண்டு பெண்கள் எம்மை வரவேற்று அவர்களின் குடிசையினுள் அழைத்துச்சென்றனர். என்னால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. மேலிருந்து தகரத்தினூடாக வெப்பம் தகித்துக்கொண்டிருந்தது. குடிசைக்கு வெளியிலும் அமர்ந்திருக்க முடியாது. காரணம்  உளவாளிகளின் கண்கள் எங்கிருக்கும் என்று எவருக்கும் தெரியாத நிலை அங்கிருந்தது. எனவே எம்மை அவர்களின் குடிசையினுள்ளேயே இருக்கும்படியே கேட்டுக்கொண்டார்கள்.

வியர்வையில் நனைந்து கொண்டிருந்தேன். மிகவும் அசௌகரீயமாக இருந்தாலும் அவர்களின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. அந்த குடிசையில் 3 குழந்தைகள், மூன்று தாய்மார், அவர்களின் தங்கை, அவர்களில் ஒருவரின் கணவர் 8 மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள். நிலம் கழிமண்ணினால் அமைக்கப்பட்டிருந்தது. சுவாமியறையில் சுவாமிகளுடன் பல மனிதர்களின் படங்களும் இருந்தன. குழந்தைகள் ஓடித்திரிந்துகொண்டிருந்தாகள். ஒரு அடைக்கோழி வீட்டுக்குள் வரமுயற்சித்துக்கொண்டிருந்தது. அவர்கள் அதை கலைத்துக்கொண்டிருந்தார்கள்.

குழந்தைகளுடன் மெதுவாய் நட்பாகிப்போனேன் எனது வழிகாட்டி நண்பரை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அவரை அண்ணண் அண்ணண் என்று அவர்கள் உரிமையுடன் கொண்டாடியது என் மனதுக்குள் சற்று பொறாமைய் தந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அவர் அவர்களுடன் பல காலம் வாழ்ந்திருக்கிறார். ஆனால் ஏறத்தாள 10 வருடங்களின் பின் இன்று சந்திக்கிறார்.

நண்பர் மெதுவாய் பேச்சை ஆரம்பித்த போது ஒரு பெண் அழுதபடியே தனது கதையைக் கூறத் தொடங்கினார். வன்னியில் வாழ்ந்திருந்த காலத்தில் அவாகள் குடும்பத்தில் மூவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இரண்டு மாப்பிள்ளைகள் போராளிகள். ஒருவர்  மிக உயர்ந்த பதவியில் இருந்தவர். பெற்றோர்கள் மற்றும் 6 சகோதர சகோதரிகளுடன்  வாழ்திருக்கிறார்கள். திருமணமான ஒருவருக்கு  முதுப்பகுதியில் குறைபாடு இருக்கிறது. எனவே அவரை அவரின் நெருங்கிய உறவின‌ரே திருமணம் செய்திருக்கிறார்.

இந்தக் குடும்பத்தில் தற்போது இரண்டு முன்றரை வயதுப் பாலகர்கள் இருக்கிறார்கள். அதாவது 2009ம் ஆண்டு ஆரம்பத்தில் பிறந்த குழந்தைகள். முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்து குழந்தைகள். இந்த இரண்டு குழந்தைகளினதும் தந்தையர்களில் ஒருவர் இறுதி யுத்தத்திலும், ஏனையவர் இறுதியுத்தத்தின் போது கடலிலும் உயிரிழந்தவர்கள். கடலில் இறந்தவரின் உடலம் கிடைக்கவில்லை.

இக்குடும்பத்தாரின் பெற்றோரும் இரண்டு சகோதரிகளும் முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு கப்பலில் வரும் போது கடற்படையினரின் தாக்குதலில் உயிர‌ிழந்துள்ளனர். அவர்கள் ‌தம்முடன் வைத்திருந்த காணி உறுதிகள், நகைகள், பணம் அனைத்தையும் கடல் எடுத்துக்கொண்டிருக்கிறது.

ஒரு சகோதரியும் கணவனும் முள்ளிவாய்க்கால் காலங்களின் பின்பு செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் ஏனைய குடும்பத்தினருடன் இணைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் பூர்வீக நிலம் அரசால் பறித்தெடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவரை ஒரு திருச்சபை பொறுப்பெடுத்து தங்குமிட வசதியும் கல்வியும் பெற்றுக்கொடுக்கிறார்கள்.

கடலில் காணாது போன கணவர் வருவார் என்ற நம்பிக்கையில் ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எனது நண்பரின் கூற்றுப்படி அவர் தப்பியிருந்தால் எப்படியாவது தொடர்புகொண்டிருப்பார் என்றும் கைது செய்யப்பட்டிருந்தால் ”நிட்சயாமாய் உயிருடன் வெளியே விட முடியாதவர்களின் பெயர்ப்பட்டியிலில் அவர் பெயர் இருப்பதால் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்றும் கருதுகிறார்.

குழந்தையிடம் அப்பா எங்கே என்றால் கடலில் நிற்கிறார் என்று பதிலளிக்கிறான். அதையே தாயாரும் விரும்பகிறார். தாயாரின் சுயநம்பிக்கை பெரிதும் காயப்பட்டிருக்கிறது. நாம் அங்கு நின்றிருந்து முழுநேரமும் அவர் கண்கலங்கியபடியே நின்றிருந்தார்.

இவர்களின் குடும்பத்திற்கு  அரசு தண்ணீர் இல்லாத ஒரு குடியேற்றத்தில் நிலம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது. அந்துக் குடியேற்றத்தில் நீர் வசதி இல்லை என்ற காரணத்தினால் அங்கு எவரும் குடியேறவில்லை. தமது கட்டளையை மறுத்ததால் இலவகமாகக் கொடுத்த உணவுப்பொருட்களையும்  அரசு நிறுத்தியிருக்கிறது.

தற்போது சகோதரி ஒருவரின் கணவர் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி விற்பனை செய்து உழைக்கும் 450 ரூபாயிவில் அக்குடும்பத்தின் உள்ள 8 மனிதர்களின் தினசரி வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது.  வறுமையின் காரணமாக குழந்தைகளின் கல்வி, ஒரு சகோதரியின் கல்வி என்பன தடைப்பட்டுவிடும் அபாயம் தேவைக்கு ‌அதிகமாகவே இருக்கிறது.

நாம் அங்கு தங்கியிருந்த இரண்டு மணிநேரத்தில் வீட்டில் இருந்த ஒரு கோழி அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்தது. கீரை, முருக்கங்காய் ஆகியவற்றுடன் நாட்டுக்கோழிக்கறியுடன் அன்பும் கலந்து பரிமாறினார்கள். அமிர்தமாய் இருந்தது உணவு.

இவர்களிடம்  நாம் செல்வதற்கு முதலே இவர்களின் பிரச்சுனைகளை நான் அறிந்திருந்ததால், நோர்வேயில் இருந்த ஒரு நண்பரிடம் இவர்களுக்கு உதவமுடிமா என்று கேட்டிருந்தேன். ஆம் என்று அவர் கூறியிருந்தார் எனது நண்பர்.

கல்விகற்பதற்கு வசதியாக முதலில் இவர்களை அந்த இடத்தில் இருந்து இடம் பெயரச்செய்து, வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை திடப்படுத்த ஒரு கைத்தொழில் முயற்சியையும் உருவாக்கித்தர எனது நண்பர் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார். வாடகை வீடுகளின் முற்பணம் ஏறத்தாள 120.000 ரூபாக்கும் அதிகமாக இருக்கிறது. 3 தொழிலாளர்களை உள்ளடக்கிய கைத்தொழில் ஆரம்பிக்க ஏறத்தாள 75.000 ரூபாயும், அதுவரை அவர்களின் வாழ்வாதரத்திற்கு குறிப்பிட்ட ஒரு தொகை என அவர் அந்தக் குடும்பத்திற்கு செய்யும் உதவி அளப்பெரியது.  திருச்சபையில் பாதிரியாரின் கவனத்தில் வளரும் அவர்களின் தம்பியும் இன்னும் சில நாட்களில் அவர்களுடன் வாழத் தொடங்கிவிடுவார். 3 குழந்தைகள், 6 வளர்ந்தவர்களின் வாழ்க்கைச் சுமையை ஏற்றுக் கொண்ட அந்த நண்பரின் மனிதநேயம் மிகப்பெரியது. அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. இப்படியான நண்பர்களைப் பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு நான் இன்னொருவரிடம் உதவி கேட்டபோது நான்  புதிய கார் வாங்கவேண்டும் நீ எனக்கு உதவுகிறாயா என்று நக்கலாக கேட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். மனிதர்களின் மனம் விசித்திரமானது.

இவர்களை சந்தித்து சில நாட்களின் பின் நான் சந்தித்த முன்னாள் போராளிகளை அழைத்துக்கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம். அந்தச் சுற்றுலாவின் போது நாம் கடலில் குளிப்பதாகவும் ஒப்பந்தமாகியிருந்தது. இன்று நான் சந்தித்த குடும்பத்தில் இருந்து கடலில் காவியமான தனது அப்பாவுக்கு என்று இரண்டு காகிதக் கப்பல்களுடன் வந்திருந்தான் அவரின் மகன். நானும் அவனும் இந்து சமுத்திரத்தில் இரண்டு கப்பல்கள் விட்டோம்.

குழந்தைகள் கடலுடன் விரைவில் நட்பாகிப்போனார்கள். ஆனால் அந்தக் குடும்பத்தின் இருந்த வளர்ந்தவர்களுக்கும் கடலுக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளியே இருந்தது. அவர்களில்  ஒருவர் கடலை நம்ப மறுத்தார். தனது குழந்தையை கரையில் இருந்து குளிக்கவும் அவர் அனுமதிக்க மறுத்தார். பலத்த சிரமத்தின் பின் அவர் அவரது தம்பியின் கையை பற்றியிருக்க நாம் பலர் குழந்தைக்கு அருகில் அரண்போல் நின்றிருக்க குழந்தையின் கையைப் பிடித்தபடியே அவனை குளிக்க அனுமதித்தார். சற்று நேரத்தில் குழந்தை கதறக் கதற  உடைமாற்றி அவனை கடல் மண்ணிலேயே உட்கார்த்தி வைத்திருந்தார்.

ஏன் அவனை இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் கடலில் குளிக்கவிடுகிறீர்கள்  , இல்லை என்று கேட்டேன். ” அண்ணண், என்ட குடும்பத்தில இருந்து 5 உறுப்பினர்களை இந்தக் கடல் எடுத்திருக்கிறது. நான் கடலை நம்புவதற்கில்லை என்றார். எதுவும் பேச முடியவில்லை என்னால்.

அவர்களுடன் உணவருந்தி உரையாடிக்கொண்டிருந்த போது அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு நண்பர் முன்வந்துள்ள‌தை அறிவித்தேன். மகிழ்ச்சியும் ஆனால் சிறு அவநம்பிக்கையும் தெரிந்தது அவர்களிடம். வாக்குறுதிகளை நம்பி நம்பி ஏமாந்த மனிதர்களின் அவநம்பிக்கை அது என்பதை புரிய அதிக நேரம் நேரம் செல்லவில்லை எனக்கு. சில நாட்களின் பின் நண்பரின் உதவி அவர்களை சென்றடைந்ததும் அவர்களின் அந்த அவநம்பிக்கை அகன்று போனது.

மதியம் போல் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டோம். வெளியே வெய்யில் அனல் போல் காய்ந்துகொண்டிருந்தது. நண்பர் மோட்டார்சைக்கிலை இயக்கினார். பின்னால் குந்திக்கொண்டேன். சற்றுத் தொலைவில் ஒரு குடிசையின் வாயிலை அடைத்தபடியே கைகாட்டிக்கொண்டிருந்தனர் 8 மனிதர்கள்.

நண்பர் புழுதியை சுவாசித்தபடியே கடமையில் கண்ணாயிருந்தார். இன்னொரு மனிதரினூடாக இவர்களின் வறுமைக்கும், துன்பங்களுக்கும் ஓரளவாவது உதவ முடிந்த மகிழ்ச்சியில் என் மனம் பெரும் மகிழ்ச்சியில் இருந்தது.




1 comment:

  1. நம்ப முடியாத கடலுடன் இன்னும் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் உள்ளங்களுக்கு சலூட்

    ReplyDelete

பின்னூட்டங்கள்