ஊரின் அடையாளம்

ஏறத்தாள 19 - 20 வருடங்களுக்கு முன்னும் நான் ஒஸ்லோவில் வாழ்ந்திருந்தேன். அக் காலத்தில் எனக்கு இரண்டு பொழுதுபோக்குகளே இருந்தன. ஒன்று கால்பந்தாடுவது மற்றையது புகைப்படமெடுப்பது. வடக்கு நோர்வேயில் 1988ம் ஆண்டு மொழிக்கல்வி கற்கையில் புகைப்படக் கலையையும் கற்றேன். 1990 களில் ஒஸ்லோ புகைப்படக்கலைஞர் சங்க அங்கத்தவனாகவும் இருந்‌தேன்.

அந்த நாட்களில் ஒஸ்லோவின் முக்கிய வீதியான ”கார்ல் யுஹான்ஸ் காதா” இன் ஆரம்பத்தில் ஒரு கமரா கடை இருந்தது. அது ஒன்று தான் ஒஸ்லோவிலேயே இருந்த பெரிய கடை. எத்தனையோ மணிநேரங்களையும், தேவைக்கு அதிகமான பணத்தையும் அந்தக் கடையில் செலவழித்திருக்கிறேன். பல ஆண்டுகளின் பின் நான் மீண்டும் ஒஸ்லோவுக்கு குடி வந்த போது அக் கடை காணாமல் போயிருந்தது.

இன்று புறநகர்ப் பகுதியொன்றினூடாக நடந்து கொண்டிருந்தேன். திடீர் என ஒரு கமரா கடை கண்ணில்பட்டது. முன்பு இருந்த கடையைப் போல் பெரிய கடையாகவும் புகைப்படக்கலைக்குத் தேவையான சகல பொருட்களையும் கொண்டிருந்தது அக்கடை. நேரக் குறைவினால் உட்புக முடியவில்லை. இடத்தை மனத்தில் குறித்துக் கொண்டேன்.

இன்று 1990களில் என்னை ஆட்கிரமித்திருந்த புகைப்படக் கலையைப் பற்றிய பழைய நினைவுகள் மனதை நிறைத்திருந்தன. ஒவ்வொரு கிழமையும் நடக்கும் கருத்தரங்குகள், பயிட்சிவகுப்புக்கள், கறுப்பு வெள்ளை வேர்க்சொப்கள், போட்டிகள், உரையாடல்கள், சுற்றுலாக்கள் என எத்தனையோ விதமான நிகழ்வுகள்.

ஒரு முறை ”ஓஸ்லோவின் அடையாளம்” என்னும் தலைப்பில் ஒரு புகைப்படக் கண்காட்சிக்கு வேறு இரண்டு நண்பர்களுடன் படம் எடுக்கவேண்டியதாயிற்று. நாம் எதை படம் எடுத்தாலும் எதுவும் திருப்தியாய் வரவில்லை. அந்த நேரத்தில் தான் அந்தப் வயதான பெண்மணி என்னைக் கவர்ந்தார். அவரை ஓஸ்லோவில் காணாதவர்கள் இருக்கவே முடியாது. மிகவும் வயதானவர். ராமாயணத்தில் வரும் கூனியின் முதுகை விட இவரது முதுகு கூனியது. கையில் எப்போதும் 5க்கும் அதிகமாக பிளாஸ்டிக் பைகளுடன் நடந்து திரிவார். தனக்குத் தானே உரத்துப் பேசிக்கொண்டு ‌மிக மிக மெதுவாய் ஒஸ்லோவின் மையப்பகுதியை வலம் வருவார். வீதியில், குப்பைகளில் உள்ள பழைய போத்தல்களை சேகரித்துத் திரிவார். பிச்சையும் கேட்பார். அவரின் பெயர் ”ஓகோத்” என்று பின்பு அறியக்கிடைத்தது. அவர் தினமும் தேவாலயத்திற்குச் சென்று நேராகவே யேசுவின் சிலைக்கருகில் நின்று பிரார்த்தனை செய்த பின்பே வீடு திரும்புவார். அவரின் நடுங்கிய குரல் இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.

இவரே ஒஸ்லோவின் அடையாளம் என எனக்குத் தோன்றுவதாக நண்பர்களிடம் சொல்லிய போது அவரை அவர்களுக்கு தெரிந்திருந்ததால் அவர்களுக்கும் எனது தெரிவில் ஆட்சேபனை இருக்கவில்லை. அடுத்த வந்த நாட்களில் அவருடன் கதைத்து எமது எண்ணத்தைச் சொன்னோம். சிரித்தபடியே ஓம் என்றார். பல இடங்களில் அவரின் பின்னால் திரிந்து படம் எடுத்தோம். வீதியில், கடையில், தேவாலயத்தில் என்று படம் பிடித்தோம். அவ்வருடக் கண்காட்சியில் எமக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. அத்தோடு நாடு தளுவிய பத்திரிகை ஒன்று எம்மை அந்த மூதாட்டியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதக் கேட்டு அதை நாம் தயாரித்துக் குடுத்தபோது நடுப்பக்கத்தில் பிரசுரித்திருந்தது.

அக் கட்டுரைக்காக அவரைப் பேட்டி கண்டபோது அவர் கூறிய கதை எம்மை மிகவும் மனவேதனைப்பட வைத்தது. இரண்டாம் உலகமாகா யுத்தத்தின் போது சுவீடனில் வேலைக்காரியாக பணிபுரிந்திருக்கிறார். அக்காலத்தில் மிகுந்த மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். பிற்காலத்தில் ஒஸ்லோவில் ஒரு மனநல மருத்துவமனையில் Lobotomy என்றும் மூளைச் சத்திரசிகிச்சை மூலம் அவரின் நினைவுகளை அழிக்க முனைந்திருக்கிறார்கள். இச்சத்திர சிகிச்சை பிற்காலத்தில் தடைசெய்யப்பட்டது. தவிர இச் சத்திர சிகிச்சைக்கு உட்பட்டவர்களுக்கு நோர்வே அரசு பிற்காலத்தில் நட்டஈடும் வழங்கியது. இவர் தனது 74ம் வயதில் ஒஸ்லோவில் இறந்தார் என இன்று இணையத்தில் வாசித்தேன்.

இன்று அவரைப் பற்றி இணையத்தில் தேடினேன். ”ஓஸ்லோவின் அடையாளங்கள்” என்று 2008ம் ஆண்டு வெளியிடப் பட்ட புத்தகத்தில் அவரைப்பற்றி எழுதியிருந்தார்கள். பிரபல ஒஸ்லோ மக்கள், அறிவாளிகள், கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் இவரையும் மதித்து அவரும் ”ஓஸ்லோவின் அடையாளம்” என்று எழுதிய எழுத்தாளரின் மனிதநேயம் பற்றி நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?

1990 இல் நாங்கள் அவரை ஓஸ்லோவின் அடையாளம் என்றோம். 2008 இல் ஒரு ஓஸ்லோவின் அடையாளங்கள் என்னும் புத்தகத்தில் பலரில் ஒருவராய் அவர் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறார். எனக்கு பெருமையாயிருக்கிறது.

இன்றைய நாளும் நல்லதே.


.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்