50 % கழிவில் ஒரு பெண்ணும் எனது அனுபவமும்

எச்சரிக்கை: பதிவு, தலைப்பைப் போல் கிளர்ச்சியூட்டக்கூடியது அல்ல.

--------------------------------------------------

லண்டனில் நான் நின்றிருந்த போது எனக்கு சில உடைகள் வாங்க வேண்டியிருந்தது. ஆனால் கடைக்குப் போவது என்றால் நமக்கு இரத்தக்கொதிப்பு தானாகவே ஏறும். குழந்தைகளுடன் கடைக்குப் போனாலும் இளையவளுடன் கோப்பி சொப்பிலும், ஐஸ்கிறீம் கடையிலும், கணணி, ‌அலைபேசி கடைகளில் காலத்தை கடத்திவிடுவேன். ஆனால் இம்முறை நான் தனியே போகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது. தவிர எனக்கு இதை வாங்கு, அதை வாங்கு என்று அறிவுரை சொல்லவும் எவருமில்லை. என்னை நினைக்க எனக்கே பாவமாய் இருந்தது.

பஸ் எடுத்து, பின்பு டிராம்ப் வண்டி எடுத்து ஒரு பிரபல்யமான கடைத்தொகுதியில் இறங்கிக் கொண்டேன். நிமிர்ந்த போது கண்ணின் முன் இருந்த விளம்பரத்தில் அரைகுறை ஆடையில் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. அவளின் கையில் 50 வீத கழிவு என்று இருந்தது. ஆனால் கழிவு அவளுக்கா அல்லது அவள் போட்டிருந்த உடைக்கா என்பது  விளக்கமில்லாமலிருந்தது.

மெதுவாய் நடந்து கடைத் தொகுதிக்குள் புகுந்தேன் 5 நிமிடங்கள் நடந்திருப்பேன் திருவிழாவில் தொலைந்த குழந்தையின் மனநிலை குடிவந்திருந்தது எனக்கு. எங்கும் மனிதர்கள், எதிலும் 30 - 50 வீதக் கழிவு, ஓளிரும் நத்தார் சோடனைகள், அலரும் ஒலிபெருக்கி என்றிருந்த போது நான் என்னைத் தொலைத்திருந்தேன். அதைவிட அந்த கடைத் தொகுதியை எப்படி சுற்றினாலும் உலகத்தை சுற்றுவது போல் அதை இடத்துக்குகே வந்து சேர்ந்தேன்.

நிலமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு ஒதுக்குப்புறத்தில் போய் நின்று கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வீட்டுக்குப் போகலாம் என்றது மனது. சீச்சீ.. இந்த சவாலை நீ வென்றே ஆக வேண்டும் என்று உள்ளிருந்து கத்தியது எனது மற்றொரு மனது. நிமிர்ந்து பார்த்தேன். Nike நிறுவனத்தாரின் Just Do It விளம்பரம் கண்ணில் பட மனம் ஒரு தீர்மானத்துக்கு வந்த போது பக்கத்தில் இருந்த கடையின் பெயர் New look என்றிருந்தது. சகுனம் நன்றாயிருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டேன்

சேட் வாங்க வேண்டும் என்பதால் Marks & Spencer கடைக்குள் புகுந்தேன். முருகா.. அது கடையா? விளையாட்டு மைதானம் மாதிரியல்லவா இருந்தது . பலத்த முயற்சியின் பின் ஒரு விதமாக சேட் இருந்த பகுதியை தேடிப்பிடித்தேன். 50 வீத கழிவின் பின் சேட்களின் விலை 30 பவுண்களாக இருந்தது. என்னை விற்றாலும் இந்தளவு பணம் வராதே என்று நினைத்துக் கொண்டே கடையை விட்டு வெளியேறும் வழியைத் தேடி, ஏறக்குறைய 20 நிமிடங்களின் பின், விற்பனையாளர் ஒருவரின் உதவியுடன் கடையை விட்டு வெளியேறிய போது நான் ஒரு நடைபாதையில் நின்றிருந்தேன்.

அருகில் ஒருவர் ஏதையோ கூவிக் கூவி விற்றுக்கொண்டிருக்க அவரைச் சுற்றி ஒரு கூட்டம் நின்றிருந்தது. ஏதும் லேகிய வியாபாரமோ என்று எட்டிப் பார்த்தேன். அங்கு ஒருவர் கையை அங்கும் இங்கும் ஆட்டியபடியே ஒரு சமயத்தை விற்றுக் கொண்டிருந்தார். அருகிலேயே இன்னொரு மதத்தினர் கூடாரமடித்து தங்கள் சமயத்தை பரப்பிக் கொண்டிருந்தனர். கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமல்லவா.

இருவர் கட்டிப்பிடித்தபடியே என்னைக் கடந்து போயினர். மெதுவாய் இருட்டு இந்தத் தெருவை விழுங்கிக்கொண்டிருந்தது. என்னை நோக்கி ஒருவர் சிரித்தபடியே வந்து  உங்களுக்கு ‌உதவி செய்யப்போகிறேன் என்றார்.  எனக்கா என்றேன் ஆச்சர்யத்தில். ஆம் குறைந்த வட்டியில் கடன் தருகிறேன் என்றார். நான் வெளிநாட்டவன் இருப்பினும் உங்கள் நாட்டின் பெருந்தன்மையை மதிக்கிறேன், விபரத்தைக் கூறுங்கள் என்றேன். நீங்கள் வெளிநாடா.. மன்னியுங்கள் கடன் தர முடியாது என்றார். ”இத முன்னமே சொல்லியிருக்கலாமுள” என நான் எனக்குள்ளேயே சொல்லிய படியே நகர்ந்து கொண்டேன்.

நீர் முட்டி என்னை உடனே வெளியேற்று என்று கத்திற்று. கழிப்பறை தேடிப்போனேன். ஒரு இடம் பிடித்து ஒழுங்களை செய்து கண்ணை முட எத்தனிக்கிறேன் அருகில் வந்து தன் வேலையை தொடங்கினார் ஒருவர். எனக்கு தனியே இருக்காவிட்டாவிட்டால் ஒன்றும் வராது. அவர் போகும் வரை காத்திருந்தேன். விரும்பியபடிய புறப்பட்டார் அவர், மிக விரைவாய். மீண்டும் கண்ணை முடி நீரை ‌வெளியே அழைத்து வந்த போது இன்னொருவர் ”சிப்” களட்டும் சத்தம் கேட்டது. இப்படியே பலர் வந்து போக என்னால் பொறுக்க முடியாமல் வந்ததை அடக்கிக் கொண்டு கதவு வைத்த கழிவறைக்காக காத்திருந்‌தேன்.  ஒருவர் வெளியே வர, மூக்கை மூடிய படியே உள்ளே புகுந்து வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன்.

அருகில் ஒரு Mac கணணிக்கடை இருந்தது.  நாய் எதையோ கண்டால் காலைத் தூக்குமல்லவா அதே போல் எனது கால்களும் என்னையறியாமலே அக் கடைக்குள் என்னை அழைத்துச் சென்றது. விற்பனையாளர் ஒருவர் ஒரு பாவனையாளனின் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்க சிறிய சிறுமி ஒருத்தி நுனிக்காலில் நின்றபடி கண்ணுக்குத் தென்படாத கணணியில் விரலை அடித்தபடியே வியையாடிக் கொண்டிருந்தாள். கடையே அவளால் அழகாகியது.

கடையை விட்டு வெளியேறினேன். ஒரு நாய் ஒரு ஸ்லீபிங் பாக் இனுள் உட்கார்ந்திருந்தபடியே தூங்க் கொண்டிருக்க உரிமையாளரும் அருகில் குந்தியிருந்தார். அவர்களை கடந்து அப்பால் செல்லும் போது கிளர்ச்சியூட்டக் கூடிய வகையான உடைகள் அணிந்தபடியே ஒரு பெண் சிலை ஒன் றை கண்ணாடிக்குள் நிறுத்தியிருந்தனர். கடக்கண்ணால் பார்த்தபடியே கடந்து போனேன்.ஆனால் அவளால் என்னை கிளர்ச்சியடைவைக்க முடியவில்லை.

ஒரு கடையின் ஓரத்தில் ஒருவர் ஒரு மாதிரியாக நெளிந்தபடி நின்றிந்ததை அவதானித்தேன். உன்னிப்பாக பார்த்த போது இடுப்புக்கு கீழேயும் இரண்டு பின்னந் தொடைகளுக்கு மேலேயும் இருக்கும் பள்ளத்தாக்கில் கையை விட்டு தன்னை மறந்து சொறிந்து கொண்டிருந்தார். அவரவர் பிரச்சனை அவரவருக்கு.

கண்முன்னே Poison, BOSS, Forbidden Planet, Shu Shop  என கடைகளின் பெயர்கள் தெரிந்தன. ரூம் போட்டு போசிப்பாங்களோ கடைக்கு பேர் வைக்கமுதல்? Poison என்னும் கடைக்கருகில் Oxygen என்றும் கடை இருந்தது வியப்பாக இருந்தது. Poison கடைக்குள் போய் வருபவரின் உயிரைக் காப்பாற்ற Oxygen வைத்திருக்கிறார்களோ என்னவோ?

அவற்றிற்கருகில் ஒரு PUP இருந்தது. அது என்னைப் போன்றவர்களின் PUP என்பதற்கு ”The Ship Of fools” Pup என்னும் அதன் பெயரே சாட்சியாக இருந்தது.

இப்படியே நடந்து ஒரு கடைக்குள் புகுந்து 2 சேட்களை பார்த்து எடுத்துக் கொண்டு பணம் செலுத்த பெண்களின் உடைகள் இருந்த பகுதியை கடந்த போது அருகில் மிக இரகசியமான குரலில் ஒரு பெண்ணின் குரல்
”இங்காருங்கோ! நான் 30 சைஸ் எடுக்கட்டோ என்று கேட்டது. மெதுவாய் எட்டிப் பார்த்தேன். அருகில் மறுபக்கத்தில் ஒரு தமிழ் சோடி நின்றிருந்தது. கல்யாணமாகி 10 - 15 வருடங்கள் இருக்கக்கூடிய வயதாயிருந்தது அவர்களுக்கு. அந்தப் பெண்ணின் கேள்விக்கு ஒரு பெரிய நக்கல் சிரிப்பு பதிலாக் கிடைக்க அப் பெண் ”என்ன சிரிக்கிறீங்கள்” என்றார் அப்பாவியாய். உமக்கு 38 ல எடும் இல்லாட்டி வண் சைஸ் இடுப்புள்ள காற்சட்டை எடும் என்றார் கணவர்.  அப் பெண்ணின் கண்களுக்கு எரிக்கும் சக்தி இல்லாமல் போனதால் என்னுயிரும் கடையும் தப்பியது.அவர் வீட்டில் தப்பியிருக்கமாட்டார்.

பசியெடுத்தது. ஒரு கோப்பியும், சொக்லேட் கேக்உம் சாப்பிட்டேன். இருப்பினும் உட்சாகம் திரும்பவில்லை. நடந்து கால் வலித்தது. மெதுவாய் வீடு நோக்கித் திரும்பினேன். ஒரு கடையை கடந்தபோது 75 வீத கழிவில் வாசனைத் திரவியம் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. புகுந்து பார்‌த்தேன். வாசனை மனதை கொள்ளை கொண்டு போயிற்று. ”யாமம்” என்னும் வாசனைத்திரவியத்தை அடிப்படையாகக் கொண்ட எஸ். ராமகிருஷ்ணனின் ”யாமம்” நாவல் நினைவிலாடியது.  75வீத கழிவின் பின் 15 பவுண்கள் என்றார்கள். வாங்கி வைத்துக் கொண்டேன்.

புத்தகக் கடைக்குள் புகுந்தேன். சிறிது காலமாக மூத்தமகளுக்கு புகைப்படக்கலையில் ஆர்வம் வந்திருப்பதால் அது பற்றிய ஒரு புத்தகம் வாங்கிக் கொண்டேன். அக் கடையில் மருந்துக்கு கூட ஒரு தமிழ்ப் புத்தகம் இருக்கவில்லை. எனக்கு Euro Million Lottery விழுந்தால் ஒரு தமிழ்ப்புத்தக்கடையை இங்கு திறப்பேன் என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். கடையின் கல்லாவில் நான் இருப்பது போல கற்பனையோடியது. எனக்குள் சிரித்தபடியே மெதுவாய் ட்ராம்ப்வண்டி எடுத்து பஸ் எடுத்து வீடு வந்தேன்.

என்னைக் கண்டதும் இளையவள் கையில் இருந்த பையைப் பறித்து நான் வாங்கிய shirtஐப் பார்த்தாள். அவளின் வாயில் இருந்து வார்த்தைகள் இப்படி சற்றுக் கோபத்துடன் வந்தது..

இதுவெல்லாம் ஒரு நிறமா? ஏன் பேப்பிள் நிறத்தில் வாங்கவில்லை?


அவள் எது சொன்னாலும் உண்மையாகத் தான் இருக்கும்.


பி.கு: அந்த கடைத்தொகுதி  இருந்த ஊரில் வசிக்கும் நண்பர் இதை வாசித்தால், நான் அவர் வீட்டுக்கு வரவில்லை என்றெல்லாம் கோவிக்கக் கூடாது.... ஆமா.


.

3 comments:

  1. ja ja, you did shoping,went to manmathan ambu lost the phone there, and found it, you have good time.

    ReplyDelete
  2. இன்றைய நாளும் நல்லதே இல்லையா சஞ்சயன்.

    ReplyDelete
  3. ஐயோ லண்டனில் நின்றபோது தொடர்புகொண்டிருக்கலாம் அண்ணா. அடுத்தமுறை வரும் போது சந்தியுங்கள்.

    என் கணிப்பின் படி நீங்கள் Croydon அல்லது டூட்டிங்கில் ஷொப்பிங் செய்திருப்பீர்கள்

    ReplyDelete

பின்னூட்டங்கள்