வாழவிடுங்கள் மற்றவரை


நம்மவர்களில் சிலருக்கு இன்னொருவரின் வாழ்க்கையை ரணப்படுத்திப் பார்ப்பதில் இருக்கும் ஆனந்தம் தமது செய்கையை சுயவிமர்சனம் செய்துகொள்வதில் துளியளவேனும் இல்லை. எனது நண்பர் ஒருவர் அனுபவித்த, அனுபவிக்கும் அவஸ்தயைப் பற்றிய க‌தை தான் இது.

அவர் எனக்கு அறிமுகமாகிய விதமும் சற்று வித்தியாசமானதே அம் மனிதரைப் போல. நண்பர் ஒருவர் தனது நண்பர் ஒருவருக்கு மாலை வரை தங்க இடம் வேண்டும் என்று கேட்டார். "அனுப்புங்கள்" என்ற போது 6 அடி உயரத்தில் கறுப்பு நிற உடம்புடனும் அதே நிற ஒரு பையுடன் வந்து இறங்கினார். பார்த்ததும் பிடித்துப்போயிற்று. ”தம்பிட  பெயர் என்ன?” என்ற பொழுது ஒரு உபகரணத்தின் பெயரைச் சொன்னார். என்னய்யா நக்கலா? என்றேன். ”இல்லை அண்ணணா.. சத்தியமா அது தான் தனது பெயர்” என்றார். நம்பினேன்.

தேத்தண்ணி குடித்தபடி தான் ஏன் வீடு ‌தேடுகிறார் என்னும் காரணத்தை விளக்கினார். இரத்த உறவுடன் தங்கியிருந்திருக்கிறார். பிரச்சனை துளிர் விட, இவருக்கு ரோஷம் பிய்த்துக்கொண்டு வர, வெளியேறி நண்பரின் உதவியுடன் தற்போது வீடு தேடிவருகிறார் என்றார்.

தங்குவதற்கு இடம் எடுத்துத் தாங்கண்ணா என்று கேட்டார். நான் தங்கியிருந்த வீட்டுக்காரிடம் கேட்டேன். எங்களுடனேயே தங்கட்டும் என்றார்  அவர். இருவராக இருந்த நாம் மூவராக மாறியிருந்தோம் சில மணி நேரங்களுக்குள்.

இதற்கிடையில் அவரின் சரித்திரம் பற்றி எனக்கு மிகவும் விளக்கம் அளித்திருந்தார் புதிய நண்பர். எமக்குள் 10 - 13 வயது வித்தியாசமிருக்கும். வாய்க்கு வாய் அண்ணா அண்ணா என்றார். நோர்வேக்கு வந்ததே பெரீய கதை. அதையும் சொன்னார். வன்னியின் ஒரு நகரத்தில் பெரும் செல்வாக்கு வாய்ந்த குடும்பத்தின் பிள்ளை. சொத்துக்கு அளவு கணக்கு இல்லை. தலைவரின் மீது இருந்த கண்மூடித்தனமான, விமர்சனமற்ற பக்தியை அவரின் கதைகளின் மூலம் அறிந்து கொண்டேன். தமிழின் பால் மிகுந்த பற்றும் ஆழ்ந்த அறிவும் இருந்தது அவரிடம். திருக்குறளை கரைத்துக் குடித்திருந்தார் என்பதை பின் வந்த நாட்களிள் நான் அறிந்து கொண்டேன்.

பாடசாலை நாட்களில் இவர் ஒரு வாத்தியாரின் மகா எரிச்சலுக்கு காரணமாயிருந்திருக்கிறார்.  பல்கலைக்கழகப் தேர்வுப் பரீட்சையின் போது நண்பருக்கு தனது விடைத்தாளை கொடுத்துதவியிருக்கிறார். அந்த எரிச்சலடைந்த  ஆசிரியர் இதைக் கண்டு கொண்டதால் தனது முழு எரிச்சலையும் இவ்விடத்தில் காட்டியதால் பரீட்சையில் இருந்து விலக்கிவைத்திருக்கிறார்கள். தனது ‌ஆசிரியர்களால் மாகாணத்திலேயே முதலிடத்தில் சித்தயடைவார் என எதிர்பார்க்கப்பட்டவராம். அந்த இடத்திலேயே அந்த ஆசிரியருக்கு  உன் முன்னேயே வாழ்ந்து காட்டுகிறேன் என்று சவால்விட்டு வந்திருக்கிறார்.

காலம் அவரை கணணித்துறையில் கற்பிக்கும் திறமையை கொடுத்திருக்கிறது. கல்விக்கந்தோரால் ஆசிரியர்களுக்கு கணணி கற்பிக்க அழைக்கப்பட்டிருக்கிறார். அங்கு அந்த ஆசிரியருக்கும் கற்பித்ததாக மிகவும் பெருமையாகச் சொன்னார். அந்த ஆசிரியர் குனிந்த தலை நிமிரவில்லையாம் அன்று.

குசினி என்றால் அது எப்படி இருக்கும் என்றறியாதிருந்தார். ‌தேத்தண்ணி போட, முட்டை பொரிக்க, சோறு வடிக்க, கோழிவெட்ட,  கறிவைக்க என எனக்குத் தெரிந்ததை பழக்கினேன். இரண்டே நாட்களில் என்னை விட மிக மிக அதிக ருசியில் சமைக்கப் பழகிக் கொண்டார்.  அண்ணண் நீங்க வைக்கிறதெல்லாம்  கோழிக்கறியா என்று ஒரு நக்கலும் விட்டார் ஒரு நாள். சமைப்பதில் மகா கில்லாடியாகினார், மிக மிக குறுகிய காலங்களில். எனக்கும் ஒரு பெரிய சிக்கல் தீர்ந்ததில் மகிழ்ச்சியே.

எமக்குள் அரசியல் சம்பந்தமாக கதை வந்தால் நான் அவரைச் சீண்டுவேன். எனது ஊரை வைத்து நக்கல் பண்ணுவார். நானும் திருப்பியடிப்பேன். எது எப்படியோ.. மனிதருக்கு ”தலைவர்” என்றால் பெரும் பக்தி இருந்தது. இப்போதெல்லாம் நாம் அரசியல் பேசுவதில்லை. இருந்தால் தானே பேசுவதற்கு.

அவருக்கு ஊரில் பெண் பார்த்திருந்தார்கள். விழுந்து விழுந்து உருகி உருகிக் கதைப்பார். நான் அவர் கதைக்கும் போது வந்தால் வெட்கப்படுவார். நான் சிரித்தபடியே... இதெல்லாம் சகஜமய்யா என்பேன்.

தம்பி உந்த கலியாண கூத்தெல்லாம் வேண்டாம். அண்ணண் சொல்லுறத கேளய்யா என்று சொன்னால்..  சிரித்தபடியே.. உங்களுக்கு எரிச்சல் என்பார்.  சரி, கலியாணத்தை முடிச்சு 2-3 வருடத்தின் பின் பதில் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். தம்பி எங்கு வருவார் என்று எனக்கு மிக நன்றாகவே தெரியும்.

மது, மாது, புகைத்தல், அலட்டல், புறம்பேசல் என்று எதுவுமில்லாத மனிதர். சிறு குழந்தைகள் அவருடன் மிக மிக இலகுவில் ஒட்டிக் கொண்டனர். மிகவும் இளகிய மனம் கொண்டவர். என்னிடத்தில் மட்டும் தனது ரகசியங்களையும், பரம ரகசியங்களையும் பகிர்ந்து கொள்வார்.  கேலியும், நக்கலும் அவருக்கு கைவந்த கலையாக இருந்தது. பெரிதாய்ச் சிரிப்பார், நகைச்சுவையுணர்வு மிக்கவர். மொத்தத்தில் மிக அருமையான மனிதர்.

நான் வீடு மாறி புதிய வீடு ஒன்றில் வாழ்திருந்த நாட்களில், எதிர்காலக் கனவுகளுடன் எதிர்கால மனைவியுடன்  தன்னை மறந்து, தொலைபேசியில் பேசித்திரிந்த காலங்களில் அவருடன் பகையான அவரின் நோர்வே வாழ் உறவினர்கள் இவருக்குத் தெரியாமலே இவர் நோர்வேக்கு வந்த விடயம் பற்றியும், விசா பெற்றுக்கொண்டது பற்றிய பல இரகசிய தகவல்களை போலீசாரிடம் அறிவிக்க அவர்கள் இவரை மிக இரகசியமாக அவதானித்து, இவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து விசாவை ரத்துப் பண்ணி, சிறைக்கு அனுப்பினர். விரைவில் நாட்டை விட்டு வெளியேறு என்றும் கட்டளை வந்தது.

மேற் கூறியது நடந்து சில வாரங்களின் பின் அவரின்  எதிர்கால மனைவி மிகவும் சுகயீனமாயிருந்து உயிருடன் போராடி தற்போது தேறிவருகிறார் என அறியக்கிடைத்தது. அது பற்றி தொலைபேசியில் கதைக்கும் போது மிகவும் உடைந்து போய் இருந்தார். எதைச் சொல்லியும் அவரை மனதின் ரணங்களை முடியவில்லை.

நேற்று முன்தினம் அவரிடம் இருந்து தொலைபேசி ஒரு அழைப்பு வந்தது. மிகவும் ‌உடைந்து போயிருந்தார்.  என்னய்யா? என்றேன். அண்ணண் ஊருக்கு போகப் போறன் என்றார். அது சம்பந்தமாக சில உதவிகளைக் கேட்டார் செய்து கொடுத்தேன். இன்னும் சில நாட்களில் ஊரில் இருப்பார்.

இலங்கைக்கு வந்தால் தன்னிடம் வரவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். அத்துடன் கலியாண அழைப்பும் எனக்குத் தான் முதலில் கிடைத்திருக்கிறது.

நல்ல மனிதர்களுக்கே சோதனை மேல் சோதனை வருகிறது. ஏன் இப்படி நடக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை.

அந்தத் தம்பி எங்கிருந்தாலும் நன்றாகவே வாழ்வார் என்பதில் எனக்கு துளியேனும் சந்தேகமில்லை. காரணம் அவரின் மனிதம் நிறைந்த அவரின் மனது.


.

2 comments:

  1. நல்ல மனிதர்களுக்கு சோதனைகள் வந்தாலும், தாண்டிச் சாதனை புரியும் சந்தர்ப்பம் தேடி வரும்.

    ReplyDelete
  2. எட்டப்பர் கூட்டம் ஒன்று எப்பொழுதும் எம்மை பின்தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றது. தாங்களே மாறினால் தான் உண்டு. அந்த நண்பர் நிச்சயம் நல்லபடியாகவே வாழ்வார். நாங்களும் அவர் நலமே திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க மனமார வாழ்த்துவோம். எப்போதும் "மனம் போலதான் வாழ்வு"

    ReplyDelete

பின்னூட்டங்கள்