முகமற்ற எதிரி

 சில நாட்களுக்கு முன் ஒரு இன்டர்நெட் கபேயில் கணணிதிருத்திக் கொணடிருக்கும் போது ”உதவி செய்யமுடியுமா” என கேட்டபடியே அறிமுகமாகிய ஒரு ஈரான் நாட்டுப் பெண்ணின் பரிதாபமான கதைதான் இது.

நான் இருந்த அவசரத்திலும் அப் பெண்ணின் அரைகுறை நோர்வேஐிய மொழியினாலும் அவளின் அவசரத்தை பிழையாகப் புரிந்து கொண்டேன் அன்று. ஆகையால் நாளை பகல் தொலைபேசு என்று சொல்லி எனது வேலையைத் தொடர்ந்தேன். அவளின் தயவு செய்து ”உதவிசெய்” என்பது கூட எனது அவசரஉலகத்தில் அடிபட்டுப்போனது. அதை மறந்தும் போனேன் அடுத்துவந்த நிமிடங்களில்.

அடுத்தநாள் பகல் தொலேபேசியில் ”நான்தான் நேற்று உதவிகேட்டவள்” என்று அறிமுகமானாள் மீண்டும், அதே பெண்.  அப்பொழுதும் எனது அவசரத்தில் அடிபட்டுப்போனது அவள் அவசரம். நாளை மதியம் பார்ப்போம் என்றேன். தயவுசெய்து உதவிசெய் என்றாள் மீண்டும், கெஞ்சும் குரலில். அவள் குரலின் உருக்கமும், சோகமும் என்னை  ஏதோ செய்ய நாளை கட்டாயம் வருகிறேன் என்றேன்.

அடுத்தநாள் குறிப்பிட்ட நேரத்திற்கு அதே இன்டர்நெட் கபேயில் சந்தித்தோம். அப்போது தான் அவளை நன்றாகக் கவனித்தேன். வயது 40க்கு அதிகமாயிருக்கும். பாரசீகத்து பெண்களுக்குரிய நிறத்துடன் பார்த்தால் தைரியசாலியான பெண் போலத் தெரிந்தாள். ஆனால் கண்களில் ஏதோவொரு பதட்டம் தெரிந்தது.

என்ன உதவி வேண்டும் என்றேன். சொன்னாள் இப்படி:
தன்னைப்பற்றியும் தனது குழந்தைகளைப் பற்றியும் youtube இல் ஒருவன் தாறுமாறாக வீடியோ செய்தி எழுதியிருப்பதாகவும், அதை தனது கணவரோ அல்லது குடும்பத்தாரோ பார்க்க முதல் அழிக்கவேண்டும் என்றும்.

எனக்கு மெதுவாய் புரியத் தொடங்கியது அவளின் பதட்டத்துக்கான காரணம். ‌அவள் ஈரான் நாட்டு chat room ஒன்றில் தனது கருத்துக்களை பயமின்றி பகிர்ந்திருக்கிறாள். சில வேளைகளில் சிலருடன் உரையாடியுமிருக்கிறாள். அந்தச் சிலரில் யாரோ ஒருவர் இவளுடைய நட்புவட்டத்தில்லிருந்திருக்கிறான். அவன் மூலமாக நோர்வேயில் உள்ள இவளைப்பற்றிய தகவல்கள், ஈரானிலுள்ள அவளின் குடும்பத்தாரின் விபரங்கள் இவளின் கருத்துக்களை ஜீரணிக்கமுடியாதவர்களுடம் போயிருக்கிறது, அவர்கள் வீடியோவை வெளியிட்டு இவளை மிரட்ட, இவள் அதை அழிக்க என்னிடம் வந்திருக்கிறாள்.

நீ நினைப்பது போல் இலகுவான காரியமில்லை அது என்று விளக்கிக் கூறினேன். இதை அழிப்பதாயின் நீ அதற்கு விண்ணப்பிக்கவேண்டும் என்றும். அதை பரிசீலீப்பவர்கள் அது உனது சுயஉரிமையை மீறுவதாக இருந்தால் அதை அகற்றுவார்கள் என்றும், அதற்கு பல மாதங்கலாகலாம் என்றும், சில வேளைகளில் இந்த வீடியோவை பிரதியெடுத்து வேறு தளங்களில் வெளியிட்டிருக்கவும் சந்தர்ப்பம்  உண்டு என்றும் சொன்னேன்.

தலையில் கைவைத்து தனது மொழியில் ஏதோ அரற்றியபடியிருந்தாள். சற்று அமைதியானபின் அவளுக்கென்று youtube இல் பயனர் கணக்கு தொடங்கி, அந்த வீடியோ இவளின் சுய உரிமையை மீறுகிறது என விளக்கமாக எழுதி, இந்த வீடியோவை அகற்றுமாறு இருவிதமான விண்ணப்பங்கள் அனுப்பினோம்.

நாளை பதில் வருமா? என்று சிறுபிள்ளையாய் மாறி கேட்ட போது பரிதாபமாயிருந்தது, எனக்கு. அவ்வளவு இலகுவல்ல இது என்றேன் மீண்டும். இயலாமையின் வேதனை தெரிந்தது அவளின் முகத்தில்.

தன்னால் குடும்பமானத்திற்கு பங்கம் வந்திருப்பதாக கணவனும், குடும்பத்தாரும் நினைப்பார்கள் என்றும் அதன் பாரதூரம் தன் வா‌ழ்வையும் தனது குழந்தைகளின் வாழ்வையும் பாதிக்கும் என்றும், தான் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுவிடவும் சந்தர்ப்பம் உண்டு என்றும் சொன்னாள்.

உள்ளூர் போலிசுக்கு போய் விபரத்தைச் சொல்லி உதவி கேள் என்றும் சொல்லி, என்னால் முடிந்தது இது தான் என்றும் சொன்னேன்

நீ எனது சகோதரன் என்று சொல்லி விடைபெற்றுப் போனார்.
அவர் நடையில் அவர் மனதின் பாரம் தெரிந்தது.

விதி வலியது.

வழமைபோல் ”இன்றைய நாளும் நல்லதே” என்று என்னால் இன்று எழுத முடியவில்லை.

.

1 comment:

  1. அருமையான பதிவுங்க.... பாவம் இப்படித்தான் பலர் எளிதாக அயோக்கியர்களின் வலையில் விழுந்து விடுகிறார்கள்.......

    ReplyDelete

பின்னூட்டங்கள்