பொறுமை கற்றவர்கள்


நேற்றுக் காலை கணணிதிருத்த வேலையாய் ஓஸ்லோ புறநகர்ப்பபகுதியொன்றிற்கு செல்லவேண்டியிருந்தது.  நிலக்கிழ்சுரங்கரயில் எடுத்து போய் இறங்கி வேலைசெய்ய வேண்டிய இடத்தை நோக்கி நடக்கலானேன்.

எனக்கு முன்னே ஒரு நாற் சந்தி. அதனூடாக செல்லும் போக்குவரத்தை ஒழுங்கமைக்க அமைக்கப்பட்டிருந்த சமிக்ஞை விளக்குகள் தம்மிஸ்டத்துக்கு ஒரு பகுதி வாகனங்களை நிறுத்தி, மற்றவையை அனுப்பும் போது இன்னொரு பகுதியில் பாதையை கடப்பதற்கு நின்ற மக்களையும் அனுப்பிக்கொண்டிருந்தது. சமிக்ஞை விளக்கின் சமிக்ஞைகளை மதிக்காத சிலர் சிவப்பு நிறம் காட்டிக்கொண்டிருந்தபோதும் வீதியை கடந்தனர்.

இந்த பரப்பான சந்திக்கருகில் அமர்ந்திருந்தாள் அவள். பலமுறை கண்டிருக்கிறேன் இவளின் இனத்தவர்களை. ரொம்மானி இனத்தைச்சேர்ந்த நாடோடிகள் இவர்கள். பிச்சையெடுப்பதே அவர்களின் தொழில் போலத் தெரியுமளவுக்கு பிச்சையெடுக்கிறார்கள். உள்ரளூர்பத்திரிகைகளில் இவர்களின் ”கெட்டித்தனங்கள்” பற்றியும் வாசித்திருக்கிறேன்.

காற்றில் கலந்திருந்த குளிரைத் தடுக்க ஒரு மெல்லிய கம்பளி போர்வையுடன், முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கையில் இருந்த கோப்பி கப் ஒன்றை குலுக்கிக் கொண்டிருந்தாள். குலுக்கிய அந்த கோப்பிகப்பினுள் மிகப் பரிதாபமான அளவு சில்லறையே தெரிந்தது. என்னைக் கண்டதும் பரிதாபமாய் புன்னகைத்து, ஏதோ சொல்லியபடி, கையை உயர்த்தி கோப்பிக் கப்பை குலுக்கினாள். நான் கடந்து போனேன் அவளைக் கவனிக்காமலே. எனக்கு பின்னால் சில்லறை குலுங்கும் சத்தம் கேட்டது.

மதியம் சாப்பிடப்போகும் போகும் போதும் அவளை கடக்க நேரிட்டது. வெக்கப்படாமல், என் கண்களை அவளின் கண்களுடன் கலக்கவிட்டேன். ஏன் நீ பிச்சையெடுக்கிறாய் என்று கேட்டுக் கொண்டிருந்தது எனது கண்கள். அவளோ அதற்கான பதிலை தனது கையை உயர்த்தி, கோப்பிக் கப்பை குலுக்கிக் காட்டினாள்.

சாப்பிட்டு திரும்பி வந்த போதும் அதே இடத்தில், அதே மாதிரி, அதே கோப்பிக்கப்ஐ குலுக்கிக் கொண்டிருந்தாள்.  இப்பவும் அவளின் கோப்பிக்கப்பினுள் காலையில் இருந்தளவு பணமே இருந்தது. என்னென்று இந்த வருமானத்தில் வாழ்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன்.

இரவு 11 மணிக்கு மீண்டும் அந்த சந்தியைக் கடக்கிறேன், என்னை நோக்கி புன்னகைத்து அதே கோப்பிக்கப்ஐ குலுக்கிக் கொண்டிருந்தாள்.  இப்பவும் அவளின் கோப்பிக்கப்பினுள் காலையில் இருந்தளவு பணமே இருந்தது.

காலை 10மணியில் இருந்து இரவு 11 மணிவரை 13 மணிநேரங்கள் ஒரே இடத்தில் குந்தியிருந்து,  கோப்பிக்கப்ஐ குலுக்கி உழைக்கும் இவர்களின் பொறுமை பற்றி யோசித்தது மனது. மிகச் சிறந்த பொறுமைசாலிகளாக இருக்கவேண்டும் இவர்கள்.

உனக்கு நல்ல சம்பளம் தருகிறேன் ஒரே இடத்தில் நில் என்றாலும் நான் நிற்கமாட்டேன். நம்மளின் பொறுமை அப்படிப்பட்ட பெருந்தன்மை கொண்டது. வேலையில்லாமல் ஒரு இடத்தில் நிற்பது ‌என்பது இலகுவான விடயமல்ல.

ஆனால் இவர்களோ வெய்யிலோ, மழையோ,  பனியோ, குளிரோ பற்றி கவலைப்படுவதில்லை. கடமையில் கண்ணாயிருக்கிறார்கள். பாராட்டப்படவேண்டியவர்கள்.

வேலைக்குப்போகாத இவர்களிடம் வேலைக்குப்போகும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது ஏதோ இருக்கிறது போலிருக்கிறது எனக்கு. உங்களுக்குமா?


.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்