புத்தகமாய் நினைத்துப் பார்க்கிறேன் என்னை


சற்றே பழசு தான்
இருப்பினும்

அன்பாய் படித்து
நெஞ்சோடு அணைத்து முத்தம்தரும் இரு இளவரசிகளும்
தென்றலாய் தொட்டுப் பேசிப் போகும் நட்புகளும்

அலுக்காத புத்தகம் என்று பதிப்பத்தாரும்

மிதிபடும் போதெல்லாம் தூக்கி கவனமாய் வைக்கும்
பனிவிளை பூமி நண்பர்களும்

பால்யத்தில் தொலைத்து
தற்போதும் தேடுபவர்களும்

கடந்து போகும் போது
புத்தகத்தின் அட்டையை
கடைக்கண்ணால் பார்ப்பவர்களும்

வாங்கிப் படித்தவர்களும்
விற்றுப் பிழைத்தவர்களும்
விலைபேசிவிட்டுப் போனவர்களும்
கையில் தூக்கிப் பார்ப்பவர்களும்
தூக்கி வீசுபவர்களும்
ஓரிரு பக்கங்கள் புரட்டுபவர்களும்

இது ”முடிந்து” தொலையாதா என ஏங்குபவர்களும்

படித்த பின் பரணில் தூக்கிப்போடுபவர்களும்
அல்லது கிழித்து கடலை சுற்றுபவர்களும்
அதையும் தாண்டி
அலுத்து விலை பேசுபவர்களும்
இது சகதி என்ருரைத்து
தம்மைச் சுத்தமாக்கிக் கொள்பவர்களும்
கிழித்து குண்டி துடைப்பவர்களும்

ஆகா! வாசிப்பதில் தான் எத்தனை வகை

என் தலையும், உடலும்
ஏனைய பாகங்களும்
சிதைக்கப்பட்டு, கிழித்தெறியப்பட்டிக்கலாம்
இனி மேலும்
சிதைக்கப்படலாம்

ஆனாலும்
உங்கள் வாசிப்பின் புண்ணியத்தில்
கனமான புத்தகமாக
நான்

நன்றும் தீதும்
இங்குமுண்டு
எங்குமுண்டு
... ... ...

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்