மே 22. 2010உம் கவிதாவின் கவிதைகளும்

மே 22. 2010 நேரம் 23:50
இடம்: ஒஸ்லோ அவசர நோயாளர் வைத்தியசாலை (Olso legevakt)

இன்றைய
நாள் நல்லாகத் தான் விடிந்தது மலர்ந்தது. மாலை வரை பிரச்சனையேஇல்லாமல் சிவனே என்று போய்க் கொண்டிருந்தது.
அதிசயமாய் கொம்பியூட்டர் திருத்தச் சொல்லி எனது கம்பனிக்கு ஆடர்வரமலிருந்தது இன்று.
முன் மதியம் நட்பு ஒன்றுடன் குறொன்லான்ட் என்றும் புறநகர்ப் பகுதிக்கு போய்வந்தேன்.
மதியம் ப்ளாக் இல் எழுதினேன்.
மாலை காவிதாயினி கவிதாவிடம் இருந்து இரண்டு புத்தகங்கள் வாங்கிக் (காசுகொடுக்காமல்) கொண்டு (தொட்டில் பூ, என் ஏதேன் தோட்டம்) வீடு வந்தேன்.
நடந்து வீடு வரும் வழியிலேயே கவிதாவின்என் ஏதேன் தோட்டத்தின்அரைவாசியை கடந்திருந்தேன்.

வீட்டு
வந்து ப்ளாக்கில் எழுதியதை பிரசுரித்துவிட்டு ஆறுதாய் ன் ஏதேன்தோட்டம் வாசித்துக் கொண்டிருந்த போது சற்றே இடது கை வலித்து, வர வர கைபாரமாகியது, கையுக்குள் ஏதொ மின்சாரம் ஓடுவது போல் இருந்தது. திடீர் எனமரடைப்பால் போய்ச்சேர்ந்த அப்பா ஞாபகத்தில் வந்தார். அவருடன் எனதுகொலஸ்ரோல் லெவலும் சேர்ந்துகொள்ள மனதுக்குள் இனம் புரியாதபயமொன்று சூழ்ந்து கொண்டது. (மரணபயமோ?)

சற்று
நிதானித்து போசித்தேன். யோசனையின் ஆலோசனையின் படி 113 க்குதொலைபேசினேன்.
பூராயம் வசாரித்தவள் சொன்னாள் நீ அவசர வைத்திய பிரிவுக்கு உடனே போஎன்றும், என்னை வாகனமோட வேண்டாம் என்றும்.
நட்பை அழைத்தேன்.
10 நிமிடம் கேட்டான்.
கொடுத்தேன்
அதற்கிடையில் வீட்டு வாசலி்ல் அம்பியூலன்ஸ் வந்து நின்றது.

மஞ்சல்
உடுப்பு போட்ட மனிதர் இருவர் வந்தனர். ஏதோவெல்லாம் கேட்டனர்.
நெஞ்சு மயிர் மளித்து
எதையோ ஒட்டி
வயர் பொருத்தி
எதையோ பார்த்து
திருப்தியாய் இருக்கிறதென்றனர்.

ஆனால்
இதயத்துடிப்பு மட்டும் குறைவாக இருக்கிறது என்பதால்
அத்துடன் உன் தந்தை மாரடைப்பால் இறந்தவராகையால் உன்னை மேலதிகமாகபரிசோதிக்க வேண்டுமெனவும், அவசர நோயாளர் பிரிவுக்கு போகும் படியும்கட்டளையிட்டனர்.
நட்புடன் அவசரநோயாளர் பிரிவு வந்து சேர்ந்தேன்
(கொம்பியூட்டரும், கவிதாவின் இரு புத்தகங்களும் என்னுடன் வந்தன)

இங்கும்
அதே பரிசோதனைகள்.. காத்திருப்புக்கள்
கவிதாவின் என் ஏதேன் தோட்டம் முடிந்து விட்டது. மற்ற புத்தகத்திலும் அரைதூரம் கடந்துவிட்டேன்.

நாளை
ஏதோ பரிசோதனை செய்ய வேண்டுமாம் வைத்தியசாலையில் தங்குஎன்று உத்தரவிடப்பட்டிருக்கிறேன்.

இன்றைய
நாள் நல்லதா கெட்டதா?

எது
எப்படியோ கவிதாவின் புத்தகங்கள் பல நாட்களின் பின் வாசிப்பின் ருசியைமீட்டுத் தந்திருக்கின்றன.

நான் என்றும் கவிதைகளை சிறு சிறுவாய் பிரித்து.. அதனூடே வரும் வார்த்தைகளை, வசனங்களை ரசிப்பவன். அதனாலோ என்னவோ ஒரு கவிதைக்குள் எனக்கு பல கவிதைகள் கிடைக்கின்றன. அதுவும் பற்பல அர்த்தங்களில்

அவரின்
புத்தகத்தில் இருந்து ரசித்த, சிந்திக்கத் தூண்டிய பகுதிகளை உங்களுடன்பகிர விரும்புகிறேன்.

முக்கியமாக இரு பகுதிகள் என்னைக் கவர்ந்தன. எனக்கும் அவை பொருந்தும்போல் இருப்பாதாலோ என்னவோ....தெரியவில்லை

முதவாவது

””காலம்கடந்த பயணம்” என்றும் கவிதையை இப்படி முடித்திருக்கிறார்:

என் வா‌ழ்க்கைத்தாள்

விரிந்து கிடக்கிறது
நான் கவிதை எழுத

தள்ளி நில்
நான் போகவேண்டும்

அவர் எதையும் தாண்டிப் போய் சுவாசம் நிரப்ப சிந்திக்கும் விவேகமும் அதைச்சொன்ன அழகும் அலாதி.

இரண்டாவது
”பெண்மை விலங்கில்” என்னும் கவிதையில்

மரபுகளை முறித்துக்கொண்டு
மனிதனாக இருக்கச் சொல்கிறது
எனது சுயம்

மற்றவர்களுக்கு இந்த வார்த்தைகள் பொருந்துகிறதோ இல்லையோ, எனக்கு சற்றும் பிசகாமல் பொருந்துகிறது. (”பெண்மை விலங்கில்” என்னும் கவிதையின் ஒரு பகுதி ஒரு ஆணுக்கும் பொருந்துகிறது..... சிரிப்பாயிருக்கிறது.. ஆனால் முற்றிலும் உண்மை)


”பதில் நீ தான் சொல்ல வேண்டும்” என்றும் கவிதையில் வாழ்வியலின் தத்துவம் பற்றி அவர் சொன்ன விதம் பலரின் முகத்திரையை கிழித்திருக்கலாம். என்னுடையதையும் கூட..

இப்போது நான்
கங்கை தான்
நீ நீந்தலாம் என்னோடு

காலப்போக்கில்
வற்றிவிடும் நதியாக
சுடு மணலில்
நீ நடக்க வேண்டி வரலாம்

உ ன் கால்களில் கொப்புளங்களும்
மனதில் ரணங்களும்
வராலாம்

கவிதா: எப்போ மற்றய மனிதர்களின் மனதை வாசிக்கப் பழகினீர்கள்.... வாழ்த்துக்கள்.

அதே கவிதையில் இன்னொருடத்தில்

என் பருவத்தின்
உடல் சுகமென்றாய்
காலத்தின் மாற்றத்தால்
என் சுருக்கம் இழைந்த
முகத்தை உன் கைகளில்
ஊந்திக் கொள்ள நீ
தயாரா

என்று கேட்கிறார். பதிலை நாம் எங்களையே கேட்டுக் கொள்வோம்.

மூலைகள் என்னும் கவிதையில்

எல்லாமே என்னுடையவை தான்
என் சுய வாழ்வு
தவிர

என்னை நினைத்து இந்த கவிதையை எழுதினாரோ என்னவோ... அல்லது இது எல்லோரினதும் சுயமோ?
யாமறியோம் பராபரமே!

அருகாமை என்னும் கவிதையில்

காதல் வித்தெடுத்து தூவிய
என் உயிர் நிலத்தில்
முளைத்ததெல்லாம் நீ

என்று வாசித்தபோது போது எனது முதற் காதல் ஞாபகத்தில் வந்து போனது. 13க்கும் 45 க்கும் அப்பப்பா எத்தனை தூரம்... :-)

மொழி என்னும் கவிதையின் கீழ்வரும் பகுதியை பார்த்த போது வாழ்வு ஞாபகம் வந்தது

உனது மொழிகளுக்கு நான்
வேறு அர்த்தங்களைத்
தீட்டிக்கொண்டேன்
எனது மொழிக்கு நீ
செவி கொடுப்பதையே மறந்தாய்
நான் உன்னுடன்
மொழிவதையே துறந்தேன்

இதை நான் அனுபவிக்கவில்லை என்று யாரும் சொன்னால்
அது பச்சைப் பொய்

முடுச்சுகள் என்னும் கவிதையில்

நீ எறிந்த
வார்த்தைக்கயிறுகளும்
மயான அமைதியும்
அறுந்து கிடக்கிறது
எம்மைச்சுற்றி

இதையும் நான் அனுபவிக்கவில்லை என்று யாரும் சொன்னால்
அது முன்பு சொன்னதை விட பெரிய பொய்

வலியும் புன்னகைக்கும் என்னும் கவிதையில்
வாழ்வின் வலி பற்றி கூறுகையில்

காதல் தோற்பதில்லை என்று
எனக்குத் தெரியும்
காதலர்கள் தோற்றுப்போவதுண்டுதானே

என்று சொல்கிறார்.
அது உண்மைதானே?

கடவுள் வந்தார் என்னும் கவிதையில் கடவுளுக்கு சவால் விடுவது போன்று
ஞானமற்ற அரசியல்வாதிகளை சாடும் விதம் அலாதியானது (எனக்கு அப்படித் தான் தோன்றியது)

பூ உதிர வேண்டும்!
பீரங்கிகளில்

தென்றல் புறப்பட வேண்டும்
துப்பாக்கிகளில்

ஒன்றாகுதல் வேண்டும்
இனமும் மொழியும்

என்பது என்னைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளுக்கு விடப்பட்ட சவால்.

எது கவிதையில் கொஞ்சம் அதிகமாகவே காதல்வயப்படுகிறார் இப்படி

கவிதைக்கு
மொழி தேவையென்று
எவன் சொன்னான்
அடி முட்டாள்
உன் விழி பாராத
கவிஞன்

அதே கவிதையில் மேலும் இப்படி தேவைக்கு அதிகமாகவே வழிகிறார்

நீ அழைத்ததும்
தொலைபேசி கூட
கவிதை பேசும் அதிசயம்
யாரும் கண்டதில்லை

முடிவென்ன என்னும் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. யுத்தம் பற்றியது அது.
அது பற்றி நான் இங்கு எழுதவில்லை புத்தகத்தை வாங்கிப் படித்துப் பாருங்கள்.
அதன் சோகமும் வேதனையும் அத்துடன் அதில் கலந்திருக்கும் நக்கலும் புரியும்.

நீளமான இரவுகளில் ஒரு பந்தி இப்படி சொல்கிறது

அழகான மழை வெளியே
அற்புதமாயிருக்கிறது மண்வாசனை.

அருமையான, யதார்த்தமான வார்த்தைகள்
மூக்கில் மண்ணின் வாசனை உணர்ந்தேன்.

இறை மீட்பில் மீண்டும் வழிகிறார் காதலனிடம் இப்பூடீ

யாசகனாய் நான் இருப்பதில்

ஆட்சேபனை எனக்கில்லை
கர்ணனாக நீ இருந்தாலும்
கொடுப்பதெல்லாம் எனக்கென்றால்

கவிதா.. திஸ் இஸ் டு மச்

கறுப்பு தேசத்தில் உண்மை அரசியல் ‌புரியவைக்கிறார் எமக்கு இப்படி

எரிந்து கொண்டிருக்கும்
என் ‌தேசத்திற்கு
நீர் கொடுப்பதாய் சொல்லி
எண்ணைய் ஊற்றியவர்கள் தாம்
அதிகம்

கடைசிக் கவிதையில் ”மரணப்படுக்கையில் இருந்து ஒரு கடிதம்”
அது எழுதப்பட்ட திகதி மார்கழி 31. 2010.

பண்பட்ட செம்மண்
கண்ணி வெடிகள் விதைத்து
விருட்சங்கள் வளர்ந்து
தூங்கும் விழுதுகள்
பாசக்கயிறுகளாகிப் போய்
பிணக்குவியல் செய்கிறது

இன்றைய
குருதி படிந்த செம்மண்
கவ்வி நிற்கிறது
வீரச்சாவென்று சொல்லி
நாளைய உலகத்தை

தை விட
அதே கவிதையில்

கருங்கழலையும், சுடுங்குழல்களையும்
ஈட்டி வாள்களுடன்
புராதனப் பொருட்கள் காப்பகத்தில்
சேர்க்க ஆணையிடு என்கிறார்.

எனக்கு
நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
என்னும் பாட்டு
ஞாபகத்தில் வந்துபோனது

ஆடுகளம் என்னும் கவிதையினை முழுவதுமாக இங்கு பதிகிறேன்
எனது
இரண்டு இளவரசிகளும்
அதைப்
பயின்று பட்டம் பெறட்டுமென்று

சாண்டில்யன் கதை நாயகியாக
வெள்ளைக்குதிரை நாயகனிடம்
பறிகொடுக்கும் கன்னியாக
சீதையாக கண்ணகியாக
இதிகாசங்களின் நாயகியாக
நினைத்துப் பார்த்திருக்கிறேன் என்னை

பாவம் என்று விட்டுவிடுவேன்
ராமனும் கோவலனும்

இவர்கள்
என்னிடம் மாட்டியிருந்தால்
புராணங்கள் மாறியிருக்கும்

நீ நினைக்கிறாயா
நான் பதுமையென்று

புதுமையும் பதுமையும்
எம் விரல் நுனியில்தான்
எந்த விரல் நீட்டுவதென்று
நானே தீர்மானிக்கிறேன்

நானி ஆடவும்
நாண் ஏற்றவும் கூட
என் சுற்றுவிரல் போதும்
சுடுகுழல் தூக்குவதுக்கும் கூட
செக்குமாடாய் பின் முற்றத்தில்
போட்ட வட்டுங்கள் எல்லாம்
இன்று நாம் கடந்து வந்த
பாதைகளாகவும்
சில கவிதைகளின் காரணங்களாகவும்
மாறிப் போனபின்
அறுத்தெறிய ஒன்றுமில்லை என்னிடம்
ஒற்றைக் கயிற்றைத் தவிர
அதன் அவசியம் கூட எனக்கில்லை

நான் பெண்
ஆணை விரும்புபவள்
நீயும் விரும்பு
இன்னும் ஏதும் அறியாதவள் என்று
நினைத்தால்
விதியிடம் இனி உன்னைக்
காக்கப் பழகு

வலியாம்
பெண் மொழியாம் என்று
உன் உதடு வளைத்து
என்னை அஃறினையாக
நீ பார்த்தாலும்
ஆன் பெண் என்ற ஆடுகளத்தில்
மனு என்றே பார்க்கிறேன்
நான் உன்னையும் என்னையும்

முக்காடு போட்டு
என் முகம் தொலைத்த நான்
போனது போகட்டும்
என கவிதைகளும் முகவரியாகட்டும்

யாரும் தூக்கிப்போட
”ஓருநாள்” தினம் ஏந்தும்
பிச்சைக்காரியில்லை நான்
நேற்றும் நொடிப்பொழுதும்
எதிர்காலங்களும் ஆளத்தெரிந்த
கொற்றவைக் குமரி

எதற்கு பின்னம் முன்னும்
இழுபாடு
என் தோளோடு நட

நாலு பேர்கள்
நாலுவிதமாய் பேசுவார்கள்
உதவாத மினிதர்களுக்காக
அடங்கிப் பார்க்கவோ
எனது நேரங்களுக்கு இனி
நேரமில்லை

பாரதி பெண் நானில்லை
படைத்த பிரம்மனும் கூட
வரையறுக்க முடியா என்னை
சிந்தனை உளிகொண்டு
அறிவு விரல்களினால்
என் விளியின் ஒளியில்
என்னை நானே செதுக்கி
நிமிர்ந்து நிற்கும்
எனது பார்வையில் பெண்
நான்
.........................

இப்படி இன்னும் கனக்க எழுதலாம்..


அருமையான‌தோர் புத்தகம் வாசித்த திருப்தியில் தூங்க முற்படுகிறேன்.
நேரம் சாமம் 3 மணி என்கிறது.
இரத்தமெடுக்க வேண்டும் என்கிறாள் வெள்ளையுடுத்திய தாதி.
கையை நீட்டுகிறேன்.
குத்தி......... குப்பி குப்பியாய் எடுத்துப் போகிறாள் அந்த மோகினிப் பிசாசு

தூங்க முயற்சிக்கிறேன்


ஆஸ்பத்திரியில் எனக்கு பக்கத்தில்
இருப்பவர் நித்திரையில், சற்று சத்தம் சேர்த்து, பின்புறமாக காற்றில் வெடி வைத்து இம்சைபண்ணுகிறார்......
கந்தா கடம்பா காப்பாத்துடா என்னை.

புத்தகங்கள் தந்தமைக்கு நன்றி கவிதா.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்