யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா?

என்னை பரவசப்படுத்திதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.  அந் நாட்களில்  நான் ஒஸ்லோவிலுள்ளு ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும்  தொழில் செய்துகொண்டிருந்தேன்.

அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து  உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன்.

மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும்,  நான் யார் யாரை ‌எழுப்பி பராமரிக்க வேண்டும் என்ற அட்டவணையைத் தந்தார்.
எனது வேலையைத் தொடங்கினேன்.

முதவாமவரைத் துயிலெழுப்பி, பராமரித்து விட்டு இரண்டாவது நபரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்தது.

நான் சற்று இந்த இரண்டாம் நபரைப்பற்றி இவ்விடத்தில் கூறவேண்டும்.

85 - 90 வயதிருக்கும், அன்பான பெண்..கண்பார்வை  மிகவும் மங்கலாகிவிட்டது. என்னுடன் நன்றாகவே பழகுவார்.  தன்னருகே எப்போதும் இயேசு இருப்பது போல் நினைத்தபடியே உரையாடிக்கொண்டிருப்பார், அவர்.

மிகவும் குசும்புபிடித்தவர். ஒரு நாள் அவருக்கு நான் உடைமாற்றிக்கொண்டிருந்த போது, நீ என்ன நினைக்கிறாய் என்று நான் சொல்லவா என்றார். நானும் சிரித்தபடியே சரி கூறுங்கள் என்றேன். அவர் இப்படிக் கூறினார்: ”இந்தக் கிழவி ஒரு இளம் பெண்ணாக இருந்து அவளுக்கு நான் உடைமாற்றினால்  எப்படியிருக்கும்” என்று தானே நினைக்கிறாய் என்றார்.இல்லை, இல்லை என்று அசட்டுச்சிரிப்பு சரித்தபடியே  அன்று அவரிடம் இருந்து தப்பினேன்.

அன்றைய நாளின் பின் இவரிடம் வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயும் இருந்தேன்.

அவரின் அறைக் கதவினைத் தட்டிப்பார்த்தேன். பதில் இல்லை. மெதுவாய் அறையைத் திறந்து அவரின் அறைக்குள் சென்றேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். எனவே வெளியே சென்று வேறு ஒருவரைப் பாராமரித்துவிட்டுத் திரும்ப வந்தேன்.

இனி இந்தக் கதை நடைபெறும் சூழலை நான் சற்றே விபரிக்கவேண்டும். அப்போது தான் இந்தக் கதையின் முக்கியமான பகுதி உங்களுக்குப் புரியும்.

எனது காற்சட்டையும், மேற்சட்டையும் வெள்ளை. அந்த வெள்ளைக்கு நேரெதிரானது எனது நிறம்.

அந்த முதியவரின் அறையின் ஜன்னலின் ஊடாக கண்ணைக் கூசவைக்கும் வெய்யில் எறித்துக்கொண்டிருக்கிறது.

நான் ஜன்னல் திரைச்சீலையை இரு பக்கங்களுக்கும் இழுத்துவிட்டு அவரை நோக்கிச் செல்வதற்காகத் திரும்பும் போது வெய்யில் என் முதுகுப்பக்கமாக எறித்துக்கொண்டிருக்கிறது.

ஜன்னல் கண்ணாடியில் ‌சூரிய வெளிச்சம் தெறித்து, அறைக்குள் ஒருவித வௌ்ளை நிறக் கதிர்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன.

இப்போது நான் அவரை நோக்கித் திரும்பி நிற்கிறேன்.

இப்போது உங்கள் கற்பனைக் குதிரையை சற்றுத் தட்டிவிடுங்கள்.

என்னை நினையுங்கள். நான் வெள்ளை உடையுடன் நிற்கிறேன். எனக்குப் பின்புறத்தில் இருந்து ஒளிக்கதிர்கள் ஒளிர்கின்றன. முகத்தில் எத்தனை சூரியன்களின் ஒளி பாய்ந்தாலும் கறுப்பாகவே இருக்கும்படியான நிறத்தில் நான். எனவே நான் யார் என்று அந்து முதியவருக்குத் தெரிவதற்கு சற்தப்பம் இல்லை. அத்தோடு அவருக்கு இரண்டடிக்கு அப்பால் என்ன நடந்தாலும் தொரியாத அளவில் அவரின் கண்பார்வை மங்கலாகியிருக்கிறது.

அந்த சுரியக்கதிர்களுக்கு நடுவில் தேவதூதர்கள் போல் நான் நிற்கிறேன். அறையினுள் வேறு வெளிச்சங்கள் இல்லை

அப்படியே உங்களின் கற்பனைக் குதிரையை நிறுத்திக்கொள்ளுங்கள்.

அம் முதியவரின்  கட்டிலுக்கு அருகிற்சென்று அவரின்ன் கையைப் பற்றி அவவின் பெயரை சொல்லி அழைக்கிறேன். பதில் இல்லை.. அமைதியாய் சில கணங்கள் நகர்கின்றன

மீண்டும் அவர் கையை மெதுவாய்த் தடவி, மீண்டும் மெதுவாய் அவரின் பெயர் சொல்லி அழைக்கிறேன்.நித்திரையால் எழும்ப முயற்சிக்கிறார்.
மீண்டும், மீண்டும் அவர் கையை மெதுவாய் தடவியபடியே அவர் பெயர் சொல்லி அழைக்கிறேன்.

தூக்கக் கலக்கத்துடன் சற்றே கண்களைச் சுருக்கியபடியே என்னைப்பார்க்கிறார்.

மௌனமாய் சில கணங்கள் கலைகின்றன.

அவரின் சீரான மூச்சின் ஒலி அறையின் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருக்கிறது.

சிறிது நேரத்திற்குப்பின் என்னைப் பார்த்தபடியே கேட்டார்...

”யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்” என்று

எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.... என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின் நம்பிக்கையை கலைக்கவிருப்பாத இயேசுநாதராக நின்றிருந்தேன், நான். என்னையறியாமலே எனது கைகள் அவரின் தலையைத் தடவிக்கொடுத்தது,  கைகளை மெதுவாய் நீவிவிட்டேன்.

அவர் மீண்டும் அப்படியே தூங்கிவிட்டார்.

மெதுவாய் என் கையை விடுவித்துக்கொண்டு வெளியில் வந்தேன். என்னால் அமைதியாய் இருக்க முடியவில்லை. மனதினை ஒரு வித சுகமும், சுமையும் ஆட்கொண்டிருந்தது.

ஏனையவர்கள‌ை பராமரித்த பின் அவரிடம் சென்று அவரைப்பராமரித்தேன். அன்று ஏனைய நாட்களைப் போலல்லாது மகிழ்ச்சியாக இவர் இருக்கிறார்போலிருந்தது எனக்கு.

எப்போது நினைத்தாலும் மனதை இதமாகத்தடவிப்போகும் நிகழ்வு இது.

நான் நினைக்கிறேன், நானோ காகத்தின் நிறமானவன், வெளிச்சமும் முகத்தில் படவில்லை, சூரியகதிரும், வெள்ளை ஆடையும் இந்த பாவியை புனிதராக்கி விட்டதென்று.

இயேசுநாதர் கறுப்பாக இருப்பாரா? என்று நக்கல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது .. ஆமா.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்